காணொளி: இணையத்தில் வைரலாகும் 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' - பின்னணி என்ன?
இளைஞர்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறிய கருத்துகளைத் தொடர்ந்து, 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (Cockroach Janata Party) என்ற சமூக ஊடக பிரசாரம் பெரும் விவாதப் பொருளாக மாறி வைரலாகிறது.
இருப்பினும், நாட்டின் இளைஞர்கள் பற்றிய தமது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியுள்ளார்.
நீதிபதி சூர்யகாந்தின் கருத்துகளைத் தொடர்ந்து, சமூக ஊடகங்களில் நையாண்டிப் பிரசாரத்தை பலரும் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். இந்த விவாதத்தின் மையப்புள்ளியாக 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி' (CJP) உள்ளது.
இந்தப் பெயரில் இணையத்தில் ஓர் இணையதளம் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது.
கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் இணையதளத்தில் அதன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது, அவரது பெயர் அபிஜித் தீப்கே.
இந்த வகையான சமூக ஊடக பிரசாரத்தை அவர் ஏன் தொடங்கினார் என்பது குறித்து அபிஜித் தீப்கே பிபிசிக்கு விரிவான பேட்டியளித்துள்ளார்.
"இத்தகைய சமூக ஊடக பிரசாரம் ஒன்றை முன்னெடுப்பதற்கான யோசனை உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது?" என்ற கேள்விக்கு பதிலளித்த அபிஜித் தீப்கே, "எக்ஸ் வலைதளத்தில் இந்திய தலைமை நீதிபதி சொன்னதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் அவர், நாட்டின் இளைஞர்களை, குறிப்பாக அமைப்பை விமர்சிப்பவர்களையும் தங்கள் கருத்துகளைத் துணிச்சலாக வெளிப்படுத்துபவர்களையும் கரப்பான் பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்டார்" என்று கூறினார்.
"ஒவ்வொருவருக்கும் பேச்சுரிமையையும், கருத்து சுதந்திரத்தையும் வழங்கும் அரசியலமைப்பை பாதுகாப்பதையே கடமையாகக் கொண்ட தலைமை நீதிபதியே இப்படிப் பேசியது மிகவும் அபத்தமான ஒன்றாகத் தோன்றியது. கரப்பான் பூச்சிகளுடனும் ஒட்டுண்ணிகளுடனும் அவர் இளைஞர்களை எப்படி ஒப்பிட முடியும்?"
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



