பிகாரில் பாஜகவைச் சேர்ந்த சாம்ராட் சௌத்ரி முதல்வரானார்

பட மூலாதாரம், ANI
பிகாரின் புதிய முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி பதவியேற்றுக் கொண்டார். அவர் அந்த மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் ஆவார்.
அவருடன், ஜனதா தளம் (ஐக்கிய) கட்சியைச் சேர்ந்த விஜய் குமார் சௌத்ரி மற்றும் விஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர். இந்தப் பதவியேற்பு விழாவில் நிதிஷ் குமாரும் கலந்து கொண்டார்.
பதவியேற்பு விழாவிற்குப் பிறகு ஊடகங்களிடம் பேசிய விஜய் குமார் சௌத்ரி, "நிதிஷ் குமார் என் மீது நம்பிக்கை வைத்தார், அதன் விளைவுதான் இது. எங்களின் புதிய அரசாங்கமும் அவர் பிகாரை வழிநடத்திச் சென்ற அதே பாதையில்தான் பயணிக்கும்," என்று கூறினார்.
விஜேந்திர பிரசாத் யாதவ் பேசுகையில், "நாங்கள் நிதிஷ் குமாரின் பணிகளை முன்னோக்கி எடுத்துச் செல்வோம்," என்றார்.
விழாவில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் ஜித்தன் ராம் மான்ஜி, "புதிய முதலமைச்சர் நியமனத்தால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இன்று நான் என்னவாக இருக்கிறேனோ அதற்குக் காரணம் நிதிஷ் குமார் தான். அவர் 2014-இல் என்னை முதலமைச்சராக்கினார். அவரால் தான் மகா தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சரானார்," என்று கூறினார்.
சாம்ராட் சௌத்ரி முதலமைச்சராவதற்கான வாய்ப்பு நிதிஷ் குமாரின் ராஜினாமாவால் உருவானது. நிதிஷ், சமீபத்தில் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்றார்.

















