இளைஞர்கள் போராட்டம்: மோதி கருத்தும் ராகுல் காந்தியின் விமர்சனமும் - சமீபத்திய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
நீட் தேர்வு "குளறுபடிகளை" சரிசெய்யவும் கல்வியில் சீர்திருத்தங்களை கோரியும் டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் இந்த போராட்டங்களுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினரும் பரவலாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு மத்தியில், நாட்டின் இளைஞர்களின் நலனும் அவர்களின் எதிர்காலமுமே தங்களின் முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை (ஜூலை 23) தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்க விரைவு நீதிமன்றங்களை அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாகப் பிரதமர் கூறினார்.
இதுதொடர்பாக, பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அப்பதிவில், "சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதை உறுதி செய்ய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக அரசு எடுத்து வரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீர்குலைக்கும் எவரும் தப்பவிடப்பட மாட்டார்கள்," என்று பிரதமர் மோதி தெரிவித்தார்.
வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரங்கள் தொடர்பாக மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் பிரதமரின் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது.
ராகுல் காந்தி கூறியது என்ன?

பட மூலாதாரம், Getty Images
பிரதமர் மோதிக்கு பதிலளிக்கும் விதமாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் எக்ஸ் பக்கத்தில், "நமது இளைஞர்களின் எதிர்காலத்துக்கு நீங்கள் தான் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
நமது கல்வி முறை கைப்பற்றப்படுவதையும் சீரழிக்கப்படுவதையும் நீங்கள் அனுமதித்தது மட்டுமல்லாமல், அதை ஊக்குவிக்கவும் செய்துள்ளீர்கள்; அத்துடன், இதற்குப் பொறுப்பான அனைவரையும் நீங்கள் பாதுகாத்துள்ளீர்கள்." என பதிவிட்டுள்ளார்.
மாணவர்களின் கோரிக்கைகள் தெளிவானவை என்று ராகுல் குறிப்பிட்டார்:
1. தர்மேந்திர பிரதானை அப்பதவியிலிருந்து நீக்க வேண்டும்
2. மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
3. மாணவர்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
என அக்கோரிக்கைகளை குறிப்பிட்டார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டத்தில் பேசிய பிரதமர், இளைஞர்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்குமாறு எம்.பி.க்களை வலியுறுத்தினார். வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது?
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் ஜனநாயக வாலிபர் சங்கம் (DYFI) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் செல்லும் ரயிலை திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே மறிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக DYFI மற்றும் அதன் தோழமை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூடியிருந்தனர்.
அப்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்ற போராட்டக்காரர்களை தடுப்புகளை அமைத்து நிறுத்தினர்.
இதனால், காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதமும் லேசான தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
மத்திய அரசு மற்றும் நீட் தேர்வுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் சற்று பதற்றம் ஏற்பட்டது.

பட மூலாதாரம், ANI
டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் எந்தவொரு சமரசமும் இல்லை என்று காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
காக்ரோச் ஜனதா கட்சியின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் கூறுகையில், "நான் இன்று சோனம் வாங்சுக்கிடம் பலமுறை பேசினேன். அவரும் அமைதியைப் பேணவும், இந்தப் போராட்டத்தைச் சரியான முறையில் நடத்தவும் அனைத்துப் போராட்டக்காரர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார். நமது நாட்டில் நடந்த முந்தைய போராட்டங்களின் போது, ஆளுங்கட்சியால் சமூக விரோத சக்திகள் ஊடுருவப்பட்டு, பின்னர் அந்தப் பழி இயக்கத்தின் மீது சுமத்தப்பட்டது. இது நடக்கக் கூடாது" என்று கூறினார்.
மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவின் செய்தியாளர் சந்திப்பு குறித்து அவர் பேசுகையில், "ஜே.பி. நட்டா வெட்கப்பட வேண்டும். மக்கள் இங்கு 30 நாட்களுக்கு மேலாக அமர்ந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் இதில் அரசியல் இருக்கக்கூடாது என்கிறார்கள். தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவில் எந்தவொரு சமரசமும் இல்லை. அவர் பதவி விலக வேண்டும். அதுவரை இந்தப் போராட்டம் தொடரும்" என்றார்.
முன்னதாக, மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா செய்தியாளர் சந்திப்பில் பேசுகையில், இந்த இயக்கத்தை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடுவதாகக் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்துப் பேசிய அவர், "நாங்கள் கலந்துரையாடலுக்குத் தயார். இதுகுறித்து விரிவான கலந்துரையாடல் நடக்கட்டும். இந்த ஆழமான கலந்துரையாடலுக்கு நாடாளுமன்றமே சரியான இடம். குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் என்பதால் நாம் ஒரு உறுதியான கொள்கையைக் கொண்டு வர வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பு மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் பொறுப்பும் கூட" என்றார்.
இன்று டெல்லியில் மூடப்படும் மெட்ரோ நிலையங்களின் பட்டியல்

பட மூலாதாரம், DMRC
வியாழக்கிழமை (ஜூலை 23, 2026) அன்று பல மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் என்று டெல்லி மெட்ரோ தெரிவித்துள்ளது.
டெல்லி மெட்ரோவின் எக்ஸ் தளத்தில் இதுகுறித்த பதிவில், "பின்வரும் மெட்ரோ நிலையங்கள் காலை 7:30 மணி முதல் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். இருப்பினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகிய நிலையங்களில் ரயில் மாறிக் கொள்ளும் வசதிகள் கிடைக்கும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூடப்பட்டிருக்கும் மெட்ரோ நிலையங்கள் பின்வருமாறு:
- லோக் கல்யாண் மார்க்
- ராஜீவ் சவுக்
- படேல் சவுக்
- ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க்
- பரக்கம்ஃபா ரோடு
- சுப்ரீம் கோர்ட்
- சேவா தீர்த்தா
- ஜனபத்
- மண்டி ஹவுஸ்
- சென்ட்ரல் செக்ரடேரியட்
- ஐ.டி.ஓ (ITO)
- டெல்லி கேட்
- இந்திரபிரஸ்தா
- கான் மார்க்கெட்
- ஜோர் பாக்
- சிவாஜி ஸ்டேடியம். இருப்பினும், ராஜீவ் சவுக், மண்டி ஹவுஸ் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியட் ஆகிய நிலையங்களில் ரயில் மாறிக் கொள்ளும் வசதி மட்டுமே கிடைக்கும். பயணிகள் இந்த நிலையங்களில் நுழையவோ அல்லது வெளியேறவோ முடியாது.
முன்னதாக புதன்கிழமை மாலையில், டெல்லி மெட்ரோ தனது அனைத்து நிலையங்களும் பயணிகள் சேவைக்காகத் திறக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தது.
கமல்ஹாசன் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images
சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார். எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் கற்றலுக்குப் பதிலாகப் பயிற்சி மையங்களும், ஆர்வத்துக்குப் பதிலாகப் பதற்றமும், தகுதிக்குரிய இடத்தைக் குற்றச்செயல்களும் ஆக்கிரமித்துள்ள ஒரு கட்டமைப்பு முற்றிலும் சீரழிந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு தன் குழந்தைகளுக்குப் பதில்களை வழங்குவதற்குப் பதிலாக தடுப்புகளையும் தடிகளையும் கொண்டு எதிர்கொள்ளும் அந்த நாடு தோற்றுப் போகிறது என கூறியுள்ள கமல்ஹாசன், இனிவரும் பயணத்துக்கு இந்த நாட்டுக்கு சோனம் வாங்சுக்கின் மனசாட்சி தேவைப்படும் என குறிப்பிட்டுள்ளார். மாணவர்கள் தங்கள் கடமையை செய்துவிட்டதாகவும், இப்போது நாடு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன் அவர்களது கனவுகள் மக்களின் தோல்விகளை விட பெரியதாக இருக்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































