You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: பத்தே நாட்களில் மூன்றாவது முறையாக உயர்ந்த எண்ணெய் விலைகள்
இந்தியாவில் பத்தே நாட்களில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளன. பிப்ரவரி இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக, ஹோர்மூஸ் வழியே எண்ணெய் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் விலைகள் மேலும் உயரக்கூடும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்கள் கூற்றுப்படி, அத்தகைய விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
அத்தகைய தாக்கம் ஏற்கனவே தெரிய தொடங்கி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 60 முதல் 65 டாலர் என்ற அளவில் இருந்தபோது, 2025-26 நிதியாண்டிற்கான பொருளாதார வளர்ச்சி விகிதம் 7.6 சதவீதமாக இருக்கும் என இந்திய ரிசர்வ் வங்கி கணித்திருந்தது.
ஆனால், அதன் பிறகு கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில், நடப்பு நிதியாண்டிற்கான வளர்ச்சி விகிதம் சுமார் 6.9 சதவீதமாக இருக்கக்கூடும் என ரிசர்வ் வங்கி சமீபத்தில் தெரிவித்தது.
மேலும் சில்லறை பணவீக்க விகிதம் நவம்பர் 2025-ல் இருந்த 0.7 சதவீதத்திலிருந்து உயர்ந்து, தற்போது 3.48 சதவீதத்தை எட்டியுள்ளது. இதற்கான அர்த்தம் என்னவென்றால், இந்தியாவில் உணவு, வாடகை, போக்குவரத்து மற்றும் மற்ற அன்றாடச் செலவுகள் அதிகரித்துள்ளன. இன்னும் நெருக்கடி நிலையை எட்டவில்லை என்றாலும், பணவீக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது என்பது தெளிவாகிறது.
அதே போல நவம்பர் மாதத்தில் மொத்த விற்பனை விலை பணவீக்க விகிதம் மிகக் குறைவாக இருந்த நிலையில், தற்போது 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கான அர்த்தம் என்னவென்றால், நிறுவனங்கள் மற்றும் தொழில்துறைகளுக்கான செலவுகள் அதிகரித்துள்ளன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு