வால்பாறையில் வேன் கவிழ்ந்து 8 பேர் பலி - என்ன நடந்தது?

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)
வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் வேன் ஒன்று கவிழ்ந்ததில், குறைந்தது 8 பேர் உயிரிழந்தனர். இத்தகவலை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிபிசி தமிழிடம் உறுதிப்படுத்தினார்.
''கேரளா மாநிலம் பெரிந்தல்மண்ணா பகுதியைச் சேர்ந்த 13 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வாகனம், வால்பாறையில் சுற்றுலா முடித்து கீழிறங்கிக் கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது'' என கோவை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
''இவ்வாகனம், 13வது கொண்டை ஊசி வளைவை கடக்கும் போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது. அதன் விளைவாக, வாகனம் சாலையிலிருந்து வழுக்கி 9வது கொண்டை ஊசி வளைவு நோக்கி பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், 8 பேர் (1 ஆண் மற்றும் 7 பெண்கள்) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஓட்டுநர் உட்பட 5 பேர் கடுமையாக காயமடைந்தனர்.'' என்கிறது காவல்துறை.
''இவர்களில் 17 முதல் 18 வயதுக்குட்பட்ட 2 ஆண் சிறுவர்கள் மற்றும் 2 பெண்கள் அடங்குவர் . காயமடைந்த அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர்'' என காவல் துறை தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு




























