புதிய பொதுத் தேர்வுகள் மசோதா மூலம் வினாத்தாள் கசிவதைத் தடுக்க முடியுமா? ஓர் அலசல்

மக்களவையில் நிறைவேற்றப்பட்ட ஒரு நாள் கழித்து, பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா, 2026 குறித்த விவாதத்தைத் தொடர்ந்து, அந்த மசோதா வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீட்-யுஜி தேர்வு வினாத்தாள் கசிவைத் தொடர்ந்து, அரசு புதிய பொதுத் தேர்வுகள் மசோதாவை (திருத்தம்) நிறைவேற்றியுள்ளது
    • எழுதியவர், கீர்த்தி துபே
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்

மக்களவையில் நிறைவேற்றப்பட்டு ஒரு நாள் கழித்து, பொதுத் தேர்வுகள் (திருத்த) மசோதா 2026 குறித்த விவாதத்தைத் தொடர்ந்து, அந்த மசோதா வியாழக்கிழமை மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளில் கடுமையான தண்டனை மற்றும் விரைவு விசாரணை நீதிமன்றங்களுக்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட சில மணிநேரத்திலேயே, வியாழக்கிழமை இரவு பிரதமர் நரேந்திர மோதி இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை பகிர்ந்து, "வினாத்தாள் மாஃபியா, வினாத்தாள் கசிவு கும்பல் அல்லது நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடும் எந்தக் கும்பலாக இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது" என்று கூறினார்.

கடுமையான சட்டங்களைக் கொண்டு வருவோம் என்ற தனது அரசின் வாக்குறுதி நிறைவேற்றப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

"நம்பகமான கல்வி முறையை உருவாக்கும் நோக்கில் தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். பணிக் குழுக்களை அமைப்பதாக இருந்தாலும், விரைவு விசாரணை நீதிமன்றங்களை ஏற்படுத்துவதாக இருந்தாலும், மாநிலங்களின் பரிந்துரைகளைப் பெறுவதாக இருந்தாலும், கல்வித் துறையில் நாடு முழுவதும் சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அந்தத் திசையில் பணிகள் தொடர்ந்து நடைபெறும்" என்று பிரதமர் மோதி கூறினார்.

இதற்கு முன்னதாக, பல மணிநேர விவாதத்துக்குப் பிறகு, மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங் பதிலளிப்பதற்காக அவையில் எழுந்தபோது, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

ஜூலை 20ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா அவையில் விளக்கம் அளிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதற்குப் பதிலளித்த ஜிதேந்திர சிங், "விவாதத்தின்போது மிகவும் தீவிரமாக கருத்து தெரிவித்த எம்.பி.க்கள், பதில்களைக் கேட்காமல் அவையைவிட்டு வெளியேறியது வருத்தமளிக்கிறது" என்றார்.

வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளில் கடுமையான தண்டனை மற்றும் விரைவு விசாரணை நீதிமன்றங்களுக்கு இந்த மசோதா வழிவகுக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மாபெரும் மாணவர் போராட்டம் நடைபெற்றது.

புதிய மசோதாவின் விதிகள்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

கடந்த 2024ஆம் ஆண்டில், பொதுத் தேர்வுகள் சட்டம், 2024ஐ நாடாளுமன்றம் நிறைவேற்றியது.

தேர்வுகளில் வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபடுவோருக்கு தண்டனை வழங்குவதே இந்தச் சட்டத்தின் நோக்கம்.

இந்தச் சட்டம், நீட் தேர்வு உள்பட, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC), பணியாளர் தேர்வு ஆணையம் (SSC), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) மற்றும் தேசிய தேர்வு முகமை (NTA) நடத்தும் தேர்வுகளுக்கும் பொருந்தும். இந்தச் சட்டம் 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வந்தது.

இந்த ஆண்டு மே மாதம் நீட் யுஜி (NEET-UG) தேர்வின் வினாத்தாள் கசிந்ததைத் தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தொடங்கி நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே, ஜூலை 23ஆம் தேதி இரவு, வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் கடுமையான விதிகளை உள்ளடக்கிய மசோதாவை தனது அரசு கொண்டு வருமென பிரதமர் நரேந்திர மோதி சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

அதற்கு மறுநாளான ஜூலை 24ஆம் தேதி, 2024ஆம் ஆண்டு சட்டத்தில் திருத்தம் செய்யும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இதற்கிடையில், ஜூலை 23ஆம் தேதி இரவு, வினாத்தாள் கசிவு தொடர்பாக மேலும் கடுமையான விதிகளை உள்ளடக்கிய மசோதாவை தனது அரசு கொண்டு வரும் என்று பிரதமர் நரேந்திர மோதி சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பொதுத் தேர்வுகள் (முறைகேடுகளைத் தடுத்தல்) திருத்த மசோதா, 2026 மீதான விவாதத்தின்போது நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் கிரண் ரிஜிஜு

இந்தப் புதிய மசோதாவில் செய்யப்பட்டுள்ள மிக முக்கியமான மாற்றம், விரைவு விசாரணை நீதிமன்றங்கள் தொடர்பானதாகும். வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளை விசாரிக்க, ஒவ்வொரு மாநிலத்திலும் தனித்துவமான விரைவு விசாரணை நீதிமன்றங்களை அமைக்க இந்த மசோதா வழிவகுக்கிறது. இதன் மூலம், அத்தகைய வழக்குகளில் விரைவாகத் தீர்ப்பு வழங்க முடியும்.

வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகளின் விசாரணையை இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். இதனால், விரைவாகக் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து, வழக்கு விசாரணையைத் தொடங்க முடியும்.

பொதுவாக, எந்தவொரு வழக்கையும் விசாரித்து முடிக்க காவல்துறைக்கு 90 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படுகிறது. வினாத்தாள் கசிவில் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 50 லட்சம் ரூபாய் அபராதமும், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும்.

கடந்த 2024ஆம் ஆண்டு சட்டத்தில், அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்யப்பட்டிருந்தது. வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பான எந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலுக்கும் அதிகபட்சமாக 10 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.

 சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, சிஜேபி போராட்டத்தின்போது தங்களது கோரிக்கைகளை விளக்கிய சிஜேபி செய்தித் தொடர்பாளர்கள் சௌரவ் தாஸ் மற்றும் அஷுதோஷ் ரங்கா.

இந்த மசோதா குறித்து சிஜேபி என்ன கூறியது?

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, அது குறித்த தனது எதிர்வினையில், சிஜேபி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, பழைய அணுகுமுறையே மீண்டும் பின்பற்றப்படுவதாகக் கூறினார்.

வினாத்தாள் கசிவுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஏற்பாடுகளையே அரசு செய்து வருகிறது. ஆனால், வினாத்தாள் கசிவைத் தடுக்க தேர்வு முறையில் என்ன மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என்பது குறித்துப் பேசப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அவர் வெளியிட்ட காணொளி அறிக்கையில், "இன்று நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதாவில், வினாத்தாள் கசிவுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டும் நீங்கள் பேசுகிறீர்கள் என்பதே பிரச்னை. விரைவு விசாரணை நீதிமன்றங்கள், கடுமையான தண்டனை அல்லது அதிக அபராதம் என எதுவாக இருந்தாலும், வினாத்தாள் கசிவை எவ்வாறு தடுக்கப் போகிறீர்கள் என்பது குறித்த எந்த விவாதமும் இல்லை," என்றார்.

"தேசிய தேர்வு முகமையைச் சீர்திருத்துவது, எஸ்எஸ்சி-யை (SSC) சட்டபூர்வ அமைப்பாக மாற்றுவது, தேர்வுக் கால அட்டவணை மற்றும் பாடத் திட்டத்தில் வெளிப்படைத்தன்மை, பயிற்சி மையங்கள் மற்றும் ஒப்பந்த நிறுவனங்கள் தொடர்பான பிரச்னைகளைத் தீர்ப்பது, ஒப்பந்த நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படுவதைத் தடுப்பது, தேர்வு நடைமுறையைத் தொடக்கம் முதல் இறுதி வரை வலுப்படுத்துவது, தேர்வு உள்கட்டமைப்பை மேம்படுத்துவது போன்ற விஷயங்கள் குறித்துப் பேசாவிட்டால், வினாத்தாள் கசிவு பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காது" என்று அசுதோஷ் ரங்கா கூறினார்.

மேலும் பேசிய அவர், "இந்த மசோதாவில், வினாத்தாள் கசிவுக்குப் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், கசிவை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்தும் விவாதிக்க வேண்டும். எங்கள் கோரிக்கைகளைப் பாருங்கள். மாணவர்கள், ஆசிரியர்கள், நிபுணர்கள், டிஜிட்டல் மற்றும் இணையப் பாதுகாப்பு நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். அவசரமாக முடிவுகளை எடுக்க வேண்டாம். ஏனெனில் இது இந்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் தொடர்பான விஷயம்" என்று அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு, சிஜேபி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரங்கா, பழைய அணுகுமுறையே மீண்டும் பின்பற்றப்படுவதாகக் கூறி அதற்கு எதிர்வினையாற்றினார்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, டெல்லி ஜந்தர் மந்தரில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த பெண் போராட்டக்காரர்கள்

நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களை உள்ளடக்கிய தலா 180 வினாக்களைக் கொண்ட நான்கு வகையான வினாத்தாள்கள் இடம்பெறுகின்றன. இந்த வினாத்தாள் கசிவு இரண்டு கட்டங்களில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஒன்று 2024ஆம் ஆண்டிலும், மற்றொன்று 2026ஆம் ஆண்டிலும் நடந்ததாகக் கூறப்படுகிறது.

கடந்த 2024ஆம் ஆண்டில், வினாத்தாள்கள் அச்சிடப்பட்ட பிறகு கசிந்ததாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. விசாரணை அமைப்புகளின் தகவல்படி, தேர்வு மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சீல் வைக்கப்பட்ட பெட்டிகள் திறக்கப்பட்டு வினாத்தாள்கள் கசிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் சுமார் 40 முதல் 50 பேர் வரை தொடர்புடையவர்கள் என்று விசாரணையில் தெரிய வந்தது. பின்னர், இந்தச் சம்பவம் தேர்வின் நேர்மையைப் பாதிக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறி, மறுதேர்வு நடத்தக் கோரிய மனுக்களை நிராகரித்தது.

மேலும், 2026ஆம் ஆண்டில் வினாத்தாள் தேசிய தேர்வு முகமையில் இருந்து வெளியே வருவதற்கும் முன்பே கசிந்ததாகக் கூறப்படுகிறது. சில ஆசிரியர்கள் அமைப்பிற்கு உள்ளேயே இருந்து வினாத்தாளை கசியவிட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த முறை அச்சிடுதல், போக்குவரத்து, விநியோகம் தொடர்பாக எந்த பாதுகாப்புக் குறைபாடும் இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், நடைமுறையின் தொடக்க நிலையிலேயே பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதாவது அதிகாரபூர்வ பாதுகாப்பு நடைமுறைக்குள் வருவதற்கு முன்பே வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படுகிறது.

இப்போது, இந்தப் புதிய சட்டம் தொடர்பாக சில கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. உதாரணமாக, அபராதம் மற்றும் தண்டனை வழங்குவதற்கான விதிகளுடன் இந்தச் சட்டம் ஏற்கெனவே 2024ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இருப்பினும், 2026ஆம் ஆண்டிலும் நீட் வினாத்தாள் கசிந்திருந்தால், தண்டனைக் காலத்தையும் அபராதத் தொகையையும் அதிகரிப்பது மட்டுமே வினாத்தாள் கசிவைத் தடுப்பதில் எப்படி தாக்கம் செலுத்தும் என்ற கேள்வி எழுகிறது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் முன்னாள் தலைவர் அசோக் கங்குலி கூறுகையில், "வினாத்தாள் கசிவைச் சமாளிக்கப் பல்வேறு நிலைகளில் அரசு புதிய உத்திகளைப் பின்பற்றி வருகிறது. தற்போதுள்ள சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களும் அதன் ஒரு பகுதிதான்" என்றார்.

"தண்டனையை அதிகரிப்பதும், விரைவாக வழக்குகளை விசாரிப்பதும் வினாத்தாளைக் கசியவிட்டவர்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இத்தகைய தேர்வுகளை நடத்துவதில் நம்பகத்தன்மை, செல்லுபடித்தன்மை, நம்பிக்கை ஆகிய மூன்றும் மிக முக்கியமானவை. இந்த முறை ஏற்பட்ட குறைபாடு முழு அமைப்பிற்கு உள்ளேயே உள்ளது. இந்தப் பொறுப்பை ஏற்றவர்கள்மீது இருந்த நம்பிக்கை பாதிக்கப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

"இந்த அமைப்பை மேலும் வலுப்படுத்தி, இதுபோன்ற குறைபாடுகளை முற்றிலும் தடுக்க வேண்டும். அதற்கு நம்பகமான நபர்கள், நம்பகமான அமைப்பு மற்றும் பொறுப்பை உணர்ந்து செயல்படும் அணுகுமுறை தேவை. அப்போதுதான் முழு தேர்வு நடைமுறையின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்க முடியும். இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்துவதில் எந்தத் தளர்வும் இருக்கக் கூடாது," என்றார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், "தேர்வு நடத்தும் முறையிலும் மாற்றம் தேவை. இதுபோன்ற தேர்வுகளை நடத்துவது ஒரு தொழில்முறை பணி. இதற்கு சாதாரண நிர்வாக அதிகாரிகள் அல்ல, நிபுணர்களே தேவை. யார் வேண்டுமானாலும் இப்படிப்பட்ட தேர்வுகளை நடத்தலாம் என்ற எண்ணம் மாற வேண்டும். இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்டக் குழு இந்த அம்சத்தையும் கவனத்தில் கொள்ளுமென நம்புகிறேன்" என்றும் அசோக் கங்குலி கூறினார்.

"இத்தகைய தேர்வுகளில் பங்கேற்போரின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால், ஒரே கட்டத் தேர்வு முறையில் அவற்றை நடத்தக்கூடாது. அதற்குப் பதிலாக இரண்டு கட்டத் தேர்வு முறையைப் பின்பற்ற வேண்டும்."

"முதல் கட்டத்தில் தேர்வர்களைத் தேர்வு செய்வதோடு மட்டுமின்றி, இரண்டாம் கட்டத்தில் அந்தப் பணிக்குத் தேவையான மனப்பான்மையும் திறனும் அவர்களிடம் உள்ளதா என்பதையும் மதிப்பிட வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தப் புதிய திருத்தம் எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது வரும் ஆண்டுகளில் தெரிய வரும். ஆனால் தற்போது, தேர்வு முறை முழுமையாக கசிவு இல்லாததாக எவ்வாறு மாற்றப்படும் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும், பொது மக்களில் ஒரு தரப்பினரும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

இந்தப் புதிய திருத்தம் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது வரும் ஆண்டுகளில் தெரியவரும். ஆனால் தற்போது, தேர்வு முறை முழுமையாக கசிவு இல்லாததாக எவ்வாறு மாற்றப்படும் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகளும், பொதுமக்களில் ஒரு தரப்பினரும் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர்.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

நாட்டில் தற்போதுள்ள விரைவு நீதிமன்றங்களின் செயல்பாட்டு அறிக்கை

இந்த மசோதா தொடர்பாக மேலும் பல கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகள் விரைவு விசாரணை நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் என்றும், காவல்துறை இரண்டு மாதங்களுக்குள் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. மற்ற வழக்குகளில் இந்தக் காலக்கெடு மூன்று மாதங்களாக உள்ளது.

அப்படியானால், வழக்குகளை விரைவாக விசாரிக்க காவல்துறை அமைப்பு தயாராக உள்ளதா? மேலும், இவ்வளவு குறுகிய காலக்கெடு விசாரணையின் தரத்தைப் பாதிக்காதா?

தற்போது நாட்டில் செயல்பட்டு வரும் விரைவு விசாரணை நீதிமன்றங்கள் உண்மையிலேயே விரைவாகத் தீர்ப்புகளை வழங்கும் திறன் கொண்டவையா?

நாட்டில் செயல்பட்டு வரும் விரைவு விசாரணை சிறப்பு நீதிமன்றங்களில், 2026ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி அரசு அளித்த தகவலின்படி, 2.45 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

உத்தர பிரதேசத்தின் ஃபதேபூர் சிக்ரி தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ராஜ்குமார் சாஹர் மற்றும் மத்திய பிரதேசத்தின் ரேவா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி. ஜனார்தன் மிஸ்ரா ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது சட்ட அமைச்சகம் இந்தத் தகவலை வழங்கியது.

நாட்டிலுள்ள விரைவு விசாரணை சிறப்பு நீதிமன்றங்கள், போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றின் எண்ணிக்கை, கடந்த மூன்று ஆண்டுகளில் அவற்றில் பதிவு செய்யப்பட்ட மற்றும் முடிக்கப்பட்ட வழக்குகளின் விவரங்களை இரு எம்.பி.க்களும் கேட்டிருந்தனர்.

இதற்கு எழுத்துபூர்வமாக பதிலளித்த சட்டம் மற்றும் நீதி அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி நிலவரப்படி, நாட்டின் 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 775 விரைவு விசாரணை சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருவதாக மக்களவையில் தெரிவித்தார்.

அவற்றில், 398 நீதிமன்றங்கள் போக்சோ வழக்குகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டவை. பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதற்காக இந்த நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன. 2025ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி நிலவரப்படி, இந்த நீதிமன்றங்களில் 2,45,579 வழக்குகள் நிலுவையில் இருந்ததாக அவர் தெரிவித்தார்.

அரசுத் தரவுகளின்படி, 2025ஆம் ஆண்டில் விரைவு விசாரணை சிறப்பு நீதிமன்றங்களில் 1,43,936 புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால், 66,500 வழக்குகள் மட்டுமே முடிக்கப்பட்டன.

இதன் காரணமாக, 2024ஆம் ஆண்டு இறுதியில் 2,04,122 ஆக இருந்த நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை, 2025ஆம் ஆண்டு இறுதியில் 2,45,579 ஆக அதிகரித்தது. 2023ஆம் ஆண்டு இறுதியில் இந்த எண்ணிக்கை 2,02,175 ஆக இருந்தது.

இத்தகைய சூழ்நிலையில், புதிய விரைவு விசாரணை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட பிறகு, வினாத்தாள் கசிவு தொடர்பான வழக்குகள் எவ்வளவு விரைவாகத் தீர்க்கப்படும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு