You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'இறந்திருப்பான் என நினைத்தேன்' - கோவையில் காணாமல் போன மகனை 23 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப்பில் சந்தித்த தாய்
''என் பையனைக் காணவில்லை என்று வருஷக்கணக்கில் தேடித்தேடி அழுதுகொண்டிருந்தேன். நான் வணங்கிய கடவுள் எனக்கு அவனைக் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார். ஆனால் அவன் காலில் சங்கிலியைக் கட்டி கொடுமைப்படுத்தப்பட்ட காட்சிகளைப் பார்த்தபோது என்னால் சாப்பிட முடியவில்லை. தூக்கமே வரவில்லை. இப்போது அவனை 23 ஆண்டுகள் கழித்து பார்க்கப்போவதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது.''
பஞ்சாப் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையில் பல ஆண்டுகளாக கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்டு காப்பகத்திலுள்ள தன் மகனை முறைப்படி மீட்டுக் கொண்டு வருவதற்காக தாய் சுந்தரி, கடந்த ஜூலை 25 அன்று காலையில் ரயிலில் புறப்பட்டபோது கோவை ரயில் சந்திப்பில் பிபிசியிடம் பகிர்ந்த வார்த்தைகள் இவை.
சுந்தரி மேற்கொண்ட பயணம், வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. அவருடைய மகன் கிடைப்பதற்கு உதவிய முத்தையா என்பவரின் துணையுடன் பஞ்சாப்பிற்கு, ரயிலில் பயணத்தை மேற்கொண்ட சுந்தரி, ஜூலை 28 அன்று அவருடைய மகனை 23 ஆண்டுகளுக்குப் பின் பார்த்து ஆரத்தழுவி, ஆனந்தக்கண்ணீர் சிந்தி, தன் கைகளால் உணவு ஊட்டி மகிழ்ந்திருக்கிறார்.
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரியும், அவருடைய கணவர் ராமமூர்த்தியும் தங்களுடைய 2 மகன்களுடன் 40 ஆண்டுகளுக்கு முன்பு, பிழைப்புக்காக கோவைக்கு வந்துள்ளனர். கவுண்டம்பாளையம் எருக்கம்பெனி பகுதியில் அவர்கள் முதலில் குடியிருந்துள்ளனர்.
பிபிசியிடம் சுந்தரி பகிர்ந்த தகவலின்படி, மூத்த மகன் பிரகாசம், 4 ஆம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை. கடந்த 2003-ஆம் ஆண்டில் அவருக்கு 16 வயதாகும்போது, அவருக்கும் தம்பிக்கும் இடையில் இரு சக்கர வாகனத்தை யார் பயன்படுத்துவது என்பதில் ஏற்பட்ட சண்டையில், கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார். பல இடங்களில் தேடியும் கிடைக்காமல் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதற்கும் பயனில்லை.
சில ஆண்டுகளுக்குப் பின் இவர்கள் நீலாம்பூர் ஆச்சாங்குளத்துக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். மின் சாதன உதவியாளர், காவலாளி போன்ற பணிகளுக்குச் சென்று வந்த ராமமூர்த்தி, கடந்த 2021-ஆம் ஆண்டில் புற்றுநோயால் இறந்துவிட்டார். சுந்தரியும், இளைய மகன் பிரபுவும் ஒரு ஓட்டு வீட்டில் வசித்தபடி, மாடு மேய்ப்பது, குத்தகை நிலத்தில் காய்கறி பயிரிடுவது போன்ற வேலைகளைச் செய்து வருகின்றனர்.
பஞ்சாப்பில் 15 ஆண்டுகளுக்கு மேல் கொத்தடிமையாக இருந்த பிரகாசம்!
கடந்த ஜூன் மாத இறுதியில், சுந்தரியைத் தேடிவந்த திருப்பூரைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் முத்தையா, பிரகாசம் பஞ்சாப்பில் ஒரு காப்பகத்தில் இருப்பதாகத் தகவல் தெரிவித்துள்ளார். அவருடைய புகைப்படத்தைக் காண்பித்து, அலைபேசியிலும், வீடியோ காலிலும் பேசவைத்துள்ளார். அப்போதுதான் அவருடைய மகன் உயிருடன் இருந்ததே சுந்தரிக்குத் தெரியவந்தது.
பிரகாசம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள அஜ்னாலா என்ற ஊரிலுள்ள ஒரு விவசாயப் பண்ணையில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்துள்ளதாக அவரை மீட்ட அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.
பட்டியாலாவிலுள்ள அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டி என்ற அரசு சாரா அமைப்பினர், அங்கிருந்து பிரகாசத்தைக் கடந்த 2022-ஆம் ஆண்டில் மீட்டு காப்பகத்தில் பாதுகாத்துள்ளனர்.
பிபிசி பஞ்சாபியிடம் பேசிய அந்த அமைப்பினர், 15 ஆண்டுகளுக்கும் மேலாக பிரகாசம் அங்கு கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்ததை விளக்கினர்.
கால்நடைகளை மேய்ப்பது மற்றும் பராமரிப்பு வேலைகளைச் செய்து வந்த அவருக்கு போதிய உணவு, உடை, உறைவிடம், ஊதியம் எதுவுமே தரப்படவில்லை. அவர் தப்பிச் செல்ல முடியாதபடி, இரவில் ஒரு இரும்புக் கட்டிலில் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.
அவரை அடித்துத் துன்புறுத்தியதையும் அந்த அமைப்பினர் விளக்கியதுடன், பிரகாசம் அப்போது இருந்த நிலையை புகைப்படங்கள் மற்றும் காணொளிகளாகவும் எடுத்து வைத்துள்ளனர். அந்தப் படங்களை பஞ்சாப்பைச் சேர்ந்த சுபாஷ் சந்தர், முத்தையா மூலமாக பிபிசி தமிழிடம் பகிர்ந்திருந்தார்.
ஹரியாணா சட்டப்பேரவையின் செயலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற சுபாஷ் சந்தர், காப்பகங்களுக்குச் சென்று கலந்தாய்வு நடத்தும்போது, கடந்த 2023-ஆம் ஆண்டில் பிரகாசத்தைச் சந்தித்துள்ளார். அப்போது பிரகாசம் ஓரிரு வார்த்தைகள் மட்டுமே பேசியிருக்கிறார். தன்னுடைய மாநிலம் தமிழ்நாடு என்று கூறிய பிரகாசம், சொந்த ஊர் மும்பை என்று மாற்றி மாற்றித் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அவருடைய ஊர் எதுவென்று கண்டறியமுடியவில்லை. உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் சிகிச்சை பெற்றபின்பு, சற்று பேச ஆரம்பித்த பிரகாசம், தன்னுடைய ஊர் கோயம்புத்தூர் என்று கூறியுள்ளார். சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் தன்னுடைய நண்பர் பாலகிஷனிடம் பிரகாசத்தைப் பற்றி கூறிய சுபாஷ், அவர் குடும்பத்தைக் கண்டறிய உதவி கோரியுள்ளார்.
பாலகிஷன், திருப்பூர் பல்லடத்தில் வசிக்கும் தன்னுடைய சகோதரர் முத்தையாவிடம் இதுபற்றி கூறியிருக்கிறார். உள்ளூர் நாளிதழில் நிருபராகப் பணியாற்றும் முத்தையா, அவர் கூறிய தகவல்களை வைத்து எருக்கம்பெனி பகுதியில் நேரில் விசாரித்தபோது எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
சில மாதங்கள் கழித்து பிரகாசம், தன்னுடைய சொந்த ஊர் அருப்புக்கோட்டை அருகேயுள்ள பூமாலைப்பட்டி என்று கூறியுள்ளார்.
அந்தத் தகவலை வைத்து, பல மாதங்களாக பலரையும் விசாரித்த முத்தையா, கடந்த மாதத்தில் (ஜூன்) பூமாலைப்பட்டியிலுள்ள வாசுகி என்பவரிடம் பேசியுள்ளார். சுந்தரியின் சகோதரி மகளான வாசுகி, பிரகாசம் தன்னுடைய அண்ணன்தான் என்று கூறி, சுந்தரியின் இருப்பிடம் குறித்து தகவல் தெரிவித்துள்ளார். மூன்றாண்டு தேடலுக்குப் பின் கடந்த மாதத்தில் சுந்தரியைச் சந்தித்து, பிரகாசம் குறித்த தகவலை முத்தையா பகிர்ந்தார்.
அதன்பின், ஜூலை முதல் வாரத்தில் முத்தையாவும், பிரகாசத்தின் தம்பியும், பக்கத்து வீட்டுக்காரர் சுந்தரலிங்கத்துடன் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவுக்குச் சென்று, அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டியிலுள்ள பிரகாசத்தை நேரில் சந்தித்தனர். ஆனால் முறையான ஆவணங்களுடன் பிரகாசத்தின் தாயார் வந்தால் மட்டுமே, அவரை ஒப்படைக்க முடியுமென்று சேவா சொசைட்டி நிர்வாகிகள் தெரிவித்துவிட்டனர்.
கடந்த 2005-ஆம் ஆண்டு குடும்ப அட்டையில் பிரகாசத்தின் பெயர் இருந்ததைத் தவிர, வேறு எந்த ஆவணங்களும் சுந்தரியிடம் இல்லை. அதனால் தன்னுடைய மகனை மீட்பதற்கு உதவுமாறு, கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தார் சுந்தரி. மனுவைப் படித்த கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், உடனடியாக பஞ்சாப் மாநிலத்திலுள்ள முக்கிய அரசு அதிகாரிகளிடம் பேசியதுடன், பிரகாசத்துக்குத் தேவைப்படும் ஆவணங்களைக் கண்டுபிடிக்கவும் பல்வேறு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கட்டியணைத்து காலில் விழுந்த மகன்
பிரகாசம் படித்த பள்ளியிலிருந்தும், விருதுநகர் மாவட்டத்திலிருந்தும் சில ஆவணங்கள் இரண்டே நாட்களில் சேகரிக்கப்பட்டன. அவற்றை இணைத்து, பட்டியாலா துணை ஆணையாளர் ஹிமான்சு அகர்வாலுக்கு கடிதம் கொடுத்தார் கோவை ஆட்சியர் பவன்குமார்.
அதில் பிரகாசம், சுந்தரியின் மகன் என்பது குறித்து தமிழக அரசு அதிகாரிகளின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு, அவரை ஒப்படைக்குமாறு பரிந்துரை செய்திருந்தார். அத்துடன் கொத்தடிமையாக இருந்த பிரகாசத்திற்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய இழப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறும் அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தக் கடிதத்துடன் தாய் சுந்தரியை அழைத்துக்கொண்டு முத்தையா, ரயிலில் பஞ்சாப் சென்றார். அங்கு போய்ச்சேர்ந்த அவர்களுக்கு சண்டிகர் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் ராஜசேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் உதவியுள்ளனர்.
ஜூலை 28 அன்று, பட்டியாலா மாவட்டம் அஜ்னாலாவிலுள்ள அப்னா ஃபர்ஸ் சேவா சொசைட்டிக்கு அனைவரும் சென்றனர்.
அங்கு முறைப்படி பிரகாசத்தை ஒப்படைப்பதற்கான ஆவணங்களில் சேவா சொசைட்டி நிர்வாகிகள் கையெழுத்துப் பெற்றனர். அதன்பின் 23 ஆண்டுகள் கழித்து, தாயும் மகனும் சந்திக்கும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி அங்கு நடந்தது.
சீக்கியர்கள் அணியும் டர்பன் தலையில் கட்டிய நிலையில் பிரகாசம் அழைத்து வரப்பட்டார்.
அவரைப் பார்த்ததும் கட்டியணைத்து அழுத சுந்தரி, ''எதற்காக இங்கே வந்தாய்...இத்தனை ஆண்டுகளாக ஏன் எங்களை அழவைத்தாய்.. நான் வணங்கும் கடவுள்தான் உன்னை எங்களிடம் காப்பாற்றிக் கொடுத்திருக்கிறார்… இல்லாவிட்டால் நீ இங்கேயே இருந்திருப்பாய். நான் உன்னைப் பார்த்திருக்கவே முடியாமல் போயிருக்கும்.'' என்று கண்ணீர் விட்டு அழுதார்.
தாயைப் பார்த்த தருணத்தில் எதுவுமே பேசாத பிரகாசம், தாயின் காலில் விழுந்து, அவரைக் கட்டியணைத்துக் கொண்டார். தன் மகனைக் காப்பாற்றிய சேவா சொசைட்டி நிர்வாகிகளை கையெடுத்துக் கும்பிட்ட சுந்தரி, ''நீங்கள்தான் எங்களுக்கு கடவுள் போன்றவர்கள்'' என்று கூறினார்.
அங்கு அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டபோது, ஒரு குழந்தைக்கு ஊட்டுவதுபோல தனது மகனுக்கு, பல ஆண்டுகளுக்குப் பின் தன் கைகளால் உணவூட்டி மகிழ்ந்தார் சுந்தரி.
பின், பட்டியாலா மாவட்ட துணை ஆணையாளர் அலுவலகத்துக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மாவட்ட துணை ஆணையாளர் ஹிமான்சு அகர்வாவாலை 'பிரிந்து சேர்ந்த தாயையும் மகனையும் சந்தித்துப் பேசினர்.
பிபிசி பஞ்சாபியிடம் பேசிய பட்டியாலா துணை ஆணையர் ஹிமான்சு அகர்வால், ''தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரகாசம் தனது குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கப்பட்டார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவர் 23 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டிலிருந்து காணாமல் போய், எப்படியோ பஞ்சாபிற்கு வந்து சேர்ந்தது சமீபத்தில் தெரியவந்தது.'' என்றார்.
''அவர் கொத்தடிமையாக வைக்கப்பட்டிருந்த தகவல் கிடைத்துள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு விதிகளின்படி இழப்பீடு கிடைப்பதை உறுதி செய்யவும், அவரை கொத்தடிமையாக வைத்திருந்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தொழிலாளர் நலத்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.'' என்றார் துணை ஆணையாளர்.
தாயும் மகனும் இணைந்ததில் முக்கியப் பங்காற்றிய ஓய்வு பெற்ற ஹரியாணா சட்டப்பேரவை செயலாளர் சுபாஷ் சந்தர், ''நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள 22 அரசு சாரா அமைப்புகளுடன் நான் இணைந்து செயல்பட்டு வருகிறேன். இந்த அமைப்புகள் மூலம், மீட்கப்பட்ட அடையாளம் தெரியாத மற்றும் கைவிடப்பட்ட நபர்களை அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் இணைக்கும் பணியை நான் செய்து வருகிறேன்.'' என்றார்.
''பிரகாசம் 2022 மே மாதத்தில் இந்த காப்பகத்திற்கு வந்தார். அப்போது அவரால் இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளை மட்டுமே பேச முடிந்தது. நான் பேசும் வார்த்தைகளை அவர் அப்படியே திரும்பச் சொல்வார். கடந்த 3 ஆண்டுகளாக பிரகாசத்திடம் அவரது குடும்பத்தைப் பற்றி நான் தொடர்ந்து கேட்டு வந்தேன். இந்த ஆண்டு மே மாதத்தில், அவர் 'அருப்புக்கோட்டை', 'பூமாலைப்பட்டி' மற்றும் 'ஆனைக்குளம்' ஆகிய வார்த்தைகளை உச்சரித்தார்.'' என்றும் பிபிசி பஞ்சாபியிடம் விளக்கினார் சுபாஷ் சந்தர்.
பிரகாசம் கூறிய ஊர்ப்பெயர்களை கூகுளில் அவர் தேடியபோது, அந்த இடங்கள் விருதுநகர் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. அதை வைத்து விருதுநகர் என்று சுபாஷ் சொன்னபோது, தலையசைத்து பிரகாசம் ஒப்புக்கொண்டுள்ளார். அதற்குப் பின்பே தனது நண்பர் மூலமாக முத்தையாவிடம் தொடர்பு கொண்டதையும், சுந்தரியின் இருப்பிடத்தை முத்தையா கண்டுபிடித்ததையும் சுபாஷ் சந்தர் விளக்கியுள்ளார்.
பஞ்சாப்பில் சுந்தரியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளை, சண்டிகர் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் மொழி பெயர்த்து இரு தரப்பிலும் விளக்கினர். அப்போது பேசிய சுந்தரி, ''என் மகன் எங்களிடம் இருந்தபோது நன்றாகத்தான் இருந்தான். தம்பியுடன் சண்டை போட்டு வந்துவிட்டான். அவனை கொத்தடிமை நிலையில் பார்த்தபோது, அப்படி வைத்திருந்த நபரின் மீது எனக்கு பெரும் கோபம் வந்தது.'' என்றார்.
''என் கணவர் இறக்கும்வரை, இவனைக் காணவில்லை என்று வருந்திக்கொண்டிருந்தார். ஆனால் இவன் உயிரோடு இருப்பான் என்பதை அவர் நம்பினார். பிரகாசம் என்றால் சூரியன், சூரியன் அழியாது என்று சொல்லிக்கொண்டேயிருப்பார். நானும் அதுவரை நம்பியிருந்தேன். ஆனால் கொரோனா காலத்தில் எவ்வளவோ பேர் இறந்தபோது அவனும் இறந்திருப்பான் என்று நினைத்தேன். அவன் உயிரோடு இருக்கிறான் என்று தெரிந்த தருணத்தில், கடவுள்தான் அவனைக் காப்பாற்றியருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.'' என்றார் சுந்தரி.
''என் மகனை ஊருக்கு அழைத்துச் சென்று அவனுக்கு நல்ல உணவு கொடுத்து தெம்பூட்டுவேன். பெண் கிடைத்தால் திருமணம் செய்து வைப்பேன். இல்லாவிட்டால் நான் இறக்கும் வரை அவனை பத்திரமாக பார்த்துக்கொள்வேன். முத்தையா, சுபாஷ், சேவா சொசைட்டிக்காரர்கள் இல்லாவிட்டால் என் மகன் எனக்குக் கிடைத்திருக்கமாட்டான். அவர்கள் எல்லோருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.'' என்றார் சுந்தரி.
பிபிசி பஞ்சாபியிடம் பேசிய முத்தையா, ''பிரகாசத்தின் குடும்பத்தினரைக் கண்டுபிடிப்பதற்கு பெரும் முயற்சி எடுத்தோம். இப்போது தாயும் மகனும் சேர்ந்ததைப் பார்க்கும்போது, வாழ்க்கையில் ஒரு குறிப்பிடத்தக்க நல்ல செயலைச் செய்திருப்பதாக பெரும் ஆத்மதிருப்தி ஏற்படுகிறது.'' என்றார்.
''பிரகாசத்தையும், அவருடைய தாயையும் சேர்ப்பதற்கு கடவுள் எங்களை கருவியாகப் பயன்படுத்தியுள்ளார். சண்டிகர் தமிழ்ச்சங்கம் எங்களுக்கு பெரிதும் உதவி செய்துள்ளது. பிரகாசம் போன்று எத்தனையோ கொத்தடிமைகள் பஞ்சாப்பில் இருப்பதை சேவா சொசைட்டி நிர்வாகிகள் விளக்கியபோது, அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை அறிந்து பெரும் வேதனையாக இருந்தது. எல்லோரும் சேர்ந்து கொத்தடிமைகள் இல்லாத ஒரு உலகத்தை உருவாக்க வேண்டும். பிரகாசம் போல அனைவரும் மீட்கப்படவேண்டும்.'' என்றார் முத்தையா.
தாயையும் மகனையும் சேர்க்க உதவிய 2 மாநில ஐஏஎஸ் அதிகாரிகள்!
பிபிசி தமிழிடம் பேசிய சண்டிகர் தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் ராஜசேகர், ''இது மனிதநேயத்துக்கு கிடைத்த வெற்றி. இதில் தமிழ்ச்சங்கம் பங்கேற்றதில் மகிழ்ச்சி. பிரகாசத்தை சட்டப்படி தாயிடம் சேர்த்ததில் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமாரின் பங்களிப்பு மகத்தானது. சுந்தரி மனு கொடுத்ததும் உடனடியாக அவர், இங்குள்ள தமிழ் ஐஏஎஸ் அதிகாரி அரவிந்தகுமாரிடம் பேசியுள்ளார். அவர் பஞ்சாப் மாநில உயர் கல்வித்துறை இயக்குநராக இருக்கிறார். அவர்தான் பட்டியாலா துணை ஆணையாளரிடம் பேசி, இதற்குத் தேவையான உதவிகளைச் செய்யுமாறு பரிந்துரை செய்திருக்கிறார்.'' என்றார்.
அதன்பின் பட்டியாலா துணை ஆணையாளர் ஹிமான்சு அகர்வால், தொழிலாளர் துறை, சமூகநலத்துறை போன்ற அதிகாரிகளுக்கு முறைப்படி கடிதம் எழுதிவிட்டதாகக் கூறிய ராஜசேகர், அதனால் ஒப்படைப்புக்கான பணிகள் வேகமாக நடந்ததாகத் தெரிவித்தார்.
பிரகாசத்தை கொத்தடிமையாக வைத்திருந்த பண்ணை உரிமையாளர், மூன்றரை லட்ச ரூபாய் இழப்பீடு தருவதற்கு ஒப்புக்கொண்டிருப்பதாகவும், அதைத் தவிர்த்து அரசு சார்பிலான இழப்பீடும் கிடைக்குமென்றும் தங்களிடம் அதிகாரிகள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால் இழப்பீடு குறித்த இந்தத் தகவல்களை பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்ய இயலவில்லை.
மகனைச் சந்திப்பதற்காக கடந்த ஜூலை 25 ஆம் தேதியன்று, கோவை ரயில் சந்திப்பிலிருந்து பஞ்சாப்பிற்கு சுந்தரி புறப்பட்டபோது, அவரை பிபிசி தமிழ் சந்தித்துப்பேசியது. அப்போது பேசிய சுந்தரி, ''என் மகனை எப்போது பார்ப்பேன் என்று ஆவலாக இருக்கிறது. இதுபோல நான் ரயிலில் நீண்ட தூரம் பயணம் செய்ததில்லை. ஆனால் என் மகனை மீட்பதற்காகச் செல்வதால் இதில் எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லை.'' என்றார்.
பிரகாசத்தைச் சந்தித்தபின் பிபிசி தமிழிடம் பேசிய சுந்தரி, ''என் மகனைப் பார்த்துவிட்டேன். ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறேன். மறுபிறவி எடுத்தது போல என் மகன் கிடைத்திருக்கிறான். நான் 23 வருஷத்துக்கு முன்பு பார்த்தது போலத்தான் இப்போதும் இருக்கிறான். அவன் தமிழ் பேசுவானோ இல்லையோ என்று பயந்தேன். நன்றாகவே என்னிடம் தமிழில் பேசினான்.'' என்றார்.
''இனிமேல் என்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டான். என் மகனைப் பார்ப்பதற்காக எங்களை விட அவனுடைய அக்கா, தங்கைகள் (சுந்தரியின் சகோதரிகளின் மகள்கள்) மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். அவனை ஊருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். என் மகன் ரொம்பவும் கஷ்டப்பட்டிருக்கிறான். அவனை இனிமேல் நன்றாகப் பார்த்துக்கொள்வதுதான் என்னுடைய ஒரே வேலை.'' என்றார் சுந்தரி.
பிரகாசத்திடம் பிபிசி தமிழ் பேசியபோது, அவரால் இயல்பாகப் பேசமுடியவில்லை என்பது தெரிந்தது. கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதிலளித்துப் பேசிய பிரகாசம், ''அம்மாவைப் பார்த்துவிட்டேன். ரொம்பவும் சந்தோஷமாக உணர்கிறேன். மீண்டும் என் குடும்பத்தினரைப் பார்ப்பேன் என்று நினைக்கவில்லை. நான் கோவைக்கு வருகிறேன். அங்கே வந்து பேசுகிறேன்.'' என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு