You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அஜித் பங்கேற்கும் லு மான் போட்டியை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய் - அதன் சிறப்புகள் என்ன?
பிரிட்டனில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் லு மான் கோப்பை (Le Mans Cup) கார் பந்தயத்தை சனிக்கிழமையன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
முன்னதாக, 'தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி உருவாக்கப்படும்' என அவர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். 'இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக' நடிகர் அஜித்குமார் கூறியிருந்தார்.
உலகளவில் முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய், வியாழக்கிழமையன்று பிரிட்டனுக்கு சென்றுள்ளார்.
செப்டம்பர் 16ஆம் தேதி வரை பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களின் தலைவர்களை அவர் சந்திக்க உள்ளார். இந்நிலையில், பிரிட்டனில் உள்ள பிரபலமான சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தய சர்க்யூட்டில் நடைபெற உள்ள கார் பந்தயப் போட்டியில் நடிகர் அஜித்குமார் பங்கேற்கவுள்ளார்.
இந்தப் போட்டியை தமிழ்நாடு முதலமைச்சர் கொடியசைத்துத் தொடங்கி வைக்க இருப்பதாக, போட்டியை நடத்தும் லு மான் கோப்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
லு மான் கோப்பையின் எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், "இந்த வார இறுதியில் சில்வர்ஸ்டோனில் சிறப்பு விருந்தினர் பச்சைக் கொடியை அசைக்க உள்ளார். அவர் சி.ஜோசப் விஜய்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
"பிரிட்டனில் போட்டியிடும் இந்திய கார் பந்தய வீரர்களுக்கு ஆதரவளிக்கவும் 44 கார்கள் கொண்ட வரிசைக்கு முன்னால் சில்வர்ஸ்டோன் சுற்று பந்தயத்தை அதிகாரபூர்வமாக தொடங்கி வைப்பதற்கு அவர் (ஜோசப் விஜய்) எங்களுடன் இணைய உள்ளார்" எனவும் லூ மான் கோப்பை போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சனிக்கிழமை நடைபெறவுள்ள பந்தயத்திற்காக தாங்கள் மிகவும் ஆவலுடன் காத்திருப்பதாகவும் எக்ஸ் பக்கத்தில் லு மான் நிர்வாகம் கூறியுள்ளது.
அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தயப் போட்டி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற உள்ளது. 2026ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது சுற்றில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க உள்ளார்.
அவர் இந்திய வீரர்களுக்கு ஆதரவளிக்க இருப்பதாக, லு மான் கோப்பை ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தப் போட்டியில் விராஜ் நிறுவனத்தின் ரெட் ஆன்ட் (RedAnt) அணிக்காக LMP3 Pro/Am பிரிவில் பிரெஞ்சு கார் பந்தய வீரர் ரொமைன் வோஸ்னியாக்குடன் இணைந்து பங்கேற்க உள்ளதாக, லு மான் கோப்பை நிர்வாகம் கூறியுள்ளது.
இதை எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள லு மான் கோப்பை நிர்வாகம், "சில்வர்ஸ்டோனில் LMP3 பிரிவில் அறிமுகமாகும் அஜித்குமார், ரோமெய்ன் வோஸ்னியாக் ஜோடியுடன் நீங்களும் இணைந்து பயணிக்கலாம்" என்கிறது.
"இந்த இந்திய/பிரெஞ்ச் ஜோடி ஒன்றாக முதல்முறையாக இணைகிறது. சில்வர்ஸ்டோனில் அவர்களால் சாத்தியமாக்க முடியுமா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் இருந்து அஜித்குமாருடன் முன்னாள் ஃபார்முலா ஒன் பந்தய வீரரான நரேன் கார்த்திகேயன், ஆதித்யா படேல் ஆகியோர் இணைய உள்ளனர்.
லு மான் கோப்பை பந்தயம்
கடந்த 2016ஆம் ஆண்டு லு மான் கோப்பை பந்தயம் தொடங்கப்பட்டது. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்ட போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
ஒற்றை இருக்கை பந்தயமாக ஃபார்முலா ஒன் உள்ளது. ஆனால், லு மான் கோப்பை என்பது இரு வீரர்கள் ஒரு காரை பகிர்ந்துகொண்டு ஓட்டும் நீண்டநேர பந்தயமாக நடத்தப்படுகிறது.
இதில் LMP3, LMP3 Pro/Am மற்றும் GT3 ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன. நடிகர் அஜித்குமார் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லு மான் புரோட்டோடைப் காரை LMP3 Pro/Am பிரிவு பந்தயத்தில் ஓட்ட உள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்க இருப்பதால் பிரிட்டன்வாழ் தமிழர்கள் பந்தயம் நடக்கவுள்ள இடத்தில் வெள்ளிக்கிழமையன்று கூடியுள்ளனர். இதைக் கவனித்த நடிகர் அஜித்குமார், அவர்களுக்கு சில வேண்டுகோள்களை முன்வைத்தார்.
"இது கட்டுப்பாடு மிகுந்த பகுதியாக உள்ளது. தயவு செய்து ஓரமாக நில்லுங்கள்" என அவர் பேசும் காணொளி இணையத்தில் பரவியது.
சனிக்கிழமையன்று 5.891 கி.மீ அளவுள்ள கிராண்ட் பிரிக்ஸ் தடத்தில் இரண்டு மணிநேரப் பந்தயமாக போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 3ஆம் தேதியன்று 110 விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார். "தமிழ்நாட்டில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். சர்வதேச தரத்திலான ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம், அதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்" என அறிவித்திருந்தார்.
இதை வரவேற்ற நடிகர் அஜித்குமார் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வரிகளை மேற்கோள்காட்டி, "தமிழ்நாடு அரசின் சிறிய முயற்சி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான மாபெரும் பாய்ச்சல்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு