பாரம்பரியத் திருமணத் தடைகளை புதுமையாக உடைக்கும் இந்திய-அமெரிக்க ஒரு பாலின தம்பதிகள்

பிரசுரிக்கப்பட்டது

பாரம்பரிய முறையில் திருமணம் செய்ய வழியில்லாததால், அமெரிக்காவில் உள்ள ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது திருமணத்தை நடத்துவதற்கு புதிய வழிகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவிக்கிறார் சவிதா படேல்.

சமீர் சமுத்ரா மற்றும் அமதி கோகலே ஆகிய இருவரும் ஹிந்து பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினர். ஆனால் அவர்களுக்கு எதிர்பாராத தடங்கல் ஏற்பட்டது. என்ன தெரியுமா? புரோகிதர் கிடைக்கவில்லை.

"நாங்கள் ஹிந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினோம். ஆனால் புரோகிதர்கள் பலர் முடியாது என்று கூறிவிட்டார்கள். நான் ஓரினச் சேர்க்கையாளர் என்பதால் திருமணத்தை நடத்தி வைப்பதற்கு பல மடங்கு பணம் தரவேண்டும் என்று புரோகிதர்களில் ஒருவர் கேட்டபோது மிகவும் வேதனையாக இருந்தது" என்கிறார் சமீர். இவர் அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வசித்து வருகிறார்.

"வேண்டா வெறுப்பாக வரும் ஒரு புரோகிதர்" மூலம் தங்களது திருமணத்தை நடத்த விரும்பாத இந்த இணை வேறு வழிகளைத் தேடியது.

"எங்கள் நண்பர்களில் ஒருவர் புரோகிதராகச் செயல்படுவதற்கான அடிப்படை அம்சங்களைக் கற்றுக் கொண்டார். ஒரு பாலின திருமணத்திற்கு தேவைப்படும் வகையிலான ஹிந்து சடங்குகளை நாங்கள் தேர்வு செய்து கொண்டோம்" என்று சமீர் கூறினார்.

அமெரிக்காவில் வசிக்கும் பல இந்தியத் தம்பதிகள் பாலிவுட் பாணியில் மிகவும் ஆடம்பரமான, அதே நேரத்தில் ஹிந்து பாரம்பரிய முறையிலான திருமணத்தை நடத்த வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். உண்மையில் இது ஒரு பாலினத் திருமணத்தை விட மிகவும் எளிதானது. அமெரிக்காவில் ஒருபால் திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இருந்த போதிலும் இந்தியர்கள் மத்தியில் தயக்கம் இருக்கிறது.

அமெரிக்காவில் ஒருபாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்ட பிறகு 3 லட்சத்துக்கும் அதிகமான ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் திருமணத்தில் புனிதச் சடங்குகளைச் செய்பவர்கள் தங்களை ஒதுக்கி வைப்பதாக இந்திய-அமெரிக்கர்கள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவில் கோயில்கள் ஒரே பாலின திருமணங்களை நடத்த மறுக்கின்றன. புரோகிதர்கள் தங்களது தொலைபேசி அழைப்புகளிலேயே மறுப்பைக் கூறிவிடுகிறார்கள். அல்லது இந்த நிகழ்வுகளுக்கு வரும் வகையில் தங்களது நிகழ்ச்சிநிரலை மாற்றியமைக்க விரும்புவதில்லை. வேறு சிலர் திருமண நாளன்று வராமல் தவிர்த்துவிடுகிறார்கள்.

இத்தகைய அனுபவங்கள் இந்திய-அமெரிக்க ஓரினச் சேர்க்கையாளர்களை வேறு வகையில் சிந்திக்கத் தூண்டியது. தங்களது நண்பர்கள், நலம் விரும்பிகள் மூலமாக தனித்துவமான சடங்குகளை உருவாக்க அவர்கள் முயன்றார்கள்.

இதற்கு உதாரணம் சப்னா பாண்ட்யா என்ற பெண் புரோகிதர். ஹிந்து மதத்தில் பெண் புரோகிதர் என்ற வழக்கமே கிடையாது. இவர் புரோகிதரானதற்குப் பின்னணியில் ஒரு கதை இருக்கிறது.

சப்னா பாரம்பரிய முறைப்படி திருணம் செய்யவிரும்பியபோது, அவரும் பாகிஸ்தானைச் சேர்ந்த அவரது இஸ்லாமிய மனைவி சேஹெரும் தடைகளை எதிர்கொண்டார்கள். அதுவே சப்னா பாண்ட்யாவை புரோகிதராக்கிவிட்டது.

"நான் கோயிலுக்குச் சென்று ஒரு புரோகிதரைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பவில்லை. அதேபோல எனது மனைவியும் மசூதிக்குச் சென்று ஒரு இமாமிடம் கோரிக்கை வைக்கத் தயக்கம் காட்டினார். அதனால் எங்களது திருமண விழாவை நாங்களே வடிவமைத்துக் கொண்டோம்" என்கிறார் சப்னா.

திருமணத்தைக் குறிக்கும் வகையிலான ஹிந்து மந்திரங்களையும், குரானில் இருந்து வசனங்களையும் அவர்கள் தேர்ந்தெடுத்தனர்.

சிறுபான்மை மக்களுக்காகக் குரல் கொடுக்கும் லாப நோக்கற்ற ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் சப்னா. இப்போது பெரும்பாலும் LGBTQ திருமணங்களை தலைமையேற்று நடத்துவது முக்கிய வேலையாகிவிட்டது.

அவரைப் போன்று இன்னும் பல புரோகிதர்கள் இருக்கிறார்கள். தங்களது வழக்கமான வேலைகளுக்கு நடுவே பெண்கள் மீதான வெறுப்பு, ஆணாதிக்கம் ஆகிவற்றை ஒழிக்க உறுதி கொண்டிருக்கிறார்கள். ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையேதான் திருமணம் சாத்தியம் என்று நம்பும் பாரம்பரிய புரோகிதர்களுக்கு இது ஒரு சவாலாகி இருக்கிறது.

சமண மதத்தைச் சேர்ந்த அபிஷேக் சங்கவி வரி ஆலோசகராகப் பணியாற்றுகிறார். கூடவே புரோகிதராகவும் செயல்படுகிறார். 2019-ஆம் ஆண்டு இவர் நடத்தி வைத்த வைபவ் ஜெயின் மற்றும் பராக் ஷா ஆண்பால் திருமணம் உலகம் முழுவதும் உள்ள ஏராளமான ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு ஊக்கமளித்தது.

"அந்த இரு நல்ல இளைஞர்களும் சமண மத முறைப்படி திருமணம் செய்து கொள்ள விரும்பினார்கள். கருணைதான் சமணத்தின் அடித்தளம். எல்லா மதங்களும் அன்பையே கற்பிக்கின்றன" என்கிறார் சங்கவி.

சுகவக் தாஸ் இதை ஒப்புக் கொள்கிறார். கிறிஸ்தவ மதத்தில் இருந்து ஹிந்து மதத்துக்கு மாறிய இவர், சமஸ்கிருதத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள லட்சுமி நாரயண் கோயிலில் தலைமைப் பூசாரியாக இருக்கும் இவர் ஆயிரக்கணக்கான திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார்.

"[ஹிந்து மத நூல்களில் ஓரினச் சேர்க்கையாளர்கள்] திருமணம் செய்யக் கூடாது என்று எங்கும் சொல்லப்பட்டிருப்பதாகத் எனக்குத் தெரியவில்லை," என்று அவர் கூறுகிறார்.

அண்மையில் தான் நடத்தி வைத்த ஓரினச் சேர்க்கை திருமணத்தை அவர் நினைவுகூர்ந்தார். "எங்களது பாரம்பரியத்தில் இடம் கொடுத்ததற்காக நன்றி" என்று அந்த மணமகனின் வயதான பெற்றோர் கண்ணீர் மல்கக் கூறியதாக அவர் தெரிவித்தார்.

"நாம் அனைவரும் இந்த உலகில் ஆன்மாக்கள். சிலருக்கு ஆண் உடலும், சிலருக்கு பெண் உடலும் வாய்க்கின்றன. ஆனாலும் நாம் அனைவரும் சமமான ஆன்மாக்கள்தான்"

மோனிகா மார்கெஸ் - நிக்கி பரூவா ஆகியோரின் பெண்பால் திருமணத்தையும் தாஸ் நடத்தி வைத்திருக்கிறார்.

"மோனிகாவும் நானும் எங்கள் பாரம்பரியத்தின் அடிப்படையை உணர்ந்தவர்கள். சிறு வயதில் இருந்தே பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு கண்டிருந்தோம்" என்கிறார் இந்திய-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்த தொழில்முனைவோரும் எழுத்தாளருமான நிக்கி பரூவா.

அவருடைய திருமண இணை மெக்சிகன்-அமெரிக்க சமூகத்தைச் சேர்ந்தவர். புரோகிதரைக் கண்டுபிடிப்பதில் அவர்களுக்கும் சிக்கல் இருந்திருக்கிறது. கடைசியில் தாஸ் மூலமாக தங்களது கனவு நிறைவேறியதாகக் கூறுகிறார் பரூவா.

"அவர் ஒருபோதும் எங்களைச் சங்கடமாக உணர வைக்கவில்லை. அது ஓர் இயற்கை அனுபவமாகவும் அழகாகவும் இருந்தது" என்று அவர் கூறினார்.

"அனைவரும் எங்களைச் சேர்ந்தவர்கள் என்பது போல் அது உணரவைத்தது."

தாஸ் மற்றும் சப்னா போன்ற முற்போக்கு புரோகிதர்களுக்கு இப்போது அமெரிக்கா முழுவதும் தேவை அதிகரித்துள்ளது. திருமணத்தை நடத்திவைக்க சரியான நபர் கிடைக்காமல் தவிக்கும் தம்பதிகளுக்காக வேறு நகரங்களுக்குக்கூட அவர்கள் பறந்து செல்கிறார்கள்.

சான் பிரான்சிஸ்கோவுக்கு அனைவரையும் ஏற்றுக் கொள்ளும் பக்குவப்பட்ட நகரம் என்ற வரலாறு இருந்தபோதிலும், அங்கும் ஒரு பாலினத் திருமணங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களுக்கு தட்டுப்பாடு உள்ளது. அங்குள்ள பல ஹிந்துக் கோயில்கள் ஒரு பாலினத் திருமணங்களை அனுமதிப்பதில்லை. இதுபற்றி அறிந்தபோது மாதுரி அஞ்சியும் ப்ரீத்தி நாராயணனும் கவலையடைந்தார்கள்.

"இறுதியாக தெற்காசிய LGBTQ குழு வழியாக புரோகிதர் ராஜா பட்டரை நாங்கள் கண்டுபிடித்தோம். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தைச் சேர்ந்த அவரும் ஓரினச் சேர்க்கையாளர்." என்று கூறினார் ப்ரீத்தி

"நாங்கள் சடங்குகளில் வேடிக்கையான பகுதிகளை வைத்துக் கொண்டு சலிப்பான பகுதிகளை அகற்றிவிட்டோம். நாங்கள் இருவரும் பெண்கள் என்பதால், ஆணுக்கும் பெண்ணுக்கும் திருணம் செய்யும் சடங்குகள் இருப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியது"

இத்தகைய புதுமையான விழாக்கள் LGBTQ சமூகத்தால் மட்டுமல்ல, விழாக்களில் உள்ள தவறான மனப்பாங்கு மற்றும் ஆணாதிக்கத்தை அகற்றுவதற்கு விரும்பும் இருபாலின தம்பதிகளாலும் வரவேற்கப்படுகின்றன.

"நான் முழு மனதோடு ஓர் இருபால் சேர்க்கையாளராக (Bisexual) இருக்க முடியும் என்ற எனது கண்டுபிடிப்பு, மதங்களைக் கடந்த மற்றும் புதுமையான திருமணங்களை நடத்த எனக்கு உதவியது, "என்று கூறுகிறார் தஹில் சர்மா. இவர் முற்போக்கு ஹிந்துக்கள் கூட்டமைப்பான சாதனாவின் உறுப்பினர்.

"திருமணம் தொடர்பான அணுகுமுறையில் அது தொடர்பான தொழில்களிலும் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கிவிட்டன" என்கிறார் திருமணவிழா ஏற்பாட்டாளரான பூர்வி ஷா.

புரோகிதர்கள், ஏற்பாட்டாளர்கள், மருதாணி கலைஞர்கள், உணவு தயாரிப்பவர்கள் என அவரிடத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்கிறார் அவர்.

"இப்போது இந்தத் துறையில் ஈடுபட்டிருக்கும் பெரும்பாலானவர்கள் முடியாது என்பதைக் காட்டிலும் ஆம் என்றே கூறுகின்றனர். ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களது திருணத்துக்காக என்னை அணுகினால் நான் மிகவும் மகிழ்ச்சியடைவேன்" என்கிறார் பூர்வி ஷா.

"ஆயினும் இன்னும் பல மனங்கள் இன்னும் மாற வேண்டியிருக்கிறது" என்கிறார் தெற்கு கலிபோர்னியாவில் அதிகம் தேடப்படும் மருதாணிக் கலைஞரான நேஹா அஸ்ஸார். மதங்களைக் கடந்த அல்லது புதுமையான திருமணங்களுக்காகவே பிரத்யேகமாக தனது கலையில் மாற்றத்தைக் கொண்டு வந்ததற்காக பெயர் பெற்றவர் நேஹா.

உதாரணத்துக்கு, மணமகளின் மருதாணி வடிவத்துக்குள் மணமகனின் பெயரை மறைத்துவைக்கும் பாரம்பரியத்தை நேஹா மாற்றியமைத்தார்.

"இரண்டு மணப்பெண்களின் பெயர்களை மருதாணிக்குள் ஒளிப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்"

சவிதா படேல், சான் பிரான்சிஸ்கோவை தளமாகக் கொண்ட ஒரு சுயாதீன பத்திரிகையாளர். புவிசார் அரசியல், தொழில்நுட்பம், பொது சுகாதாரம் மற்றும் புலம்பெயர் இந்தியச் சமூகம் பற்றி எழுதுபவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :