பஞ்சாபில் போலி மதுபானம் அருந்தி உயிரிழந்தோர் எண்ணிக்கை 86ஆக உயர்வு - விரிவான தகவல்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

பஞ்சாபில் போலி மதுபானம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 86ஆக உயர்ந்துள்ளது. இந்த இறப்புகள் அனைத்தும் எல்லைப்பகுதியை ஒட்டியுள்ள டார்ன் தரன், அமிர்தசரஸ் மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் நிகழ்ந்துள்ளன.

இதில் அதிகபட்சமாக டார்ன் தரனில் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர்

இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட 100க்கும் மேற்பட்ட சோதனைகளில் போலி மதுபானத்தை விநியோகித்த கும்பலை சேர்ந்த 25 பேரை பஞ்சாப் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் ஏற்கனவே உத்தரவிட்டுள்ள நிலையில், ஏழு அரசுத்துறை அதிகாரிகளும், ஆறு காவல்துறையினரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்று அந்த மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

முன்னதாக, போலி மதுபான பயன்பாடு பல்வேறு பகுதிகளிலும் பரவியுள்ளதால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா கூறினார்.

"போலி மதுபானத்தை விநியோகித்த குழுவின் மூளையாக செயல்பட்ட ஒருவர் உள்பட அந்த குழுவை சேர்ந்த பல முக்கிய நபர்களை கைது செய்துள்ளோம்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆளும் காங்கிரஸ் கட்சி "மாநிலங்களுக்கு இடையிலான மது கடத்தலை தடுக்க" தவறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

குறிப்பாக, இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க உத்தரவிட வேண்டுமென்று ஷிரோமணி அகாலிதளம் (எஸ்ஏடி) கட்சி கோரியுள்ளது.

இருந்தபோதிலும், இந்த விவகாரத்தை "அரசியலாக்க வேண்டாம்" என்றும் இதுபோன்ற சம்பவங்கள் முந்தைய பாஜக கூட்டணி ஆட்சியிலும் நடந்துள்ளதாகவும் பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் கருத்துத் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் டிஜிபி டிங்கர் குப்தா கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து ஏராளமான போலி மதுபானங்கள், கலன்கள் போன்றவை மீட்கப்பட்டு அவை இரசாயன பகுப்பாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளன.

மேலும், இந்த பிராந்தியத்தில் போலி மதுபான கும்பல்களின் செயல்பாடு முடக்கப்பட்டு அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும்" என்று அவர் மேலும் கூறினார்.

தங்களது கிராமத்தில் போலி மதுபானம் தொடர்பாக தொடர்ச்சியாக மரணங்கள் நடந்து வருவதாக முச்சால் எனும் கிராமத்தின் முன்னாள் தலைவர் சுக்ராஜ் சிங் கூறுகிறார்.

"எங்கள் கிராமத்தில் மட்டும் 10 பேர் இறந்துள்ளனர். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். அரசு நிர்வாகம் மற்றும் காவல்துறை பொறுப்பு கூற வேண்டும்," என அவர் தெரிவித்துள்ளார்.

"என் குடும்பத்தை நொறுங்க வைத்தவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும்," என்று கூறுகிறார் உயிரிழந்தவர்களில் ஒருவரான ஜஸ்வீந்தர் சிங் என்பவரின் மனைவி வீரத் கவுர்.

இது தொடர்பாக ஒரு பெண் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் உடல்களுக்கு உடற்கூறாய்வு செய்யப்பட்டு இறப்புக்கான காரணம் கண்டறியப்படும்.

ஆந்திராவில் சானிடைசர் குடித்து 10 பேர் பலி

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள குரிடேடு கிராமத்தில் சானிடைசர் குடித்து 10 பேர் உயிரிழந்தனர்.

கடந்த சில நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டதால் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் போதைக்காக சானிடைசரை குடித்ததாகக் கூறப்படுகிறது. தன்னார்வலர்கள் வழங்கிய சானிடைசரை சாராயத்துடன் கலந்து குடித்து உள்ளனர். இந்த சம்பவம் கடந்த 4 சில நாட்களுக்கு முன் நடந்து உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட காவல் உயர் அதிகாரி கெளசல், "அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள். குளிர்பானத்துடன் சானிடைசரை கலந்து அருந்தி உள்ளனர்," என தெரிவித்தார்.

அந்த சானிடைசரில் வேறு ஏதும் நச்சுப் பொருட்கள் கலந்திருந்ததா என்றும் விசாரித்து வருகிறோம் என்று அவர் கூறினார்.

"கொரோனா தொற்று காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், பலரிடம் சானிடைசரை அருந்தும் பழக்கம் இருக்கிறது," என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் அவர் கூறி உள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: