You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
புதின், ஜின்பிங் உள்பட பிரிக்ஸ் தலைவர்களுக்கு சைவ விருந்தா? ராகுல் கருத்தும் சூடு பிடிக்கும் விவாதமும்
பிரிக்ஸ் 2026 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற சிறப்பு விருந்துக்கான உணவுப் பட்டியல் சமூக ஊடகங்களில் தீவிர விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. "80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள்" என்று காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார்.
உண்மையில், இந்த விவாதமானது டெல்லியில் உள்ள 'பாரத் மண்டபத்தில்' சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டு சிறப்பு விருந்தை மையமாகக் கொண்டது.
ஏ.என்.ஐ செய்தி நிறுவன தகவலின்படி, இந்த விருந்தில் பனீர் லபாப்தார் (Paneer Lababdar), கூச்சி மார்மிக் (Gucchi Marmik), கேரட்-பீன்ஸ் பொரியல், தக்காளி பருப்பு சாறு, சிறுதானிய புலாவ் மற்றும் பீட்ரூட் ரைத்தா போன்ற உணவுகள் பரிமாறப்பட்டன.
தொடக்க உணவுகள் முதல் இனிப்பு வகைகள் வரை அசைவ உணவுகள் எதுவும் இடம்பெறவில்லை. இந்த உணவுப் பட்டியலை பிபிசி சுயாதீனமாக உறுதிப்படுத்தவில்லை.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரசுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு பதிலடி கொடுத்துள்ளார்.
பிடிஐ செய்தி நிறுவன தகவலின்படி, சனிக்கிழமை பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோதி அளித்த விருந்தில், பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்குப் பரிமாறப்பட்ட இந்திய உணவுகளில் 'பனீர் லபாப்தார்', 'கூச்சி மார்மிக்', 'பஜ்ரா (கம்பு) புலாவ்' மற்றும் இனிப்பு வகையாக 'ஷாதூத் ஃபிர்னி' (Shahtoot Phirni) ஆகியவை இடம்பெற்றிருந்தன.
காங்கிரஸ் கிண்டல்
பிரிக்ஸ் 2026 சிறப்பு விருந்துக்கான உணவுப் பட்டியல் குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'சோலே படூரே' (Chole Bhature) உணவின் புகைப்படத்தைப் பகிர்ந்து, "தெரிந்துகொள்ளுங்கள்: 80% இந்தியர்கள் அசைவ உணவு உண்பவர்கள். இந்திய அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை. என் சகோதரி செய்யும் சோலே படூரேவும் மிகவும் சுவையாக இருக்கும்." என்று குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் பதிவைப் பகிர்ந்த காங்கிரஸ் எம்.பி. பவன் கேரா, "மற்ற இந்தியர்கள் மீது தங்கள் உணவு விருப்பங்களை திணிக்கும் பாஜகவின் பழக்கம் ஏற்கனவே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது, உலகம் முழுவதிலுமிருந்து வருகை தரும் முக்கியப் பிரமுகர்கள் மீதும் தங்கள் விருப்பங்களைத் திணிப்பதன் மூலம் அவர்கள் அதை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர்" என்று எழுதியுள்ளார்.
"இந்தியா உணவு வகைகளில் செழுமையும் பன்முகத்தன்மையும் கொண்ட ஒரு நாடு; இங்கு உலகம் முழுவதிலுமிருந்து வரும் மக்கள் மிகச்சிறந்த அசைவ உணவுகளைச் சுவைத்து மகிழ்கின்றனர். அப்படியிருக்க, இந்திய கலாசாரத்தின் இந்தப் பகுதியை மறைக்க மோதி அரசு ஏன் முடிவு செய்தது? இந்தியாவை 'இந்தியா'வாக அடையாளப்படுத்தும் அந்தப் பன்முகத்தன்மையைக் கண்டு அது வெட்கப்படுகிறதா?"
மூத்த பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுதுகையில், "சுவாரஸ்யமாக, பிரிக்ஸ் இரவு விருந்தில் தலைவர்களுக்கான உணவுப் பட்டியல் 'முழுக்க முழுக்க' சைவ உணவாகவே இருந்தது. சைவ உணவை ஊக்குவிப்பதில் தவறில்லை; ஆனால் அது ஒரு தீவிரமான பிடிவாதமாக மாறக்கூடாது."
அவரது கூற்றுப்படி, "இந்தியாவில் பெரும்பான்மையான மக்கள் அசைவம் உண்பவர்கள். வெறும் 20 முதல் 30 சதவீதத்தினர் மட்டுமே சைவம் உண்பவர்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் தனித்துவமான உணவுப் பன்முகத்தன்மையே அதன் அடையாளம். மீன் இல்லாமல் கடற்கரை ஓர உணவு வகைகளோ, இறைச்சி இல்லாமல் அவாதி உணவு வகைகளோ இருக்க முடியாது."
ராஜ்தீப் சர்தேசாய் மேலும் கூறுகையில்"மதிப்பிற்குரிய விருந்தினர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், இந்தியாவின் உண்மையான சாராம்சத்தை வெளிப்படுத்தவும், உணவுப் பட்டியலில் சைவ மற்றும் அசைவ உணவுகள் என பலவகையான உணவுகள் இடம்பெற்றிருக்க வேண்டும். இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?"
ஏஐஎம்ஐஎம் தலைவர் கூறியது என்ன?
ஏஐஎம்ஐஎம் தலைவர் வாரிஸ் பதான் தனது எக்ஸ் பக்கத்தில், "நாம் இந்தியாவின் பன்முகத்தன்மையைப் பற்றி அதிகம் பேசுகிறோம், ஆனால் இந்த உணவுப் பட்டியலில் அந்தப் பன்முகத்தன்மை நீக்கப்பட்டுள்ளது."
"நீங்கள் சைவ உணவை ஊக்குவிக்கலாம், ஆனால் இந்தியாவின் உணவு கலாசாரத்தை சைவ உணவோடு மட்டும் சுருக்கிவிடாதீர்கள். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் அசைவ உணவு உண்கிறார்கள். நம் சமையலில் ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் மீன் ஆகியவை சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை."
அவர் மேலும் எழுதுகையில்,"உலகின் மிக முக்கியமான தலைவர்கள் இந்தியா வந்துள்ளனர். மட்டன் மசாலா ஃப்ரை, ஹைதராபாதி பிரியாணி, தந்தூரி சிக்கன், பட்டர் சிக்கன், கோவா மீன் குழம்பு போன்ற பிரபலமான இந்திய உணவுகள் மூலம் இந்தியாவின் முழுமையான சுவைகளை அவர்களுக்கு நாம் வழங்கியிருக்க வேண்டும்."என்று குறிப்பிட்டுள்ளார்.
"இந்தியாவின் பன்முகத்தன்மை என்பது மொழிகள் மற்றும் கலாசாரங்களில் மட்டுமல்ல, நம் உணவுத் தட்டுகளிலும் உள்ளது என்பதை உலகிற்குச் சொல்லுங்கள்." என்று வாரிஸ் பதான் கூறியுள்ளார்.
பாஜக கூறியது என்ன?
இரவு உணவுப் பட்டியல் குறித்துப் பலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதற்கு பதில் கொடுத்துள்ளார்.
"பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்களுக்குப் பரிமாறப்பட்ட இரவு உணவுப் பட்டியலை காங்கிரஸ் கட்சி அரசியலாக்குவதை என்னால் நம்ப முடியவில்லை."
ரிஜிஜுவின் கூற்றுப்படி, "எங்கள் விருந்தினர்கள் இந்திய சைவ உணவை ரசித்து உண்டனர்; அந்த உணவுகள் சுவை மற்றும் ஊட்டச்சத்து பன்முகத்தன்மை கொண்டவை, அத்துடன் பல்வேறு பிராந்தியங்களின் பாரம்பரியத்தைப் பிரதிபலிப்பவை."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு