You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
விஜய் தொடங்கி வைத்த கார் பந்தயத்தில் அஜித் எத்தனையாவது இடம் பிடித்தார்?
பிரிட்டனில் சனிக்கிழமை நடைபெற்ற 2026 லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். நடிகரும் மோட்டார் கார் பந்தய வீரருமான அஜித் குமார் பங்கேற்ற இந்தப் பந்தயத்தில், அவரது அணி 38-வது இடத்தைப் பிடித்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு லீ மான்ஸ் கோப்பை பந்தயம் தொடங்கப்பட்டது. ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தை ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபட்ட போட்டியாக இது பார்க்கப்படுகிறது.
ஒற்றை இருக்கை பந்தயமாக ஃபார்முலா ஒன் உள்ளது. ஆனால், லீ மான்ஸ் கோப்பை என்பது இரு வீரர்கள் ஒரு காரை பகிர்ந்துகொண்டு ஓட்டும் நீண்டநேர பந்தயமாக நடத்தப்படுகிறது.
சனிக்கிழமையன்று 5.891 கி.மீ அளவுள்ள கிராண்ட் பிரிக்ஸ் தடத்தில் இரண்டு மணிநேரப் பந்தயமாக இந்த போட்டி நடைபெற்றது. 2026-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் போட்டியின் ஐந்தாவது சுற்றில் சிறப்பு விருந்தினராக முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்று, போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் LMP3, LMP3 Pro/Am மற்றும் GT3 ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. நடிகர் அஜித்குமார் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட லீ மான்ஸ் புரோட்டோடைப் காரை LMP3 Pro/Am பிரிவு பந்தயத்தில் ஓட்டினார்.
38வது இடம்பிடித்த அஜித் அணி
இந்த போட்டியில் 38வது இடத்தை அஜித்குமார் பங்கேற்ற அஜித் ரேடாண்ட் அணி பிடித்துள்ளது. முதலிடத்தை ஏஎன்எஸ் மோட்டார்ஸ்போர்ட் அணியும் இரண்டாம் இடத்தை ஆர்-ஏஸ் ஜிபி (R-ACE GP) அணியும் பிடித்துள்ளன.
தமிழ்நாடு அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், "முதலமைச்சர் விஜய் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்கியூட்டுக்கு நேரில் சென்று, அங்குள்ள ரேஸ் கண்ட்ரோல் மற்றும் ரேஸ் சர்க்கியூட் ஆகியவற்றை பார்வையிட்டதோடு, நீண்டதூர கார் பந்தயத்தை நடத்துவதற்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், செயல்பாட்டு ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சில்வர்ஸ்டோன் ரேஸ் மியூசியத்தையும் பார்வையிட்டார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், முதலமைச்சர் விஜயுடன் விளையாட்டு துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
இதனிடையே, விஜய் மற்றும் அஜித் ஒன்றாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இருவரும் ஆரத்தழுவும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
'மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்'
முன்னதாக, செப்டம்பர் 3ஆம் தேதியன்று 110 விதியின்கீழ் அறிவிப்பு ஒன்றை, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார். "தமிழ்நாட்டில் புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும். சர்வதேச தரத்திலான ஸ்போர்ட்ஸ் பந்தயத் தடம், அதற்கான நவீன உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்" என அறிவித்திருந்தார்.
இதை வரவேற்ற நடிகர் அஜித்குமார் விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் வரிகளை மேற்கோள்காட்டி, "தமிழ்நாடு அரசின் சிறிய முயற்சி, இந்தியாவின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறைக்கான மாபெரும் பாய்ச்சல்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
உலகளவில் முதலீட்டாளர்களைச் சந்திக்கவும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும் முதலமைச்சர் ஜோசப் விஜய், கடந்த வியாழக்கிழமையன்று பிரிட்டனுக்கு சென்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு