இலங்கை இயற்கை பேரிடர் உயிரிழப்புகள் 8 ஆக உயர்வு - தற்போதைய நிலை என்ன?

- எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்
இலங்கையில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தங்களினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களினால் மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
கண்டி, நுவரெலியா, கேகாலை, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி, திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகள் இந்த இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ளன.
3014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் 952 குடும்பங்களைச் சேர்ந்த 3538 பேர் 51 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், 80 குடும்பங்களைச் சேர்ந்த 301 பேர் தமது உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ளனர்.
ஒரு வீடு முற்றாக சேதமடைந்துள்ள அதேவேளை, 290 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
உயிரிழப்புக்கள் எவ்வாறு நேர்ந்தன?

கண்டி மாவட்டத்தன் நாவலபிட்டி பகுதியில் வர்த்தக நிலையமொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடொன்று சரிந்து வீழ்ந்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 3 பெண்களும் அடங்குவதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.
அத்துடன், நுவரெலியா வட்டவல பகுதியில் நீரில் அடித்துச் சென்ற இருவர் உயிரிழந்துள்ளனர்.
புத்தளம் பகுதியில் கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வானிலை சிவப்பு அபாய எச்சரிக்கை

கடும் காற்று மற்றும் அலையின் சீற்றம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையான கரையோர பகுதிகளில் காற்றின் வேகம் 60 முதல் 70 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதனால், மறு அறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை கடலுக்கு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு கடற்றொழிலாளர்களிடம் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
புத்தளம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோர பகுதிகளில் காற்றின் வேகமானது மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என்பதுடன், அலை சற்று சீற்றமாக காணப்படும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடல்சார் தொழிலாளர்கள் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
மழை தொடர்பான அறிவிப்பு

மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சபரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.
மண்சரிவு அபாய எச்சரிக்கை
மூன்று மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ள போதிலும், மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவிக்கின்றது.
இதன்படி, கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் மற்றும் இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் குறிப்பிடுகின்றது.
வெள்ள அபாயம் தொடர்பில் அறிவிப்பு

கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் இன்று காலை திறக்கப்பட்டுள்ளமையினால், தாழ்நிலப் பகுதிகளிலுள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த வான் கதவுகளின் ஊடாக 130 கன அடி நீர் வெளியேறும் என்பதனால், மகாவலி ஆற்றை அண்மித்துள்ள உலபனை, கெலிஓயா, கம்பளை, பேராதனை, கட்டுகஸ்தோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு































