வௌவால் கடித்தால் ரேபிஸ் நோய் ஏற்படுமா? - தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், கமலாதேவி நல்லபனேனி
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
சமீபத்தில் கனடாவில் வௌவால் கடித்ததால் ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்டு 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அனைவரிடத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் பின்னணியில், வௌவால்களால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.
நிபா, எபோலா போன்ற நோய்கள் பரவுவதற்கு வௌவால்களே முதன்மைக் காரணம் என்று விஞ்ஞானிகள் முன்னரே கணித்திருந்தனர்.
கொரோனா வைரஸ் வௌவால்களிலிருந்து மனிதர்களுக்குப் பரவியதாகக் கருதப்பட்டாலும், இதில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
இத்தனை வகையான வைரஸ்கள் வௌவால்களிடமிருந்து பரவுவதற்குக் காரணம் என்ன? உண்மையில் அந்த உயிரினங்கள் உயிருக்கே ஆபத்தானவையா? அவற்றால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்னென்ன? வெளவால்களிடமிருந்து மனிதர்கள் தங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம்?

பட மூலாதாரம், Getty Images
இந்தியா உட்பட பல நாடுகளில் வௌவால்களை ஒரு தீய சகுனமாக, தீமையின் அடையாளமாக பார்க்கிறார்கள். இத்தகைய கருத்துக்கள் ஏன் பரவின என தெளிவாக தெரியாவிட்டாலும், வௌவால்கள் மூலம் பல வகையான வைரஸ்கள் பரவுகின்றன என்பதைத் தெரிந்துகொள்ளும் போது, வௌவாலைப் பார்த்த உடனே சற்று அச்சமும் கவலையும் ஏற்படுவது இயல்பானதே.
சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் தவிர, ரேபிஸ் போன்ற ஆபத்தான நோயையும் வௌவால்கள் பரப்புகின்றன. வௌவாலிடமிருந்து பரவிய ரேபிஸ் நோயால் கனடாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் உயிரிழந்ததாக 'கனடிய மருத்துவச் சங்க இதழ்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க கண்டத்தின் பல பகுதிகளில், ரத்தம் குடிக்கும் வௌவால்கள் மூலம் ரேபிஸ் நோய் பரவும் அபாயம் உள்ளதாக உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இருப்பினும், மொத்த வௌவால் எண்ணிக்கையில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவானவையே ரேபிஸ் நோயால் பாதிக்கப்படுகின்றன என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) குறிப்பிட்டுள்ளது. இருந்த போதிலும், வௌவால்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நோய்வாய்ப்பட்டது போலத் தோன்றும் வௌவால்களையோ அல்லது பகல் நேரத்தில் வழக்கத்துக்கு மாறாகச் செயல்படும் வௌவால்களையோ தொடவோ அல்லது தொந்தரவு செய்யவோ கூடாது.

பட மூலாதாரம், Getty Images
மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஆரோக்கியமாக இருக்கும் வௌவால்கள் பொதுவாக மனிதர்களைக் கண்டால் விலகிச் செல்லவே முயற்சிக்கும். அவை ஒருபோதும் வேண்டுமென்றே மனிதர்களைத் தாக்குவதில்லை.
பெரும்பாலான வௌவால்கள் அளவில் மிகச் சிறியவை. அவற்றின் சிறிய பற்களும், மென்மையானத் தாடைகளும் பூச்சிகளைப் பிடித்து உண்பதற்கேற்றவாறு அமைந்துள்ளன. இருப்பினும், ஹோரி வௌவால் , பெரிய பழுப்பு வௌவால் போன்ற சில குறிப்பிட்ட இனங்களுக்குப் பெரிய மற்றும் கூர்மையான பற்கள் உண்டு.
இவற்றை நாம் கவனக்குறைவாகக் கையாண்டால், நமது தோலில் ஆழமாகப் பதியும் அளவுக்கு அவை கடித்துவிடக்கூடும். எனவேதான், வௌவால்களை ஒருபோதும் கைகளால் பிடிக்கவோ அல்லது தொடவோ கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது.
ஒருவேளை வௌவால் கடித்துவிட்டால் அல்லது கீறிவிட்டால், காயம் ஏற்பட்ட இடத்தை உடனடியாக சோப்பு மற்றும் சுத்தமான நீரைக் கொண்டு நன்றாகக் கழுவ வேண்டும். அதன் பிறகு, தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
கனடாவைச் சேர்ந்த சிறுவனின் விஷயத்தில், வௌவால் அவன் முகத்தில் கடித்திருந்தபோதிலும், வெளிப்படையான காயம் ஏதும் தெரியாததால் அவனது பெற்றோர் அதை அறிந்திருக்கவில்லை.
வௌவால் கடித்தால் வலி ஏற்படலாம், ஆனால் ரத்தப்போக்கோ, பற்கள் பதிந்த தடமோ அல்லது வெளிப்படையான காயமோ இல்லாமல் போகவும் அதிக வாய்ப்புள்ளது.
எனவே, வௌவாலை நேரடியாகத் தொட்டாலோ அல்லது அது நம் உடலில் பட்டாலோ, காயம் எதுவும் தெரியவில்லை என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகிப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் ஆகும்.
ரேபிஸ் நோயின் அறிகுறிகள் வெளியே தெரிவதற்குப் பல வாரங்கள் அல்லது மாதங்கள் கூட ஆகலாம். எனவே, வௌவாலுடன் தொடர்பு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்திருந்தாலும் மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
காயம் வெளியில் தெரியாவிட்டாலும் ரேபிஸ் தடுப்பூசி தேவையா என்று மருத்துவரிடம் கேட்டு, அவரது அறிவுரைப்படி செயல்பட வேண்டும்.
ஒருவேளை கடித்த வௌவாலை உயிருடனோ அல்லது இறந்த நிலையிலோ பிடிக்க முடிந்தால், அதற்கு ரேபிஸ் பரிசோதனை செய்து 48 மணி நேரத்துக்குள் முடிவைப் பெற முடியும். பரிசோதனை முடிவுகளைப் பொருத்து மருத்துவரின் ஆலோசனையோடு ரேபிஸ் சிகிச்சை பெற காத்திருக்கலாம்.
கனடா சிறுவனின் மரணத்துக்கு வௌவால் கடித்தவுடன் மருத்துவரிடம் அழைத்துச் செல்லாததே காரணம் என்றும், இதற்குப் பின்னால் இருப்பது போதிய விழிப்புணர்வு இன்மை மட்டுமே காரணம் என்று 'கனடியன் மருத்துவச் சங்க இதழ்' சுட்டிக்காட்டியுள்ளது.
ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வௌவால்கள், பகல் நேரத்தில் வெளியில் நடமாடுவது, பறக்க முடியாமல் தரையில் விழுந்து கிடப்பது, மனிதர்கள் மிக அருகில் சென்றாலும் பயப்படாமல் அசைவற்று இருப்பது, மனிதர்களின் முகம் அல்லது உடலின் பிற பகுதிகளில் வந்து அமர்வது போன்ற வழக்கத்துக்கு மாறான அசாதாரண நடத்தைகளை வெளிப்படுத்தலாம்.
இருப்பினும், வௌவால்களிடம் இந்த அசாதாரண அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றாலும் கூட, அதற்கு ரேபிஸ் தொற்று இல்லை என்று நம்மால் உறுதியாகக் கூற முடியாது. எனவே, எத்தகைய வௌவாலாக இருந்தாலும் அதனிடமிருந்து விலகியிருப்பதே பாதுகாப்பானது.

பட மூலாதாரம், Getty Images
வௌவால்கள் வைரஸ்களின் இருப்பிடமா?
மனிதர்களுக்கு ஆபத்தான வைரஸ்களைப் பரப்புவதில் வௌவால்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ரேபிஸ், எபோலா, நிபா, மார்பர்க், மெர்ஸ் போன்ற கொடிய வைரஸ்களுக்கு வௌவால்களே இயற்கையான இருப்பிடமாக விளங்குகின்றன.
இத்தனை கொடிய வைரஸ்கள் உடலுக்குள் இருந்தாலும், வௌவால்களுக்கு எந்த நோயும் ஏற்படுவதில்லை. அவற்றின் உடலில் உள்ள தனித்துவமான நோய் எதிர்ப்பு மண்டலத்தால், இந்த வைரஸ்கள் வௌவால்கள் மீது எந்தத் தாக்கமும் செலுத்த முடிவதில்லை.
ஆசியா மற்றும் ஆஸ்திரேலியப் பகுதிகளில் காணப்படும் 'டெரோபோடிடே' குடும்பத்தைச் சேர்ந்த பழ வௌவால்களே நிபா வைரஸின் முதன்மை புகலிடமாகும். ஆப்பிரிக்காவில் 'ஈடோலன்' வகை பழ வௌவால்களில், நிபா மற்றும் ஹெண்ட்ரா வைரஸ்களை எதிர்க்கும் ஆன்டிபாடிகள் கண்டறியப்பட்டுள்ளன. இது, இந்த வைரஸ்கள் ஆப்பிரிக்க வௌவால் இனங்களிலும் உள்ளன என்பதைக் காட்டுகிறது.
நிபா வைரஸ் தொற்றினாலும் கூட, வௌவால்களுக்கு எந்தவொரு நோய் அறிகுறியும் வெளியில் தெரிவதில்லை. பாதிக்கப்பட்ட வௌவால்கள் மூலம் பன்றிகள், குதிரைகள் போன்ற பிற விலங்குகளுக்குப் பரவி, அவற்றின் வழியாக மனிதர்களை வந்தடையலாம்.
வௌவால்கள் கடித்த அல்லது அவற்றின் எச்சம்/சிறுநீர் பட்ட அசுத்தமான பழங்கள் மற்றும் பழச்சாறுகளை மனிதர்கள் உட்கொள்வதன் மூலமும் நேரடியாகப் பரவலாம்.
இந்த பழ வௌவால்களை 'மெகா வௌவால்கள்' என்றும் அழைப்பார்கள். உலகிலேயே மிகப்பெரிய வௌவால் இனங்களான இவை, பொதுவாக வெப்பமண்டல மற்றும் துணை வெப்பமண்டல பகுதிகளில் அதிகம் வாழ்கின்றன.
உலகையே நிலைகுலைய வைத்த கொரோனா வைரஸ் பரவலுக்கும் வௌவால்களே காரணம் என்று பரவலாகப் பேசப்பட்டது. ஆனால், பல விஞ்ஞானிகள் வௌவால்களை மட்டும் இதற்குக் குற்றம் சாட்டக் கூடாது என்று வாதிடுகின்றனர்.
இந்த வைரஸ் வௌவால்களிடம் தோன்றியிருக்கலாம். ஆனால், அது வௌவால்களிடம் இருந்து நேரடியாக மனிதர்களுக்குப் பரவவில்லை. மாறாக, எறும்புத்தின்னி போன்ற ஒரு இடைநிலை உயிரினத்தின் மூலமாகவே மனிதர்களுக்குப் பரவியிருக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர்.
கொரோனா போன்ற கொடிய வைரஸ்களிடமிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் காப்பு மருந்துகளைக் கண்டறிய, நமக்கு வௌவால்களின் உதவி மிக மிக அவசியம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஏனெனில், கொடிய வைரஸ்களைத் தன் உடலுக்குள் வைத்திருந்தும், தனக்கு எந்தப் பாதிப்பும் வராமல் வாழும் வௌவால்களின் அசாத்திய நோய் எதிர்ப்பு ஆற்றலை நாம் முழுமையாகப் புரிந்துகொண்டால், அது மனிதகுலத்துக்கு நன்மை பயக்கும் என சில விஞ்ஞானிகள் வாதங்களையும் முன்வைப்பது குறிப்பிடத்தக்கது.

பட மூலாதாரம், Getty Images
வௌவால்களால் ஏற்படும் நன்மைகள் என்ன?
வௌவால்கள் என்றாலே நமக்கு நோய்களும் பயமும்தான் நினைவுக்கு வரும். ஆனால், அவை இந்த உலகுக்குச் செய்யும் நன்மைகள் நாம் கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்குப் பெரியவை என விஞ்ஞானிகள் பட்டியலிடுகிறார்கள்.
காடுகளை உருவாக்குவதில் வௌவால்கள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன. பறவைகளை விட இரண்டு மடங்கு அதிகமான விதைகளை வௌவால்கள் காடெங்கும் பரப்புகின்றன.
குறிப்பாக, மரங்கள் அழிக்கப்பட்ட வெப்ப மண்டலக் காடுகள் மீண்டும் இயற்கையாக வளர்வதற்கும், அடர்ந்த காடாக மாறுவதற்கும் வௌவால்களின் மூலம் விதைகள் பரவுவதே முதன்மைக் காரணமாக உள்ளது.
நாம் உண்ணும் உணவு முதல் அழகுசாதனப் பொருட்கள் வரை, வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் மருத்துவப் பொருட்கள் வரையிலான பல்வேறு வகையான பொருட்களின் உற்பத்திக்கு வௌவால்களின் பங்களிப்பு தேவைப்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் வௌவால்களின் நிலை என்ன?
சுமார் 3.28 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்தியாவின் பரந்த இயற்கை வாழிடங்களில், வியக்கத்தக்க வகையில் 135 வௌவால் இனங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்த 135 இனங்களில், 16 இனங்கள் இந்தியாவுக்கே உரித்தானவை. இவை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் காணப்படுவதில்லை.
பல வௌவால் இனங்களின் எண்ணிக்கை மிக வேகமாகச் சரிந்து வரும் போதிலும், இந்தியாவில் தற்போது வெறும் 12 இனங்களுக்கு மட்டுமே சட்டப்பூர்வப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வௌவால் இனங்கள் அழிந்துபோகாமல் தடுப்பதற்காக, சர்வதேச வௌவால் பாதுகாப்பு அமைப்பு (BCI) மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (NCF) ஆகிய அமைப்புகள் இணைந்து இந்தியாவில் வௌவால்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
பல்வேறு துறை நிபுணர்கள் மற்றும் மத்திய அரசு முகமைகளுடன் இணைந்து ஒரு விரிவான செயல் திட்டத்தை உருவாக்குவதன் மூலம், மிகக் கடுமையான அழிவின் விளிம்பில் உள்ள இனங்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த அவை இலக்கு கொண்டுள்ளன.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் நகரமயமாக்கல் காரணமாகக் குகைகள், வரலாற்றுச் சின்னங்கள் சிதைக்கப்பட்டு, அவற்றின் வாழ்விடங்கள் முற்றிலுமாக மாற்றமடைந்து வருவதாக ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்திய வௌவால்களின் தற்போதைய நிலையைத் துல்லியமாக அறிந்துகொள்ள பெரியளவிலான கூட்டு ஆய்வு நடத்தப்பட்டது. 27 முன்னணி அமைப்புகளைச் சேர்ந்த 34 நிபுணர்கள், சுமார் இரண்டு ஆண்டுகள் தொடர்ச்சியாகக் களப்பணி ஆற்றி "இந்தியாவின் வௌவால்களின் நிலை" என்ற விரிவான அறிக்கையைத் தொகுத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
ரத்தம் குடிக்கும் வௌவால்கள்
உலகில் வாழும் ஆயிரக்கணக்கான பாலூட்டிகளில், ரத்தத்தை மட்டுமே முதன்மை உணவாகக் கொண்டு வாழும் ஒரு சில அரிய உயிரினங்களில் 'வாம்பயர் வௌவால்' முதன்மையானது. இவை பொதுவாக மெக்சிகோ, மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வெப்பமண்டலப் பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றன.
இவை இரவு நேரத்தில் கீழே இறங்கி வந்து மாடுகள், பிற விலங்குகள் மற்றும் அரிதாக மனிதர்கள் மீதும் தாக்குதல் நடத்தி, ரத்தத்தை உணவாக உட்கொள்கின்றன.
வாம்பயர் வௌவால்கள் ரத்தத்தை உறிஞ்சுவதில்லை. அவை தங்களின் கூர்மையான முன் பற்களால் தோலின் மீது சிறிய கீறலை ஏற்படுத்தி, அந்த காயத்திலிருந்து வழியும் ரத்தத்தை நாக்கினால் நக்கித் குடிக்கின்றன.
மெக்சிகோ மற்றும் தென் அமெரிக்காவில் வாழும் இவ்வகை வாம்பயர் வௌவால்கள் பசுக்கள், குதிரைகள் போன்ற கால்நடைகளுடன் சேர்ந்து மான்கள், காட்டுப் பன்றிகள் மற்றும் சில சமயங்களில் நீர்நாய் போன்ற விலங்குகளின் ரத்தத்தையும் உணவாகக் கொள்கின்றன. கனடா சிறுவனின் முகத்தில் அமர்ந்தது இத்தகைய வௌவால்தான் என்று 'கனடிய மருத்துவச் சங்க இதழ்' தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
































