You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வளைகுடா பகுதியில் 20 இந்தியர்கள் இருந்த கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் - இதுவரை தெரியவந்தது என்ன?
அமெரிக்கா கினியா-பிசாவு நாட்டுக் கொடியுடன் கூடிய 'ஜல்வீர்' என்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தியதை உறுதிப்படுத்தியுள்ளது. ஓமன் வளைகுடா வழியாக இரானிய எண்ணெயைக் கடத்த முயன்ற இந்தக் கப்பல், 'கடல்வழி முற்றுகையை மீறியதாக' அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, ஓமனின் ஷினாஸ் துறைமுகம் அருகே இந்திய மாலுமிகளை ஏற்றிச் சென்ற மூன்றாவது கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதாக இந்தியா குற்றம் சாட்டியிருந்தது. இந்த கப்பலில் 20 இந்தியர்கள் இருந்ததாகத் தகவல் வெளியானது.
இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகம் இந்தத் தகவலைத் தெரிவித்திருந்தது.
இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் தகவல்
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கல் செய்தியாளர் சந்திப்பில் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
"ஜூன் 11 அன்று, கினியா-பிசாவு நாட்டுக் கொடியுடன் சென்ற 'எம்டி ஜல்வீர்' என்ற கப்பல், ஒமனின் ஷினாஸ் துறைமுகத்துக்கு அருகே பாதுகாப்புச் சம்பவத்தை எதிர்கொண்டது. இந்தக் கப்பலில் 20 இந்திய மாலுமிகள் உள்ளனர், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை" என்று அவர் கூறினார்.
கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கல் மேலும் கூறுகையில், "கப்பல் ஊழியர்களை ஷினாஸ் துறைமுகத்துக்கு அழைத்து வரும் பணிகள் தொடங்கியுள்ளன. இன்னும் ஆறு பேரை வெளியேற்ற வேண்டியுள்ளது" என்றார்.
அமைச்சகம் இந்தச் சூழலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. மேலும், வெளியுறவு அமைச்சகம், வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள், இந்திய கடற்படை மற்றும் பிற தேவையான துறைகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.
தற்போது இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்களில் 562 இந்திய மாலுமிகள் உள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 329 மாலுமிகள் ஹோர்மூஸ் நீரிணைக்கு மேற்கே வளைகுடா பகுதியிலும், 233 மாலுமிகள் ஓமன் வளைகுடாவில் ஹோர்மூஸ் நீரிணைக்கு கிழக்குப் பகுதியிலும் உள்ளனர்.
ஒட்டுமொத்த வளைகுடா பகுதி முழுவதும் சேர்த்து மொத்தம் 18,000-க்கும் மேற்பட்ட இந்திய மாலுமிகள் இருப்பதாக அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் முகேஷ் மங்கல் தெரிவித்துள்ளார்.
ஓமன் வளைகுடாவில் மூன்றாவது கப்பலை குறிவைத்த சென்ட்காம்
இந்த வாரம் ஓமன் வளைகுடாவில் மூன்றாவது கப்பலை சென்ட்காம் குறிவைத்தது.
சென்ட்காம் தகவலின்படி, இந்த வாரம் ஓமன் வளைகுடாவில் அமெரிக்கப் படைகளால் இலக்கு வைக்கப்பட்ட மூன்றாவது கப்பல் இதுவாகும். இதற்கு முன்னதாக, 'மாரிவெக்ஸ்' மற்றும் 'செட்டபெல்லோ' ஆகிய கப்பல்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
உண்மையில், 2026 ஏப்ரல் 13 முதல் ஹோர்மூஸ் நீரிணையில் உள்ள இரானியத் துறைமுகங்களுக்கு அமெரிக்கா கடல்வழி முற்றுகையைத் தொடங்கியது. இந்த காலகட்டத்தில், இரானை நோக்கிச் செல்லும் அல்லது இரானில் இருந்து வரும் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றன அல்லது திருப்பி அனுப்பப்படுகின்றன.
இதுவரை 134 கப்பல்களை அமெரிக்கப் படைகள் திருப்பி அனுப்பியுள்ளதாக சென்ட்காம் உரிமை கோரியுள்ளது. உத்தரவை மதிக்காத 8 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது, இதில் 'செட்டபெல்லோ' கப்பலும் அடங்கும்.
முற்றுகை இருந்தபோதிலும், நிவாரணப் பொருட்கள் அல்லது மருத்துவ உதவிகளை ஏற்றிச் சென்ற 42 கப்பல்களுக்குச் செல்ல அனுமதி அளித்ததாக அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.
அதே நேரத்தில், கப்பல் போக்குவரத்துக்கான கடல்வழி "முற்றிலும் மூடப்பட்டுள்ளது" என்று இரான் தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
இந்தியக் குழுவினரைக் கொண்ட கப்பல்கள் மீதான தாக்குதல்
எம்டி மாரிவெக்ஸ்: இந்தத் தாக்குதல் திங்கட்கிழமை, அதாவது ஜூன் 8-ஆம் நாளன்று நடத்தப்பட்டது. இதில் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் இதனை உறுதிப்படுத்தியிருந்தது.
எம்டி செட்டபெல்லோ: இந்தக் கப்பல் மீது புதன்கிழமை, அதாவது ஜூன் 10 அன்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலும் 24 இந்திய மாலுமிகள் இருந்தனர். இந்தத் தாக்குதலில் மூன்று இந்திய மாலுமிகள் உயிரிழந்தனர். எஞ்சிய 21 இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
எம்டி ஜல்வீர்: இந்தக் கப்பல் மீது இன்று, அதாவது ஜூன் 11 அன்று தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில் 20 இந்திய மாலுமிகள் உள்ளனர். இதுவரை இதில் எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.
இரானுக்கு அமெரிக்காவின் புதிய அச்சுறுத்தல்
இதற்கிடையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை அன்று தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்கா இரான் மீது "இன்று இரவு மிகப்பெரிய தாக்குதலை" நடத்தும் என்று தெரிவித்துள்ளார்.
அந்தப் பதிவில், "அமெரிக்கா இன்று இரவு இரான் மீது மிகவும் சக்திவாய்ந்த தாக்குதலைத் தொடுக்கும். இரானின் கடற்படை, விமானப்படை, ரேடார், வான் பாதுகாப்பு அமைப்பு மற்றும் அதன் பெரும்பாலான ஆக்கிரமிப்புத் திறன்கள் ஏற்கெனவே அழிக்கப்பட்டுவிட்டன" என்று அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் இரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்புகளை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்றும், இரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகள் மீது முழுமையான கட்டுப்பாட்டைப் பெறும் என்றும் தனது சமூக ஊடகப் பதிவில் பதிவிட்டுள்ளார்.
கார்க் தீவு இரானுக்கு உத்தி ரீதியாக மிகவும் முக்கியமானதாகும். இரானின் பெரும்பாலான கச்சா எண்ணெய் ஏற்றுமதி இந்தத் தீவின் முனையம் வழியாகவே நடைபெறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு