You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கச்சா எண்ணெய் விலை சரிந்தாலும் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையாதது ஏன்?
- எழுதியவர், சந்தீப் ராய்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
இரான் போர் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலைக்கு சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திரும்பியுள்ளது.
இது, உலகின் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியாவுக்குப் பெரிய பொருளாதார நிவாரணத்தை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
வியாழக்கிழமை, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கான முக்கிய குறியீடாக கருதப்படும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை தற்காலிகமாக ஒரு பேரலுக்கு 72.48 அமெரிக்க டாலருக்கும் கீழ் சரிந்தது.
இது, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல்களைத் தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, அதாவது பிப்ரவரி 28 அன்று இருந்த அதே விலையாகும்.
உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்திற்கான முக்கிய கடல் வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடிய இரானின் பழிவாங்கும் நடவடிக்கைகளால், கடந்த நான்கு மாதங்களாக எரிசக்தி விலைகள் கடுமையாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தன.
ஜூன் 17 அன்று அமெரிக்காவிற்கும் இரானுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதில் இருந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. வரும் நாட்களில் இந்த விலை மேலும் குறையும் என்று சந்தை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
இரான் போரின் போது, எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 120 டாலர் வரை உயர்ந்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் கச்சா எண்ணெய் விலையில் இவ்வளவு கடுமையான சரிவு ஏற்பட்ட போதிலும், இந்தியாவில் சில்லறை எரிபொருள் விற்பனை விலையில் எந்த மாற்றமும் இல்லை.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக சமீபத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தோராயமாக ₹7.50 வரை உயர்த்தப்பட்ட நிலையில், விலைகளை நிலைப்படுத்த மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது.
'எகனாமிக் டைம்ஸ்' செய்தியின் படி, பொதுத்துறை நிறுவனங்கள் மூன்றும் தற்போது பெட்ரோல் விற்பனையில் நல்ல லாபத்தை ஈட்டி வருவதாகவும், டீசல் விற்பனையில் இன்னும் கூட சிறிய அளவில் நஷ்டம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த செய்தியின் படி, "சமீபத்திய கச்சா எண்ணெய் விலை சரிவின் பலன்கள் நுகர்வோரைச் சென்றடைய இன்னும் சிறிது காலம் ஆகலாம் என்று தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்."
பிபிசி நியூஸ் ஹிந்தியிடம் பேசிய சந்தை ஆய்வாளர்கள், இந்திய நுகர்வோர் ஏதேனும் நிவாரணத்தைப் பெற இரண்டு முதல் இரண்டரை மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும் என்றும், அதுவும் எரிசக்தி சந்தை தொடர்ச்சியாக நிலையாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்றும் கூறியுள்ளனர்.
அமைச்சகங்களுக்கு இடையிலான சந்திப்புகளை அரசு நிறுத்திவிட்டதா?
மேற்காசியாவில் பரவலான ராணுவ மோதலைத் தொடர்ந்து எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டபோது, சூழ்நிலையைக் கண்காணிப்பதற்காக இந்திய அரசு அமைச்சகங்களுக்கு இடையேயான ஒரு குழுவை உருவாக்கியது.
இக்குழுவிற்கு தினசரி அடிப்படையில் விவரங்கள் வழங்கப்பட்டன .
'மணி கன்ட்ரோல்' இணையதளத்தின் படி, "எண்ணெய் சந்தையில் சமீபத்தில் பதற்றங்கள் தணிந்திருப்பது அரசாங்கத்தின் எதிர்வினையிலும் பிரதிபலித்துள்ளது. மோதல் தொடங்கிய பிறகு தொடங்கப்பட்ட அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டங்கள் சத்தமின்றி தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது எரிசக்தி விநியோகத்தில் உடனடி இடையூறு ஏற்படும் என்ற கவலைகள் குறைந்துள்ளதைக் காட்டுகிறது."
அதன் படி, "ஆரம்பத்தில், இந்த விளக்கக் கூட்டங்கள் தினமும் நடத்தப்பட்டன, ஆனால் பின்னர் அவை வாரத்திற்கு இரண்டு முறை எனக் குறைக்கப்பட்டன. இந்த கூட்டங்களில் முக்கிய அமைச்சகங்களைச் சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டு, அரசாங்கத்தின் தயார்நிலை மற்றும் நெருக்கடி மேலாண்மை குறித்த தகவல்களை வழங்கினர்."
"பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அதிகாரிகள் இக்கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு, எரிபொருள் விநியோகத்தைப் பாதுகாப்பதற்கும் சந்தை நிலைத்தன்மையைப் பராமரிப்பதற்கும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை வழங்கினர். இந்த வாரம், திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் விளக்கக் கூட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை."
இந்தியாவிற்கு நிவாரணம்
'எகனாமிக் டைம்ஸ்' இதழின் படி, இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் சராசரி விலை பிப்ரவரி 27 அன்று ஒரு பேரலுக்கு 71.17 டாலராக இருந்தது.
அடுத்த நாள், அதாவது பிப்ரவரி 28 அன்று, அமெரிக்காவும் இஸ்ரேலும் இரான் மீது தாக்குதல் நடத்தின.
பெட்ரோலிய அமைச்சகத்தின் பெட்ரோலிய திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (பிபிஏசி) தரவுகளின்படி, ஜூன் 24 அன்று இந்தியப் பெட்ரோலியக் கூடையின் சராசரி விலை ஒரு பேரலுக்கு 70.71 டாலராக இருந்தது.
பிபிஏசி- இன் படி, ஜூன் மாதம் முழுவதும் இந்திய கச்சா எண்ணெய் தொகுப்பின் (Indian basket) சராசரி விலை ஒரு பீப்பாய்க்கு 86.31 டாலராக இருந்தது. அதே நேரத்தில் பிப்ரவரி 2026 இல் இது ஒரு பேரலுக்கு 72.47 டாலராக இருந்தது.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் அமைப்பின் இயக்குநரான அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்த தொகுப்பின் விலையும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி ஹிந்தி நியூஸிடம் அவர் பேசுகையில், "இந்தியா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் மூன்றாவது பெரிய நாடாகும். சர்வதேச சந்தையை விடக் குறைவான விலையில் இந்தியாவுக்கு எண்ணெய் கிடைக்க வேண்டும். இந்த தொகுப்பின் விலையும் அதிகமாகவே உள்ளது. இது குறித்து இந்திய அரசு ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்" என்றார்.
இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் சராசரி சர்வதேச விலை 'இந்தியக் தொகுப்பு' (Indian basket) என்று அழைக்கப்படுகிறது.
இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இரானிய எண்ணெய் மீதான தடையை அமெரிக்கா நீக்கியது.
இரானிய எண்ணெய் இந்திய சந்தையில் நுழைவதற்கான வாய்ப்பு இப்போது அதிகரித்துள்ளதாகச் சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இத்தகைய சூழ்நிலையில், நுகர்வோருக்கு நிவாரணம் வழங்குமாறு எரிபொருள் நிறுவனங்கள் மற்றும் அரசாங்கத்திற்கு வரும் அழுத்தம் அதிகரிக்கலாம், குறிப்பாக கச்சா எண்ணெய் விலைகள் நீண்ட காலத்திற்கு குறைவாகவே நீடித்தால் இந்த அழுத்தம் கூடும்.
குறைந்த எரிபொருள் விலையானது பணவீக்க அழுத்தங்களை மேலும் தணிக்கக் கூடும்.
உலகின் முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றான இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி செலவைக் குறைப்பதுடன், அதன் நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் குறைக்கும்.
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டதால் சர்வதேச எண்ணெய் விலைகளிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 20 மில்லியன் பேரல் எண்ணெய் ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடந்து சென்றுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, நிலைமை மேலும் மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்சார் போக்குவரத்தைக் கண்காணிக்கும் 'கெப்ளர்' இணையதளத்தின்படி, ஜூன் 25 அன்று ஹோர்முஸ் நீரிணை வழியாக மொத்தம் 54 சரிபார்க்கப்பட்ட வணிக மற்றும் எரிசக்தி சார்ந்த போக்குவரத்து நகர்வுகள் பதிவாகியுள்ளன.
வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு இந்திய நுகர்வோருக்கு உடனடியாகப் பலனளிக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இது அரசாங்கத்தின் எரிசக்தி மானியச் சுமையைக் குறைத்து, அதன் நிதி நிலையை மேம்படுத்தக்கூடும்.
சர்வதேச எண்ணெய் சந்தை நிபுணர் நரேந்திர தனேஜா, பிபிசி ஹிந்தி நியூஸிடம் பேசுகையில், இந்திய நுகர்வோருக்குச் செப்டம்பர் மாதத்திற்கு முன்பாக எரிபொருள் விலைகள் குறைய வாய்ப்பில்லை என்று கூறினார்.
"தற்போதைய விலைகளின் அடிப்படையில், வாங்கப்பட்ட எரிபொருள் இந்தியாவை வந்தடைய ஒரு வாரம் முதல் இரண்டு மாதங்கள் வரை ஆகலாம். ஏனெனில் இப்போது வந்து கொண்டிருக்கும் எண்ணெய், அதிக விலைக்கு வாங்கப்பட்டது.
தற்போது, இந்தியா 40 வெவ்வேறு நாடுகளிலிருந்து எண்ணெயை இறக்குமதி செய்கிறது. அமெரிக்கா, மெக்சிகோ, பிரேசில் ஆகிய நாடுகளிலிருந்து எண்ணெய் இந்தியாவை வந்தடைய சுமார் இரண்டு மாதங்களும், ரஷ்யாவிலிருந்து வர ஒரு மாதமும் ஆகும்."
உண்மையில், இந்தியா தனது மொத்த கச்சா எண்ணெய் தேவையில் 88 சதவீதத்திற்கும் அதிகமாக இறக்குமதி செய்கிறது.
பிஐபி தகவலின்படி, இதற்கு முன்பு இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில் பாதி அளவு ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கடந்து வந்த நிலையில், இப்போது அது 30 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இறக்குமதியிலிருந்து இந்திய நுகர்வோருக்கு விநியோகம் செய்யும் வரையிலான கால அளவு ஏறக்குறைய இரண்டரை மாதங்கள் என்று நரேந்திர தனேஜா கூறுகிறார்.
இதற்கு முன்பு சௌதி அரேபியா போன்ற நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டதால், இந்த கால அளவு குறைவாக இருந்தது.
"இன்று பெட்ரோல் பங்குகளில் கிடைக்கும் எண்ணெய், இரண்டரை மாதங்களுக்கு முன்பு இந்திய நிறுவனங்களால் ஒரு பேரலுக்கு 110 முதல் 130 டாலர் வீதம் வாங்கப்பட்டதாகும்"என்று அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "என்னைப் பொறுத்தவரை, செப்டம்பர் மாதத்திற்குள் எண்ணெய் விலை குறையும். அதற்குள் நிறுவனங்கள் தங்களின் சில இழப்புகளை மீட்டெடுத்திருக்கும். அந்த நேரத்தில் பண்டிகைக் காலமும் தொடங்கியிருக்கும். அப்போது அரசாங்கம் எரிபொருள் விலையில் சில நிவாரணங்களை வழங்க முடியும்"என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அனைத்தும் சுமுகமாக நடக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையிலேயே இந்த மதிப்பீடு அமைந்துள்ளது என்றும் அவர் எச்சரிக்கிறார்.
இருப்பினும், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, எனவே இதற்கிடையில் விலைகள் எப்போதாவது உயரக்கூடும்.
அமெரிக்கா இப்போது இரான் போரிலிருந்து வெளியேற விரும்புவதால் இயல்பு நிலை திரும்பும் என்று பல ஆய்வாளர்களைப் போலவே நரேந்திர தனேஜாவும் நம்புகிறார்.
இதற்கு, "அமெரிக்காவின் உள்நாட்டு எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள 70 சதவீத உயர்வை" ஒரு காரணமாக அவர் கூறுகிறார்.
"இந்தப் போர் அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதித்துள்ளது, போரிலிருந்து வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை. இத்தகைய சூழ்நிலையில், சர்வதேச எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மை நீடிக்கும் என்று நம்பலாம்"என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் வெளிப்படைத்தன்மை இல்லாத சூழல்
சர்வதேச கச்சா எண்ணெய் விலை குறைப்பின் பலனை இந்திய நுகர்வோருக்கு வழங்குவது குறித்துச் சமூக ஊடகங்களிலும் ஒரு விவாதம் தொடங்கியுள்ளது.
ரெடிட் தளத்தில் ஒரு பயனர், "கடந்த மூன்று மாதங்களில் கச்சா எண்ணெய் கொள்முதல் (எதிர்கால ஒப்பந்தங்களின் அடிப்படையில்) சுமார் 15% குறைந்துள்ளது; ஆனால், இந்தியாவில் எரிபொருள் விலைகள் அதே விகிதத்தில் குறைந்ததாகத் தெரியவில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.
" சில நாடுகள் எரிபொருள் விலை குறைப்பை அறிவித்துள்ளன... ஆனால் கச்சா எண்ணெய் விலைகள் உயரும் போது மட்டும் உள்நாட்டில் விற்பனை விலைகளும் கடுமையாக உயருவதும், எண்ணெய் விலைகள் குறையும் போது நுகர்வோருக்கு அந்தப் பலன் கிடைக்காமல் போவதும் ஏன்?"
ஜி.டி.ஆர்.ஐ இயக்குநர் அஜய் ஸ்ரீவஸ்தவா, இந்திய அரசின் வெளிநாட்டு வர்த்தக பொது இயக்குநரகத்தில் 'வெளிநாட்டு வர்த்தக கூடுதல் பொது இயக்குநர்' பதவியை வகித்துள்ளார்.
பிபிசி ஹிந்தி நியூஸிடம் பேசிய அவர், "கச்சா எண்ணெயின் விலைக்கும், பெட்ரோல் பங்குகளில் கிடைக்கும் எண்ணெயின் விலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 30 டாலராக இருந்தபோதும், உள்நாட்டு விலை ஒரு லிட்டருக்கு 90-100 ரூபாய் வரை வசூலிக்கப்பட்ட காலங்களும் உண்டு. விலைகள் நிலைபெறும் வரை சூழ்நிலையைக் கண்காணிக்கும் வாய்ப்பும் அரசாங்கத்திற்கு இருக்கலாம்" என்றார்.
"கச்சா எண்ணெய் விலை குறையும் போது, அரசாங்கம் வரிகளை உயர்த்துகிறது. இன்று, அரசாங்கம் ஒரு வெளிப்படையான கட்டமைப்பை உருவாக்கி, சந்தை விலையுடன் ஒப்பிடுகையில், விற்பனை நிலையங்களில் கிடைக்கும் எண்ணெயில் எவ்வளவு சதவீதம் சுத்திகரிப்பு மற்றும் விநியோக நிறுவனங்களுக்குச் செல்கிறது என்பதையும், எவ்வளவு சதவீதம் மாநில மற்றும் மத்திய அரசுகளின் வரி என்பதையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் உள்ளது."
அஜய் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "2010 ஆம் ஆண்டில், மன்மோகன் சிங் அரசாங்கம் நிர்வாக விலை பொறிமுறையை ஒழித்து எண்ணெய் விலைகளை சந்தையே தீர்மானிக்க அனுமதித்தது. இந்த முறை 2016-17 வரை தொடர்ந்தது, ஆனால் அதற்குப் பிறகு அரசாங்கங்கள் வரிகளை உயர்த்துவதன் மூலம் எண்ணெய் விலையில் தாக்கம் செலுத்தின." என்றார்.
தற்போதைய சூழ்நிலையில் எண்ணெய் விலையைக் குறைப்பது குறித்து அவர் கூறுகையில், "விலை குறையுமா இல்லையா என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது. அனைத்தும் அரசாங்கத்தின் கைகளில்தான் உள்ளது. இதில் எந்த வெளிப்படைத்தன்மையும் இல்லை" என்றார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு