கேமரா யுகத்திற்கு முன் இந்தியாவை துல்லியமாக பதிவு செய்த ஓவியங்களின் தொகுப்பு

    • எழுதியவர், சுதா ஜி திலக்
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

புகைப்படம் எடுக்கும் கலை பிரிட்டிஷ் பேரரசின் காட்சிமொழியாக மாறுவதற்கு வெகுகாலத்திற்கு முன்பே, ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் இந்தியா முழுவதும் தான் சந்தித்த மனிதர்களை மிகுந்த ஆர்வத்துடனும், அசாத்திய துல்லியத்துடனும் ஓவியங்களாகத் தீட்டிக் கொண்டிருந்தார்.

திறமையான கலைஞரும் எழுத்தாளருமான எமிலி ஈடன், பிரிட்டனின் மிகவும் செல்வாக்கு மிக்க அரசியல் குடும்பங்களில் ஒன்றைச் சேர்ந்தவர். இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த தனது சகோதரர் ஜார்ஜ் ஈடன் (ஆக்லாந்தின் முதல் ஏர்ல்) உடன் அவர் 1830-களில் வட இந்தியா முழுவதும் பயணம் செய்தார்.

இளவரசர்கள், தளபதிகள் மற்றும் அரசவை உறுப்பினர்கள் மட்டுமல்லாது, பணியாளர்கள், உதவியாளர்கள், பயணிகள், ஃபக்கீர்கள், ஆப்கானிய மற்றும் சீக்கிய பிரபுக்கள், அகாலி போர்வீரர்கள், மலைவாழ் சமூகத்தினர் மற்றும் ஏகாதிபத்திய பயணங்களில் உடன் வந்த விலங்குகளையும் அவர் வரைந்தார். சமூகம் குறித்த அவரது பரந்த பார்வை பல சமகாலத்தவர்களிடமிருந்து அவரை வேறுபடுத்திக் காட்டியது.

அவரது இருபதுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் 1844ஆம் ஆண்டில் 'போர்ட்ரெய்ட்ஸ் ஆஃப் தி பிரின்சஸ் அண்ட் பீப்பிள் ஆஃப் இந்தியா' என வெளியிடப்பட்டன. ஈடன் வரைந்த அசல் ஓவியங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கையால் வண்ணம் தீட்டப்பட்ட லித்தோகிராஃப்களின் அந்த முழுமையான தொகுப்பு, தற்போது டெல்லியில் உள்ள டிஏஜி கலைக்கூடத்தில் நடைபெற்று வரும் 'பிரின்சஸ் & பீப்பிள்' கண்காட்சியின் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளது. கலை வரலாற்றாசிரியரான மேரி ஆன் பிரியர் இந்தக் கண்காட்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

1836 ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஈடன் கல்கத்தாவிற்கு (தற்போதைய கொல்கத்தா) வந்தடைந்தபோது, ​​அங்கு ஏராளமான அலுவல் பணிகளும், அறிமுகமில்லாத ஓர் உலகமும் அவரைச் சூழ்ந்திருந்தன.

தாய்நாட்டின் நினைவால் வாடிய அவர், புதிய சூழலுடன் ஒன்றிணையச் சிரமப்பட்டார். இதனால் முதல் மூன்று வாரங்களுக்கு அவர் எந்த ஓவியமும் வரையவில்லை; முதல் இரண்டு மாதங்களுக்கு எந்தவொரு முழுமையான ஓவியத்தையும் அவர் முடிக்கவில்லை.

ஆனால் அவரது உறவினர் வில்லியம், சகோதரி ஃபன்னி, பணிப்பெண்கள், ஒரு ஆயா, ஒரு சமையல்காரர், ஒரு உதவியாளர், ஒரு மருத்துவர் மற்றும் பலவிதமான செல்லப்பிராணிகளை உள்ளடக்கிய அவரது பயணக் குழுவால் அவரது உற்சாகம் மேலோங்கியது.

இந்தியா வந்து சேருவதற்கு முன்பே, கப்பல் பயணத்தின் போது புதிய மனிதர்கள், கலாசாரங்கள் மற்றும் வாழ்க்கை முறைகளைச் சந்தித்தது அவரது சிந்தனையை விரிவடையச் செய்தது என்று கலை வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மேரி ஆன் பிரியர் குறிப்பிடுகிறார்.

"பல்வேறு வகையான மக்களும் இடங்களும் எமிலியின் கலைத்திறனை ஊக்குவித்து மெருகேற்றின. வித்தியாசமானவற்றைத் தேடிச் செல்வதே அவரது இயல்பாக இருந்தது. அவர் தான் பார்த்தவற்றைத் தனது ஓவியங்கள் மற்றும் வர்ணங்கள் மூலம் மிக நுணுக்கமாகப் பதிவு செய்தார்."

கோட்டைகள், தேவாலயங்கள் மற்றும் ஆங்கிலேய நிலப்பரப்புகளுக்குப் பதிலாக, தான் சந்தித்த அந்நியர்கள், உடைகள், கட்டடக்கலை மற்றும் அறிமுகமில்லாத நிலப்பரப்புகளின் மீது ஈடன் தனது கவனத்தை செலுத்தினார்.

1836 மற்றும் 1842-க்கு இடைப்பட்ட காலத்தில், அவரது இந்த ஆர்வம் அரசியல் மாற்றத்தின் விளிம்பில் இருந்த ஒரு பிராந்தியத்திற்குள் அவரை அழைத்துச் சென்றது. அவரது ஓவியங்கள், இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த மாநிலங்களில் ஒன்றாக இருந்த பஞ்சாப் ராஜ்யத்தை ஆண்ட மகாராஜா ரஞ்சித் சிங்கின் அரசவையின் அரிய காட்சியை வழங்குகின்றன, அவரது ஆட்சியின் இறுதிக்காலத்தையும் விக்டோரியன் சகாப்தத்தின் தொடக்கத்தையும் அவை படம்பிடித்துக் காட்டுகின்றன.

ஈடன் ஒரு கலைஞராக எவ்வளவு ஈடுபாட்டுடன் இருந்தாரோ அதே அளவில் ஒரு எழுத்தாளராகவும் சிறப்பாக செயல்பட்டார். அவரது நாட்குறிப்புகள் நகைச்சுவையும் கூர்மையான அவதானிப்புகளும் நிறைந்து காணப்படுகின்றன. பெயர்கள் மற்றும் இடங்கள் அவருக்கு எவ்வாறு ஒலித்ததோ அப்படியே துல்லியமாக குறிப்பிடப்பட்டிருந்தன.

பனாரஸை (இப்போது வாரணாசி) வந்தடைந்ததும், ஈடன் குழுவினர் கங்கை நதியில் பயணம் செய்து, பின்னர் அருகிலுள்ள ராம்நகருக்குச் சென்றனர்; அங்கு மன்னருக்கு ஒரு கிராமப்புற மாளிகை இருந்தது. அந்தக் காட்சி எமிலியை மிகவும் கவர்ந்ததால், அவர் இவ்வாறு எழுதினார்: "நாங்கள் எங்கள் நீராவிப் படகை இங்கேயே நிறுத்திவிட்டு, வெளியே சென்று ஓவியங்கள் வரையப் போகிறோம்."

ஆனால் இந்த உற்சாகம் அவருக்கு உடனடியாக வந்துவிடவில்லை. ஆரம்பத்தில், பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கலாசார வேறுபாடு ஈடனைத் தன் தாய்நாட்டின் நினைவால் பெரிதும் வாடச் செய்தது. பெண்கள் தொப்பிகள் இல்லாமல் தேவாலயத்திற்குச் செல்வது, கொசுக் கடி, சுட்டெரிக்கும் வெயில், நாய்கள், காகங்கள், குள்ளநரிகள் மற்றும் செம்பருந்துகளின் இடைவிடாத கூச்சல், அத்துடன் நாளின் பெரும்பகுதியை வீட்டிற்குள்ளேயே கழிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை எண்ணி அவர் மிகவும் கவலைப்பட்டார்.

ஆனால் மாதங்கள் உருண்டோட, அவர் ஏராளமான ஓவியங்களை வரையத் தொடங்கினார். விரைவில் அவரது படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சிம்லாவில் நடந்த தொண்டு கண்காட்சிகளில் அவை விறுவிறுப்பாக விற்பனையாயின. இந்தியாவில் இருந்த ஆங்கிலேயர்களிடம் பெரும் பாராட்டுகளைப் பெற்றதுடன், இந்தியக் கலைஞர்களாலும் அவை நகலெடுக்கப்பட்டன.

ரீஜென்சி மற்றும் விக்டோரியன் சகாப்தங்களைச் சேர்ந்த எந்தவொரு பிரிட்டிஷ் பெண் கலைஞராலும் உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த ஓவியங்களில் ஒன்றாக ஈடனின் இந்திய ஓவியங்களை பிரியர் மதிப்பிடுகிறார். தாவரவியல் ஓவியங்களுக்குப் புகழ் பெற்ற சார்லட் கானிங் மற்றும் பிற்காலத்தில் மரியன்னே நார்த் ஆகியோர் மட்டுமே அவரது சாதனைக்கு நிகராக விளங்கினர்.

இவ்வளவு கூர்ந்த கவனிப்புத் திறன் இருந்தபோதிலும், இந்தியர்களை 'நாகரீகப்படுத்தும்' கடமை பிரிட்டனுக்கு உள்ளது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும் ஈடனிடம் ஆழமாகப் பதிந்திருந்தது. பிரியர் குறிப்பிடுவது போல, இந்தியாவில் தான் கழித்த ஆண்டுகளை "ஒரு உயர்ந்த நோக்கத்திற்காகச் சகித்துக்கொள்ள வேண்டிய ஒரு கடினமான சோதனை" என்றே அவர் கருதினார். இந்தியாவை "நாகரீகமாக்குவது" காலனித்துவ ஆட்சியின் கடமை என்ற கண்ணோட்டமே அவரிடம் இருந்தது.

பிரிட்டன் திரும்பும் ஆவலோடு, ஈடன் குடும்பத்தினர் 1842-ல் இந்தியாவை விட்டுப் புறப்பட்டனர். பிரிட்டன் திரும்பிய பிறகும் எமிலி தொடர்ந்து ஓவியம் வரைந்தார். ஆனால், இந்தியாவில் இருந்தபோது புதிய இடங்களையும் மக்களையும் பதிவு செய்ய வேண்டும் என்ற அவருக்கிருந்த அந்தத் தீவிரம் குறைந்துவிட்டது. அவரது பிற்காலப் படைப்புகள் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்ததோடு, வழக்கமான ஆங்கிலேயக் காட்சிகளை மையப்படுத்தியே அமைந்தன.

அதன் பிறகு, அவர் தனது இந்திய அனுபவங்களைப் பரந்த அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்க எழுத்துப் பணியையே அதிகம் நம்பினார். இந்தியாவிலிருந்து அவர் எழுதிய சுவாரஸ்யமான கடிதங்கள் 1866-ல் 'அப் தி கன்ட்ரி' என்ற பெயரிலும், அதனைத் தொடர்ந்து 1872-ல் 'லெட்டர்ஸ் ஃப்ரம் இந்தியா என்ற பெயரிலும் வெளியாயின.

ஆரம்பத்தில் அவரது புகழ், முதல் ஆப்கானியப் போரில் அவரது குடும்பத்திற்கு இருந்த தொடர்பைச் சார்ந்தே இருந்தாலும், காலப்போக்கில் அது ஒரு எழுத்தாளர் மற்றும் கலைஞர் என்ற முறையில் அவரது சொந்தச் சாதனைகளின் மூலமே நிலைத்து நின்றது. எமிலி ஈடன் 1869-ல் காலமானார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு