'ஒரு நாளைக்கு 50 கிலோ அரிசி, பஜ்ஜிக்கு 15 கிலோ மாவு' - 83 பேர் கொண்ட கூட்டு குடும்பம் எப்படி ஒன்றாக வாழ்கிறது?

'மாமியார்- மருமகள் சண்டைகள் இல்லை'
    • எழுதியவர், துளசி பிரசாத் ரெட்டி
    • பதவி, பிபிசிக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 8 நிமிடங்கள்

ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் ஆறு தலைமுறைகளைக் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் வசித்து வருகிறது.

இந்த வீட்டில் ஒரு நாள் சமையலுக்கு 50 கிலோ அரிசி மூட்டை தேவைப்படுகிறது.

ஞாயிற்றுக்கிழமை அசைவம் சாப்பிட வேண்டும் என்றால் ஒரு செம்மறியாடு வேண்டும். மாலையில் பஜ்ஜி சாப்பிட வேண்டும் என்றால் 15 கிலோ மாவு தயாரிக்க வேண்டும்.

ஏனெனில், அந்த குடும்பத்தில் 20 பேர் அல்ல, 83 பேர் இருக்கிறார்கள்.

இந்தக் கூட்டுக் குடும்பத்துடன் ஒரு நாளை செலவிடுவதற்காக பிபிசி குழு குர்லப்பள்ளிக்குச் சென்றது. குர்லப்பள்ளி கிராமத்தில் 400 வீடுகளும், 2,000 மக்களும் வசிக்கின்றனர்.

கிராமத்துக்குள் நுழைந்தவுடன் வலதுபுறம் திரும்பினால், சாலையின் இருபுறமும் ஒன்றுக்கு ஒன்று எதிரெதிராக இரண்டு பெரிய வீடுகளைக் காணலாம்.

இந்தக் கூட்டுக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் இந்த இரண்டு வீடுகளில் வசிக்கிறார்கள்.

சாலையின் ஒரு பக்கத்தில் இருக்கும் இரண்டு மாடி வீட்டுக்குள் நுழைந்தவுடன் முதலில் சமையலறை உள்ளது. அந்த வீட்டுக்கு எதிரே மற்றொரு மூன்று மாடி வீடு உள்ளது. அதே சாலையில் இன்னும் சற்று தூரம் சென்றால், பெரிய காலி இடத்துடன் மற்றொரு வீடு உள்ளது.

அந்த இடத்தில் டிராக்டர்களும் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இப்போது இந்த மூன்று வீடுகளும் போதுமானதாக இல்லை என்பதால், குடும்பத்தினர் நான்காவது வீட்டைக் கட்டி வருகின்றனர்.

இவ்வளவு பெரிய குடும்பம் முதன்மையாக விவசாயத்தையே நம்பியுள்ளது. வீட்டில் உள்ள அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து பயிர்களை சாகுபடி செய்வதுடன், கறவை மாடுகள் மற்றும் செம்மறியாடுகளையும் வளர்த்து வருகின்றனர்.

ஆறு தலைமுறைகளைக் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் .
படக்குறிப்பு, ஆறு தலைமுறைகளைக் கொண்ட ஒரு பெரிய கூட்டுக் குடும்பம் உள்ளது.

குடும்பத்தில் உள்ள மூத்தவர்கள் இருவர்தான் முடிவெடுப்பார்கள்

83 பேர் கொண்ட இந்தக் கூட்டுக் குடும்பத்தின் தலைவர்களாக ஹனுமந்த ராயுடுவும் முத்தியலப்பாவும் உள்ளனர்.

பால் கறப்பது முதல் விவசாயம், தொழில் என அனைத்தையும் இவர்கள்தான் முடிவு செய்கிறார்கள்.

இவ்வளவு பெரிய குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தருவது தனது பொறுப்பு என்கிறார் ஹனுமந்த ராயுடு.

முத்தியலப்பா உட்பட வீட்டில் உள்ள யாரும் தனக்கு எதிராகப் பேசுவதில்லை என்றும், தன்னை மதிப்பதாகவும் அவர் கூறினார்.

"எனது தந்தையும் தாத்தாவும் இறந்த பிறகு, குடும்ப சுமை என் மீது விழுந்தது. அதன்பிறகு இந்தக் குடும்பத்தை நான் கவனித்து வருகிறேன். குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கிறோம். மற்றவர்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்துகிறோம். ஒருவருக்கொருவர் ஆதரவாக இருந்து வாழ்ந்து வருகிறோம்.

இதுவரை எங்களுக்கு எந்தப் பிரச்னையும், கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. நாங்கள் அனைவரும் ஒன்றாகக் கடுமையாக உழைத்திருக்கிறோம். நான் சொல்வதை அவர்கள் செய்கிறார்கள். யாரும் எதுவும் சொல்வதில்லை." என்று பகிர்ந்து கொண்டார் ஹனுமந்த ராயுடு.

"நான் சொல்வதை அவர்கள் செய்கிறார்கள். எனது மைத்துனரும் நான் சொல்வதைக் கேட்கிறார். எனக்கு இத்தனை மகன்களும், எனது மைத்துனருக்கு இத்தனை மகன்களும் இருந்தாலும், யாரும் எதுவும் சொல்வதில்லை" என்று பகிர்ந்து கொண்டார் அவர் ஹனுமந்த ராயுடு.
படக்குறிப்பு, குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் காலையில் தேநீர் அருந்தி, அரை மணி நேரம் ஒன்றாகப் பேசி, யார் எந்த வேலையைச் செய்வது என்று முடிவு செய்வார்கள் என மகேஷ் கூறினார்.

'எல்லோருக்கும் ஒரே சொல், ஒரே பாதை'

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

தங்களது தாத்தாக்களின் காலத்திலிருந்தே இதுபோன்று ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும், இனி வரும் காலத்திலும் இதேபோல் தொடர முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார் முத்தியலப்பா.

"எங்களது தாத்தாக்களின் காலத்திலிருந்தே இப்படி ஒன்றாக இருக்கிறோம். இனியும் இதேபோல் ஒன்றாக இருக்க முயற்சித்து வருகிறோம். காலையில் அனைவரும் ஒன்றாகக் கூடி, ஒவ்வொருவருக்கும் அவரவர் பணிகளை ஒதுக்குகிறோம்.

உணவு, உடை உள்ளிட்ட வீட்டில் உள்ள அனைத்தையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். வேலை செய்வதற்காக வெளியாட்கள் சிலரையும் அழைத்து வருகிறோம்" என்று அவர் கூறினார்.

ஒரு காலத்தில் வறுமையான சூழலில் வாழ்ந்த தாங்கள், இன்று இவ்வளவு வசதியாக வாழ்வதற்கு இந்த ஒற்றுமைதான் காரணம் என்றும் முத்தியலப்பா கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஆரம்பத்தில் நாங்கள் வறுமையான சூழலில் வாழ்ந்தோம். போர்த்திக்கொள்ள ஒரு போர்வைகூட இருக்காது. ஒரு வேளை மட்டுமே உணவு சாப்பிடுவோம். அந்த நிலையில் இருந்து இப்போது இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் அனைவரும் ஒன்றாக இருந்ததால்தான் இது சாத்தியமானது.

நாங்கள் தனித்தனியாகப் பிரிந்திருந்தால், ஒருபோதும் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது. இப்போது நாங்கள் வசிக்கும் இந்த வீட்டைக் கட்டுவதற்கு ரூ.20 கோடி செலவானது. நாங்கள் தனியாக இருந்திருந்தால் இது சாத்தியமாகியிருக்குமா?'' என்றார்.

''எனது தந்தையிடம் 60 ஏக்கர் நிலம் இருந்தது. அவர் இறந்த பிறகு, நாங்கள் அனைவரும் சேர்ந்து 75 ஏக்கர் நிலத்தை வாங்கினோம். அதனால்தான் அனைவரிடமும், 'பிரிந்து செல்லாதீர்கள். நாம் இப்படி ஒன்றாக இருந்தால் எல்லாம் நன்றாக நடக்கும்' என்று சொல்கிறோம்" என்று கூறினார்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் மகேஷ், காலையில் தேநீர் அருந்தும் போது குடும்பத்தின் இரண்டு தலைவர்களும் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் எனக் கூறுகிறார்.

"எனது தந்தை ஹனுமந்த ராயுடு. காலையில் குடும்பத்தில் உள்ள அனைத்து பெரியவர்களும் தேநீர் அருந்தியபடி அரை மணி நேரம் பேசுவார்கள். யாருக்கு என்ன வேலை கொடுக்க வேண்டும் என்பதை அப்போது முடிவு செய்வோம். வாகனங்களைப் பராமரிப்பதும், வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதும் எனது வேலை. எனது மற்றொரு சகோதரர், நாங்கள் விளைவிக்கும் தக்காளி போன்ற பயிர்களை மினி லாரியில் எடுத்துச் சென்று சந்தையில் விற்பனைக்குக் கொண்டு செல்வார்.

இப்படி விவசாயம் செய்வது, செம்மறியாடுகளை மேய்ப்பது, மாடுகளைப் பராமரிப்பது என எங்கள் வேலைகளை நாங்களே செய்துகொள்கிறோம். இதுவரை எந்தப் பிரச்னையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறோம்," என்று கூறினார் மகேஷ்.

ஹனுமந்தராயுடு (இடது) மற்றும் முத்தியலப்பா (வலது)
படக்குறிப்பு, ஹனுமந்த ராயுடு (இடது) மற்றும் முத்தியலப்பா (வலது) ஆகியோர், பால் கறப்பது முதல் விவசாயம் மற்றும் வியாபாரம் வரை, யார் எந்த வேலையைச் செய்வது என்று தீர்மானிக்கிறார்கள்.

குடும்பத் தலைவரான ஹனுமந்த ராயுடுவின் தாத்தா சிம்மலா நாகப்பாதான் இந்தக் குடும்பத்தின் முதல் தலைமுறை தலைவர். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். முதல் மனைவியின் மகளை எல்லப்பாவுக்கு திருமணம் செய்து வைத்தார்.

அதன்பிறகு, அவர் தொடர்ந்து மருமகனாகவே இந்தக் குடும்பத்தில் இருந்துள்ளார். பின்னர், இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகன்களும் மேலும் இரண்டு மகள்களும் பிறந்தனர். எல்லப்பாவுக்கு நான்கு மகன்களும் இரண்டு மகள்களும் இருந்தனர். அனைவரும் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

எல்லப்பா மற்றும் நாகப்பா இறந்த பிறகு, அவர்களது வாரிசுகளான ஹனுமந்த ராயுடுவும் முத்தியலப்பாவும் தற்போது குடும்பத்தின் மூத்தவர்களாக இருந்து முடிவுகளை எடுத்து வருகின்றனர்.

முத்தியலப்பாவைத் தவிர வேறு யாரும் வெளியே வேலை செய்யவில்லை. அவர் மட்டும் தபால்காரராகப் பணியாற்றுகிறார்.

83 பேர் கொண்ட கூட்டு குடும்பம் எப்படி ஒன்றாக வாழ்கிறது?

காலையில் அன்றாடப் பணிகளை முடித்த பிறகு, குடும்பத்தில் சிலர் வயல்களுக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் கால்நடைகளைப் பராமரிக்கச் செல்கின்றனர்.

சிலர் பால் கறக்கின்றனர். மற்றவர்கள் செம்மறியாடுகளைப் பராமரிப்பது, சாணத்தைச் சேகரிப்பது, கால்நடைக் கொட்டகையைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைச் செய்கின்றனர்.

வீட்டில் உள்ள பெண்களுக்கு சமையல் செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அனைவரும் காலையில் பள்ளிக்குச் செல்கின்றனர்.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, குடும்பத்தில் உள்ளவர்களின் திருமணங்களை ஒன்றாகச் சேர்ந்து நடத்துவதாக ஹனுமந்த ராயுடு கூறினார்.

குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, குடும்பத்தில் உள்ளவர்களின் திருமணங்களையும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து நடத்துவதாக ஹனுமந்த ராயுடு கூறினார்.
படக்குறிப்பு, காலை உணவுக்காக ராகி களி தயாரிப்பதோடு இவர்களின் காலை பொழுது தொடங்குகிறது.

ராகி களியுடன் தொடங்கும் நாள்

83 பேருக்கான சமையலும் ஒரே சமையலறையில்தான் செய்யப்படுகிறது. அதுவும் விறகு அடுப்பில் சமைப்பது இந்த கூட்டுக் குடும்பத்தின் ஒரு தனிச்சிறப்பு. பழங்கால முறைகளே இந்த வீட்டில் ஆறு தலைமுறைகளாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன.

தங்களது குடும்பத்தில் ஒரே சமையலறையும், ஒரே உணவும் இருப்பதாக மகேஷ் கூறுகிறார்.

மூன்று வீடுகள் இருந்தாலும், இடம் கிடைக்கும் இடத்தில் அனைவரும் தூங்குவதாகவும், ஆனால் 83 பேருக்கும் ஒரே பாத்திரத்தில்தான் சமையல் செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"83 பேருக்கும் ஒரே பாத்திரம்தான் உள்ளது. இப்போதும் விறகு அடுப்பைத்தான் பயன்படுத்துகிறோம். எதைச் செய்ய வேண்டும் என்றாலும், ஆட்டுக்கல்லில் தான் அரைக்கிறோம். எல்லாவற்றையும் இயற்கையான முறையிலேயே செய்கிறோம்.

இதுவரை கேஸ் அடுப்பையோ, கிரைண்டரையோ பயன்படுத்தியதில்லை. இப்போதும் பழைய முறைகளையே பின்பற்றி வருகிறோம். அனைவரும் தொடர்ந்து ஒரே உணவைத்தான் சாப்பிடுகிறார்கள். இப்போதும் நாங்கள் என்ன செய்தாலும், அனைவருக்கும் ஒரே உணவைத்தான் தயாரிக்கிறோம்." என்கிறார் மகேஷ்.

இந்த வீட்டில் காலை உணவுக்காக முதலில் ராகி உருண்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

வயல்களில் வேலைக்குச் செல்பவர்கள் அந்த உருண்டைகளை டிபன் பாக்ஸ்களில் எடுத்துக்கொண்டு செல்கின்றனர்.

இந்த உருண்டைகளைத் தயாரிப்பதற்காக இரண்டு பெண்கள் சேர்ந்து வேலை செய்வதாக குடும்பத்தை சேர்ந்த அனுராதா கூறுகிறார்.

"அனைவருக்கும் ஒரே உணவைத்தான் சமைக்கிறோம். ஒரே குழம்பு, சாதம், கஞ்சி ஆகியவற்றைத் தயாரிக்கிறோம். இப்போது எங்கள் குடும்பத்தில் நீரிழிவு நோயாளிகள் இருப்பதால், அவர்களுக்காக சப்பாத்தி, கஞ்சி ஆகியவற்றைத் தயாரிக்கிறோம்.

வாரத்திற்கு ஒருமுறை அனைவருக்கும் பஜ்ஜி, வடை, இனிப்புகள் செய்ய வேண்டும் என்றால், அனைவருக்கும் சேர்த்து செய்வோம். பிரித்துச் செய்ய மாட்டோம். எங்கள் வீட்டுக்கு ஒரு நாளைக்கு 50 கிலோ அரிசி வாங்குகிறோம். தோட்டத்துக்கு வேலைக்கு வருபவர்களுக்கும் அதிலிருந்து உணவு வழங்குகிறோம்.

கீரைகள் அனைத்தையும் ஆட்டுக்கல்லில்தான் அரைக்கிறோம். இத்தனை பேருக்கான உணவைத் தயாரிக்க இரண்டு பெண்கள் சேர்ந்து அவற்றை அரைக்கிறார்கள். சமையல் அனைத்தையும் ஒரே இடத்தில்தான் செய்கிறோம். தனித்தனியாகச் செய்வதில்லை." என்று அனுராதா கூறினார்.

இவ்வளவு பெரிய கூட்டுக் குடும்பத்தின் சமையல் பணிகளையும் ராஜேஸ்வரி கவனித்துக்கொள்கிறார்.

மேலும், மற்ற இருவருடன் வயல் வேலைக்குச் செல்பவர்களுக்கு வண்டிகளை அனுப்பி வைப்பது, ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சமைப்பது, குழந்தைகள் அனைவரையும் கவனித்துக்கொள்வது உள்ளிட்ட பணிகளையும் அவர் செய்கிறார்.

"எங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட் எண்ணெய் செலவாகிவிடும். வீட்டில் உள்ளவர்களுடன் சேர்த்து வெளியில் இருந்து வரும் 20, 30 பேருக்கும் நாங்களே சமைக்க வேண்டும். மூன்று கிலோ பருப்பு போட வேண்டும். விறகு அடுப்பில்தான் சமைக்கிறோம். காலையில் களி தயாரிக்கிறோம். மதியம் சாதம் சமைக்கிறோம். டிபன் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதை இரவில் செய்துகொள்வோம். சப்பாத்தி, பஜ்ஜி செய்ய வேண்டும் என்றால் 15 கிலோ மாவு தேவைப்படும்" என்று ராஜேஸ்வரி கூறினார்.

"விறகு அடுப்பில்தான் சமைக்கிறோம். காலையில் களி தயாரிக்கிறோம். மதியம் சாதம் சமைக்கிறோம். டிபன் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் அதை இரவில் செய்துகொள்வோம். சப்பாத்தி, பஜ்ஜி செய்ய வேண்டும் என்றால் 15 கிலோ மாவு தேவைப்படும்," என்று ராஜேஸ்வரி கூறினார்.
படக்குறிப்பு, பண்டிகைகள் மற்றும் கண்காட்சிகள் வரும்போது, ​​இரண்டு பசுக்களையும் 20 கிலோ கோழியையும் கொண்டு வர வேண்டியிருக்கிறது என்று ராஜேஸ்வரி கூறினார்.

'ஞாயிற்றுக்கிழமை ஒரு ஆட்டுக்கடாவும் 10 கிலோ கோழிக்கறியும் தேவைப்படும்'

"முக்கியமாக, காலையில் ராகி களி தயாரிப்போம். மதியம் சாதமும் குழம்பும் சமைப்போம். ஏதாவது சிறப்பாகச் செய்ய வேண்டும் என்றால் இரவில் சமைப்போம். காலையில் அனைவரும் அவரவர் வேலைக்குச் சென்றுவிடுவோம். நாங்கள் அனைவரும் இரவில் ஒரே இடத்தில் சந்திப்பதால் அது விசேஷமான உணவாக இருந்தாலும் சரி, அசைவ உணவாக இருந்தாலும் சரி அதை இரவில்தான் செய்வோம். நாங்கள் என்ன சாப்பிட்டாலும், அனைவருக்கும் ஒரே மாதிரியான உணவைத்தான் சமைப்போம்," என்கிறார் மகேஷ்.

திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் வரும்போது இரண்டு செம்மறியாடுகளையும் 20 கிலோ கோழிக்கறியையும் வாங்க வேண்டியிருக்கும் என்று ராஜேஸ்வரி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "திருவிழா வரும்போது இரண்டு செம்மறியாடுகளையும் 20 கிலோ கோழிக்கறியையும் சமைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை சமைக்க வேண்டும் என்றால், ஒரு செம்மறியாட்டையும் 10 கிலோ கோழிக்கறியையும் சமைப்போம்." என்று அவர் கூறினார்.

திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் வரும்போது இரண்டு செம்மறியாடுகளையும் 20 கிலோ கோழிக்கறியையும் வாங்க வேண்டியிருக்கும் என்று ராஜேஸ்வரி கூறினார்.
படக்குறிப்பு, தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும், எந்த வேறுபாடும் காட்டாமல், அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி கற்பிப்பதாக மகேஷ் கூறினார்.

அரசுப் பள்ளிகளில் கல்வி பயிலும் குழந்தைகள்

இந்தக் கூட்டு குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டில் கன்னட மொழியில் பேசுகிறார்கள்.

இந்த குடும்பத்தினர் நான்கு பேருந்துகளையும் வைத்திருக்கிறார்கள். கல்யாணதுர்கத்திலிருந்து கர்நாடகாவுக்கு இந்தப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இவ்வளவு பெரிய குடும்பத்தை பெரியவர்கள் பார்த்துக்கொள்வது கடினமாக இருப்பதால், படிப்பை நிறுத்திவிட்டு வீட்டுப் பணிகளை கவனித்து வருவதாக மகேஷ் கூறினார்.

மேலும் "நாங்கள் இடைநிலை மற்றும் பட்டப்படிப்பு வரை படித்திருக்கிறோம். விவசாயத்தின் மூலம் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்வோம் என்று முடிவு செய்து, நாங்கள் விவசாயம் மற்றும் வீட்டுப் பணிகளை கவனித்து வருகிறோம்." என்று அவர் கூறினார்.

தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கி வருவதாகவும், அவர்களில் யாரையும் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்று வேறுபடுத்தாமல், அனைவரையும் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்க வைப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"எங்கள் குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கொடுக்கிறோம். அவர்களைப் பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம். அதனால் அவர்கள் முன்னேற வேண்டும் என விரும்புகிறோம். 32 குழந்தைகள் படித்து வருகின்றனர். அவர்களில் ஆறு பேர் இடைநிலைக் கல்வி பயில்கின்றனர். பட்டப்படிப்பு படிப்பவர்களும் உள்ளனர். முதல் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை அனைவரையும் அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் தான் படிக்க வைக்கிறோம். எவ்வித வேறுபாடுகளும் இன்றி, அனைவரையும் சமமாக நடத்துகிறோம். எட்டு சிறு குழந்தைகள் அங்கன்வாடிக்குச் செல்கின்றனர். மற்றவர்கள் முதல் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்து வருகின்றனர்" என்று மகேஷ் கூறினார்.

83 பேர் கொண்ட கூட்டு குடும்பம் எப்படி ஒன்றாக வாழ்கிறது?

'எங்களுக்குத் தேவையானதை நாங்கள் விளைவிக்கிறோம்'

இந்த குடும்பத்துக்குத் தேவையான தானியங்கள் மற்றும் காய்கறிகளை அவர்களே விளைவிக்கிறார்கள்.

தங்களுக்குத் தேவையான அளவு வைத்துக்கொண்டு, மீதியைச் சந்தைக்கு அனுப்புவதாக மகேஷ் கூறினார்.

"எங்களிடம் மொத்தம் சுமார் 120 ஏக்கர் நிலம் உள்ளது. முக்கியமாக மிளகாய், கத்தரிக்காய், தக்காளி, தர்பூசணி, பப்பாளி மற்றும் நிலக்கடலை ஆகியவற்றை பயிரிடுகிறோம். விளைபொருட்களை நாங்களே விற்பனையும் செய்கிறோம்.

தர்பூசணி மற்றும் பப்பாளியை டெல்லிக்கும், தக்காளியை கோலாருக்கும், கத்தரிக்காயை சென்னைக்கும் அனுப்புகிறோம். இவற்றை இடைத்தரகர்களிடம் கொடுப்பதில்லை. எங்கள் வாகனங்களில் நாங்களே ஏற்றிக்கொண்டு, நேரடியாகச் சந்தைகளுக்குக் கொண்டு சென்று விற்பனை செய்கிறோம்.

அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு தான் வாழ்கிறோம். எங்கள் வீட்டுக்குத் தேவையான அரிசிக்காக 5 ஏக்கரில் நெல் பயிரிடுகிறோம். அந்த நெல்லை ஆலையில் அரைத்து, எங்களுக்குத் தேவையான அளவு வீட்டில் சேமித்து வைத்துக்கொள்கிறோம். மீதியைச் சந்தைக்கு அனுப்புகிறோம்." என்கிறார் மகேஷ்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் மகேஷ், காலையில் தேநீர் அருந்தும் போது குடும்பத்தின் இரண்டு தலைவர்களும் யார் என்ன வேலை செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வார்கள் எனக் கூறுகிறார்.

'மாமியார்- மருமகள் சண்டைகள் இல்லை'

இந்தக் கூட்டு குடும்பத்தில் ஆறு அத்தைகளும், 14 மருமகள்களும் உள்ளனர். ஆனால், தங்கள் வீட்டுப் பெண்கள் சண்டையிடுவதை தான் ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறுகிறார் மகேஷ் .

"சிலர் தோட்டத்தில் வேலை செய்கிறார்கள், சிலர் வயலில் வேலை செய்கிறார்கள், சிலர் வீட்டில் வேலை செய்கிறார்கள்.யாரும் எந்தப் பிரச்னையையும் ஏற்படுத்துவதில்லை. ஏதாவது நடந்தால், உடனடியாக அதை சரிசெய்துவிடுவோம். சிலர் அதிகமாகப் பேசுவார்கள், ஆனால் வேறு எதுவும் செய்யமாட்டார்கள்.

அவர்களுக்குள் ஏதாவது சண்டை அல்லது வாக்குவாதம் ஏற்பட்டாலும், மீண்டும் வழக்கம்போல் ஒன்றாகிவிடுவார்கள். அவர்கள் ஒருபோதும் சண்டையிடுவதில்லை. மகிழ்ச்சியாகச் சிரித்துக்கொண்டு தங்கள் வேலைகளைச் செய்கிறார்கள்" என்று குடும்பத்தின் பெண்களில் மூத்தவரான அனுராதா கூறுகிறார்.

'மாமியார்- மருமகள் சண்டைகள் இல்லை'

சிறிது நேரம் சண்டையிட்டாலும், மாலையில் மீண்டும் ஒன்றாகக் கூடி மகிழ்ச்சியாக இருப்போம் என்கிறார் ராஜேஸ்வரி.

இந்த வீட்டிலிருந்து வேறு கிராமங்களுக்குத் திருமணம் செய்து சென்று, மருமகள்களாக வாழும் பெண்களின் மாமியார் வீட்டினர் தங்கள் குடும்பத்தைப் பற்றிப் பேசும்போது பெருமையாக உணர்வதாகவும் அவர் கூறுகிறார்.

"நான் இந்த வீட்டின் ஐந்தாவது தலைமுறையைச் சேர்ந்தவர். இந்த வீட்டின் மூத்த பேத்தி நான். சிறு வயதிலிருந்தே எனது தாத்தா என்னை இங்கேயே படிக்க வைத்தார். மாமா மகனுக்கே என்னை திருமணம் செய்து வைத்தார்கள். கூட்டுக் குடும்பமாக இருப்பதை எண்ணி என் மாமியாரும் மாமனாரும் கூட மிகவும் சந்தோஷப்படுகிறார்கள்.

இந்தக் காலத்தில் ஒன்று அல்லது இரண்டு சகோதரர்கள் மட்டுமே இருந்தாலும், சொத்துக்காக அவர்கள் பிரிந்து செல்கிறார்கள். ஆனால், எங்கள் கிராமத்தில் 83 பேர் இன்னும் ஒன்றாக இருக்கிறார்கள் என மக்கள் பெருமையாகப் பேசுகிறார்கள்." என்று கூறுகிறார் ராஜேஸ்வரி .

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு