You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சகோதரிகள் என தெரியாமல் தோழிகளாக பழகிய இரு பெண்கள்
தாங்கள் சகோதரிகள் என்பதே தெரியாமல் தோழிகளாகப் பழகி வந்த இருவர், டிஎன்ஏ பரிசோதனை மூலம் சகோதரிகள் என்பது தெரியவந்து ஒன்றுசேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
மீனா மற்றும் மினால் இருவரும் இந்தியாவில் குழந்தைகளாக இருந்தபோது அனாதை இல்லங்களில் விடப்பட்டனர். பின்னர், நெதர்லாந்தில் வெவ்வேறு குடும்பங்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்ந்தனர். அந்த இரு குடும்பங்களும் சிறிது தொலைவிலேயே வசித்து வந்தன.
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்ட டிஎன்ஏ பரிசோதனையில், சிறுவயது தோழிகளான இருவரும் உடன்பிறந்த சகோதரிகள் என்பது தெரியவந்தது.
வளர்ந்தபோது, தங்களுக்கு ஒரு சகோதரி இருப்பது இருவருக்குமே தெரியாது.
1996ஆம் ஆண்டு, பதின்ம வயதில் இருந்தபோது, சுமார் 130 கிலோமீட்டர் தொலைவில் வசித்த இருவரும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கான ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தனர். அப்போது அவர்களுக்குள் வழக்கத்துக்கு மாறாக வலுவான தொடர்பு ஏற்பட்டது.
அவர்களது நண்பர்கள் இருவரின் தோற்றத்தில் இருந்த ஒற்றுமையைக் கண்டு ஆச்சர்யமடைந்தனர். இருவரும் தங்களது முகவரிகளைப் பரிமாறிக் கொண்டனர். கடிதப் பரிமாற்றத்தின்போது, ஒருவரையொருவர் நகைச்சுவையாக ‘சகோதரி’ என்று அழைத்துக் கொண்டனர். பின்னர் 15 ஆண்டுகளுக்கு அவர்களுக்குள் தொடர்பு இல்லாமல் போனது.
“பல ஆண்டுகளாக என் இதயத்தில் ஒரு வெற்றிடம் இருந்தது,” என்று மூன்று குழந்தைகளுக்குத் தாயான 43 வயது மீனா கெல்டின்க் கூறினார்.
உயிரியல் உறவினர்கள் இருக்கிறார்களா என்பதைக் கண்டறிவதற்காக இருவரும் தனித்தனியாக டிஎன்ஏ பரிசோதனை செய்திருந்தனர். அந்தப் பரிசோதனையின் முடிவில் தாங்கள் சகோதரிகள் என்பது தெரியவந்தபோது இருவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு