You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'பூணூல், சைவம்-அசைவம்' - அயோத்தி ராமர் கோயில் சி.இ.ஓ பணிக்கான நேர்காணலில் நடந்தது என்ன?
- எழுதியவர், அர்ஷத் அஃப்சல் கான்
- பதவி, பிபிசிக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
ராமர் கோயில் அறக்கட்டளையின் முதல் முழுநேர தலைமை நிர்வாக அதிகாரிக்கான (CEO) நேர்காணல் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.
அதற்காக வந்த 5,585 விண்ணப்பங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 16 வேட்பாளர்களிடம் உயர்மட்டக் குழு ஒன்று நேர்காணல் நடத்தியதாக அறக்கட்டளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இந்தக் குழு இவர்களில் மூவர் பெயர்களை அறக்கட்டளைக்கு அனுப்பி வைக்கும். இறுதி முடிவை அறக்கட்டளையே எடுக்க வேண்டும்.
இந்தத் தேடுதல் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி பிரமோத் கோஹ்லி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் வி.கே. சதுர்வேதி, அணு விஞ்ஞானி டாக்டர். சுரேஷ் ஹவாரே ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மதம் சார்ந்த பணிகளில் அனுபவம், ராமர் மீது நம்பிக்கை மற்றும் இந்து மதத்தின் அடிப்படை மத மரபுகள் தொடர்பான கேள்விகள் நேர்காணலில் கேட்கப்பட்டன. வேட்பாளர்கள் குடுமி வைத்துக் கொள்கிறார்களா, பூணூல் அணிகிறார்களா, முழுமையாக சைவம் சாப்பிடுவோரா அல்லது மாமிசம் சாப்பிடுவார்களா, மது அருந்துகிறார்களா இல்லையா, தீவிர இந்துவா அல்லது இறை நம்பிக்கை மட்டும் கொண்டவரா, இந்து மதத்திற்கு ஏற்ப ஆடை அணிவதில் வசதியாக இருப்பவர்களா, மற்ற மதங்கள் குறித்த அவர்களது கருத்து என்ன என்பன போன்ற கேள்விகளும் நேர்காணலின்போது கேட்கப்பட்டன.
ராமர் கோயிலில் காணிக்கை திருடப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்ததைத் தொடர்ந்து, முழு நேர தலைமை நிர்வாக அதிகாரியை நியமிக்க அறக்கட்டளை முடிவு செய்தது.
நேர்காணல் செய்யப்பட்டவர்களில் மூன்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளும், ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், நான்கு முன்னாள் ராணுவ அதிகாரிகளும் அடங்குவர்.
இறுதிக்கட்ட நேர்காணல் கடந்த ஆகஸ்ட் 11, 12 ஆகிய தேதிகளில் அறக்கட்டளை வளாகத்திலேயே நடைபெற்றதாக, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையின் செயலாளர் சமீர் பாண்டே புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திக் குறிப்பின்படி, பல கட்டங்களாகக் கடுமையான, வெளிப்படையான மற்றும் விரிவான மதிப்பீட்டு முறையை கமிட்டி பின்பற்றியது. மொத்த விண்ணப்பதாரர்களில் சுமார் 0.3 சதவிகிதத்தினரான மொத்தம் 16 பேர் அயோத்தியில் நேரில் சந்தித்துப் பேசுவதற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
விண்ணப்பதாரர்களில் முன்னாள் அதிகாரிகள்
புதன்கிழமை நடைபெற்ற நேர்காணலில் கலந்துகொள்ள பிரிகேடியர் தர நிலையில் இருந்த ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர் வந்திருந்தார். அவர் உத்தப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இது தவிர, வேறு மூன்று முன்னாள் அதிகாரிகளும் நேர்காணலில் கலந்து கொண்டனர். இவர்கள் யாரும் உத்தர பிரதேச கேடரை சேர்ந்தவர்கள் அல்ல.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராஜேஷ் பாண்டே, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் சந்திரா ஆகியோரும் மற்ற வேட்பாளர்களுடன் நேர்காணலில் கலந்துகொண்டனர்.
ராஜேஷ் பாண்டே, உத்தர பிரதேச கேடரை சேர்ந்த 2005ஆம் ஆண்டுப் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியாவார் (மாநிலப் பணிப் பிரிவில் இருந்து பதவி உயர்வு பெற்றவர்). இவர் காவல் துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவர்.
இவர் உத்தர பிரதேச பயங்கரவாதத் தடுப்புப் படை , சிறப்புப் படை மற்றும் பைசாபாத்/அயோத்தியின் மூத்த காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் குக்கிராமக் குற்றவாளியான ஸ்ரீபிரகாஷ் சுக்லாவுடன் மோதல் ஏற்பட்ட சம்பவம் நிகழ்ந்தது.
ராஜேஷ் பாண்டேவுக்கு இரண்டாவது நாளும் நேர்காணல் நடைபெற்றது. இது தவிர, பிகார் டிஜிபி பிரவேஷ் சக்சேனாவும் புதன்கிழமை நேர்காணலில் கலந்துகொண்டார். பிரவேஷ் சக்சேனா பீகாரின் தற்போதைய காவல்துறை இயக்குநர் ஜெனரல்.
தினேஷ் சந்திரா, உத்தர பிரதேச கேடரை சேர்ந்த 2012ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியாவார். மாநில சிவில் சேவையில் இருந்து பதவி உயர்வு பெற்றவர். இவர் சிறப்புச் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்றவர். இவர் ஜான்பூர், பஹ்ரைச், கான்பூர் தேஹாத், சஹாரன்பூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியுள்ளார். மேலும், 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் எக்ஸலன்ஸ் இன் கவர்னன்ஸ்' விருதையும் பெற்றுள்ளார்.
இந்த நேர்காணல் சுமார் 40 முதல் 50 நிமிடங்கள் வரை நடைபெற்றுள்ளது. அதில், மதப் பணிகளில் உள்ள அனுபவம், ராமர் மீதான நம்பிக்கை மற்றும் இந்து மதத்தின் பிற மரபுகள் தொடர்பான கேள்விகளும் கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
வேட்பாளர்கள் குடுமி வைத்துக் கொள்கிறார்களா, பூணூல் அணிகிறார்களா, முழுமையான சைவ உண்பவர்களா அல்லது அசைவம் சாப்பிடுபவர்களா, மது அருந்துகிறார்களா இல்லையா, தீவிர இந்துவா அல்லது இறை நம்பிக்கை மட்டும் கொண்டவரா, இந்து மதத்திற்கு ஏற்ப ஆடை அணிவதில் வசதியாக இருப்பார்களா போன்ற கேள்விகளும் கேட்கப்பட்டன.
வேட்பாளர்களின் தலைமைப் பண்பு, மத மற்றும் சமூக ஈடுபாடு, ராமர் கோயில் குறித்த அவர்களின் பார்வை மற்றும் செயல் திட்டம் குறித்தும் கேள்விகள் கேட்கப்பட்டதாக வட்டாரங்கள் தெரிவித்தன. அனைத்து நேர்காணல்களும் ராமர் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள கிரீன் ஹவுஸில் நடைபெற்றன.
எப்போது, எங்கு, யார் இந்த நேர்காணலை நடத்தினர்?
நேர்காணலில் பங்கெடுக்க வந்த 16 பேரும் திங்கள்கிழமை இரவு அயோத்தியை அடைந்தனர், மேலும் அறக்கட்டளையின் பரிந்துரைப்படி வெவ்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். முழு நேர்காணல் நடைமுறையும் ரகசியமாக, அறைக்குள் நடைபெற்றது.
அவர்கள் அனைவரும் காலை 9 மணியளவில் ராமர் கோயில் வளாகத்திற்கு வந்தடைந்ததாகவும், காலை 10 மணிக்கு நேர்காணல் தொடங்கியதாகவும் அறக்கட்டளை வட்டாரங்கள் தெரிவித்தன. நேர்காணல் தொடங்குவதற்கு முன்பு அனைத்து வேட்பாளர்களுக்கும் முழு ராமர் கோயில் வளாகமும் சுற்றிக் காண்பிக்கப்பட்டது.
"நேர்காணலுக்காக வந்திருந்த ஒவ்வொரு வேட்பாளரும் அயோத்தி விமான நிலையத்திற்கு வந்தடையும் தங்களது பயணத் திட்டத்தை முன்பே அறக்கட்டளைக்கு அனுப்பிவிட்டனர். அறக்கட்டளை தரப்பில் அவர்களை விமான நிலையத்தில் இருந்தே அழைத்துச் சென்றனர். அங்கிருந்து தனித்தனி வாகனங்களில் வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்" என்று அறக்கட்டளை தரப்பினர் தெரிவித்தனர்.
மேலும், "ராமர் கோயில் வளாகத்திலேயே நேர்காணல் நடத்தப்படுகின்றன. மேலும், வேட்பாளர்கள் ஊடகங்களிடம் பேசக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக" என்று அவர்கள் கூறினர்.
"நேர்காணல் பணிகள் முடிந்ததும், அனைத்து வேட்பாளர்களும் மீண்டும் அயோத்தி விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்; அங்கிருந்து அவர்கள் புதுடெல்லிக்கு விமானம் மூலம் செல்வார்கள். டெல்லியில் இருந்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்வார்கள்" என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்த 16 பேரில் முன்னாள் அரசு அதிகாரிகளுடன், தென்னிந்திய கோயில்களில் மூத்த பதவிகளை வகித்தவர்களும் அடங்குவர். மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழுவினர் திங்கள்கிழமை இரவு அயோத்தியை வந்தடைந்தனர். இறுதி செய்யப்பட்ட 16 பேரில் இருந்து மூவரின் பெயர்களை இந்தக் குழு தேர்வு செய்யும். இதன் மீது அறக்கட்டளை இறுதி முடிவை எடுக்கும்.
நான்கு கட்டங்களாக தேர்வு முறை
அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கைப்படி, தேர்வு முறை நான்கு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது.
முதல் கட்டத்தில் மொத்தம் 5,585 விண்ணப்பங்கள் பெறப்பட்டன; அவற்றில் 3,877 விண்ணப்பங்களுடன் விரிவான சுயவிவரக் குறிப்பும் இணைக்கப்பட்டிருந்தது. மேலாண்மைத் திறன், பெரிய அளவிலான நிகழ்வுகள் மற்றும் பணியாளர்களை நிர்வகிக்கும் அனுபவம், தனிப்பட்ட திறன்கள், மொழி அறிவு, பார்வை மற்றும் மூலோபாயத் திட்டங்கள் தொடர்பான விரிவான விவரங்கள் அனைத்து விண்ணப்பதாரர்களிடமும் கேட்கப்பட்டன.
இரண்டாம் கட்டத்தில் 1,580 வேட்பாளர்களின் விண்ணப்பங்கள் விரிவாக மதிப்பிடப்பட்டன. இவர்களில் சுமார் 111 பேர் பல நாட்களாக நடைபெற்ற ஆன்லைன் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டனர்.
தொடர்புத் திறன், தொழில்முறை அனுபவம், பார்வை, ஆளுமை, தலைமைப் பண்பு, தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தக் கட்டத்தில் விண்ணப்பதாரர்கள் மதிப்பிடப்பட்டனர்.
மூன்றாம் கட்ட ஆன்லைன் மதிப்பீட்டுக்குப் பிறகு, அயோத்தியில் நேர்காணல் செய்வதற்காக 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் பாதுகாப்புத் துறை, அரசுப் பணி, கார்ப்பரேட் மற்றும் தொழில்துறை, கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்ற முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.
இறுதிக் கட்டத்திற்குத் தகுதி பெற்ற அனைத்து 16 பேரும் அவரவர் துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனைகளைப் படைத்த அனுபவமிக்க வல்லுநர்கள்.
இறுதி வேட்பாளர்களை மதிப்பிடும் அடுத்த கட்டப் பணிகளைத் தேடுதல் குழு இப்போது முன்னெடுத்துச் செல்லும் என்றும், உரிய காலத்தில் மூன்று பெயர்கள் கொண்ட பட்டியலை ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளையிடம் வழங்கும் என்றும் அறக்கட்டளையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான இறுதி அறிவிப்பை அறக்கட்டளையே வெளியிடும்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அமிதாப் தாக்கூருக்கு அழைப்பு வரவில்லை
இந்தப் பதவிக்குத் தான் அனுப்பிய விண்ணப்பத்திற்கு எந்தவித பதிலும் கிடைக்காத நிலையில், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அமிதாப் தாக்கூர், தேர்வு நடைமுறையிலும் அதன் தகுதிகளிலும் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று கோரியுள்ளார். மேலும், இறுதிப் பட்டியலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை அறக்கட்டளை வெளிப்படையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து தாக்கூர் கூறுகையில், "அயோத்தியில் உள்ள ராமர் கோயில் அறக்கட்டளைக்கு இன்று நான் ஒரு கடிதம் அனுப்பியுள்ளேன். நான் அறக்கட்டளையின் சிஇஓ பதவிக்கு விண்ணப்பித்து இருந்தேன், ஆனால் இன்று வரை எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை. சுமார் 5,200 விண்ணப்பங்களில் இருந்து 16 பேர் மட்டுமே அயோத்தியில் நடைபெறும் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் மூலமாகத் தெரிந்துகொண்டேன். என்னை நேர்காணலுக்கு அழைக்கவில்லை என்பதில் எனக்கு எந்தவொரு தனிப்பட்ட குறையும் இல்லை, ஆனால் இவ்வளவு பெரிய அளவில் விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், நேர்காணலுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர்களை அறக்கட்டளை பொதுவெளியில் வெளியிட வேண்டும்" என்றார்.
"இதனுடன், எதைக் கருத்தில் கொண்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் என்பதற்கான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்; மேலும் விண்ணப்பதாரர்களுக்கு அவர்கள் தேர்வு செய்யப்பட்டார்களா அல்லது நிராகரிக்கப்பட்டார்களா என்பது குறித்த அதிகாரபூர்வ தகவலையும் தெரிவிக்க வேண்டும். முழுமையான இந்தச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை கட்டாயம் பேணப்பட வேண்டும் என்பதே என் கருத்து" என்றும் அவர் குறிப்பிட்டார்.
உலகின் மிகவும் புகழ்பெற்ற கோயில் திட்டத்தில் தொழில்முறை நிர்வாகத்தையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதி செய்வதற்கு ஒரு முழுநேர சிஇஓ-வை நியமிப்பது மிகவும் அவசியமானது என்று ராமர் கோயில் கட்டுமானக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா ஏற்கனவே தெரிவித்துள்ளார்.
இந்த நியமனம் முற்றிலும் தன்னாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்கும் என்று அறக்கட்டளை தெளிவுபடுத்தியுள்ளது. சிஇஓ-வுக்கான அதிகாரங்களை அறக்கட்டளையே நிர்ணயிக்கும். இதில் எந்தவித அரசுத் தலையீடும் இருக்காது. சிஇஓ நேரடியாக அறக்கட்டளையின் பொதுச் செயலாளரிடமே தனது பணிகளைத் தெரிவிப்பார்.
அறக்கட்டளையின் வழிகாட்டுதலின்படி, அறக்கட்டளைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் சிஇஓ நீண்ட காலத் திட்டங்களையும் தயாரிப்பார் என்று அறக்கட்டளையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ராமர் கோயில் அறக்கட்டளையின் சிஇஓ-வாக நியமிக்கப்படும் நபர், அமைப்பின் அனைத்து சட்டரீதியான, நிர்வாக மற்றும் நிதிசார் பொறுப்புகளையும் கவனித்துக் கொள்வார். அமைப்பின் தன்மை மற்றும் அளவுக்கு ஏற்ப முறைகள், செயல்முறைகள் மற்றும் செயல்பாட்டு நடைமுறைகளை உருவாக்குவதும், நிறுவனத்தின் நோக்கங்களுக்கு ஏற்ப நிறுவனக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதும் சிஇஓ-வின் பொறுப்பாக இருக்கும் என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
இதுதவிர, அமைப்பின் அதிகாரிகள், நிர்வாகிகள், அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு முதன்மை நிர்வாக அதிகாரியாக சிஇஓ செயல்படுவார். அறக்கட்டளையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் எதிர்கால வளர்ச்சியைத் திறம்பட நிர்வகிப்பதை சிஇஓ உறுதி செய்வார். மேலும் அனைத்து சட்டரீதியான, ஒழுங்குமுறை மற்றும் அறக்கட்டளைப் பத்திரம் தொடர்பான தேவைகள் முழுமையாகப் பின்பற்றப்படுவதையும் அவர் உறுதி செய்வார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு