You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருப்பரங்குன்றம்: 17 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பிறகு வீட்டுக்கு மின்சார வசதி பெற்ற குடும்பம்
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட பனையூர் ஊராட்சியின் திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நந்தினி வேல்முருகன், தனது வீட்டிற்கு மின்சார இணைப்பு வழங்க பலமுறை அரசு அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் இன்னும் அந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என பிபிசி தமிழிடம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நேற்று (ஆகஸ்ட் 12) இது தொடர்பாக பிபிசி தமிழ் செய்தி வெளியிட்ட நிலையில், இன்று (ஆகஸ்ட் 13) அவருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
"விரைவில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு, நந்தினியின் வீட்டிற்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மதுரை மாவட்ட நிர்வாகம் பிபிசி தமிழிடம் விளக்கம் அளித்திருந்த நிலையில், இன்று புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நந்தினியின் வீட்டிற்கு மேலே தாழ்வழுத்த மின்பாதை செல்வதால், அதை மாற்றி அமைக்க பங்களிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து, பணம் செலுத்த வேண்டும் என்று மின்வாரியத் துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், "40,000 முதல் 1 லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்கள், கூலி வேலைக்குச் செல்லும் என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது" என்று நந்தினி கூறியிருந்தார்.
பின்னணி என்ன?
திருவள்ளுவர் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் நந்தினி வேல்முருகனுக்கு பாலாஜி, பிரபாவதி என இரு குழந்தைகள் உள்ளனர். கீழடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பாலாஜி 10ஆம் வகுப்பும், பிரபாவதி 9ஆம் வகுப்பும் படித்து வருகிறார். கணவர் வேல்முருகன், உடல்நிலை காரணமாக வேலைக்குச் செல்ல முடியாமல் வீட்டிலேயே இருப்பதாக நந்தினி தெரிவித்திருந்தார்.
தனது பகுதியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், தனது வீட்டிற்கு மட்டும் மின்சார இணைப்பு வழங்கப்படவில்லை என்றும், இதனால் மின்சாரமின்றி பிள்ளைகள் தெரு விளக்கு வெளிச்சத்தில் தெருவில் அமர்ந்து படிப்பதாகவும் நந்தினி கூறியிருந்தார்.
"உணவு அருந்துவது, தூங்குவதுகூட வீதிகளில்தான். வீட்டில் செல்போன்கள் தவிர்த்து வேறு எந்த மின் சாதனங்களும் இல்லை. செல்போன்களுக்கு சார்ஜ் போடுவதற்கும்கூட சற்று தூரத்தில் உள்ள உறவினர்கள் வீடுகளுக்குச் செல்வோம், அவசரத்திற்கு அண்டை வீடுகளில் சார்ஜ் செய்துகொள்வோம். மின்சாரம் இல்லாத அன்றாட வாழ்க்கை என்பது கொடுமையாக உள்ளது" என்று அவர் கூறியிருந்தார்.
அதேபோல, மழைக் காலங்களில் தானும் தனது தங்கையும் படிக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவதாக நந்தினியின் மகன் பாலாஜி கூறியிருந்தார்.
திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சருமான சி.டி.ஆர் நிர்மல்குமார் இரு மாதங்களுக்கு முன்பாக தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க வந்தபோது, அவரைச் சந்தித்து மனு அளித்ததாகவும் பாலாஜி குறிப்பிட்டிருந்தார்.
"அமைச்சர் அருகிலிருந்த மின்துறை அதிகாரிகளை அழைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு என் முன்பாக அறிவுறுத்தினார். ஆனால், இன்று வரை எங்கள் வீட்டிற்கு மின்சார இணைப்பு கிடைக்கவில்லை" என்று பாலாஜி கூறினார்.
"இதுதொடர்பாக அண்டை வீட்டாரின் உதவியோடு முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் மனுவும் அளித்தோம்" என்று குறிப்பிட்டிருந்தார் நந்தினி.
நந்தினி முதலமைச்சரின் தனிப் பிரிவுக்கு புகார் மனு அளித்ததைத் தொடர்ந்து, கடந்த ஜூன் மாதம் 18ஆம் தேதி அவரது வீடு அமைந்திருக்கும் பகுதியில் மின்வாரிய அதிகாரிகள் கள ஆய்வு செய்ததாக பனையூர், உதவி மின்பொறியாளர் பாலமுருகன் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பிய விளக்கக் கடிதத்தில், "வேல்முருகன் என்பவரது வீட்டின் மேல் தாழ்வழுத்த மின் பாதை செல்கிறது. அந்த மின் பாதையை மாற்றியமைக்க பங்களிப்புத் திட்டத்தின் கீழ் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய மதிப்பீட்டு கட்டணத்தைச் செலுத்தும் பட்சத்தில் மின்பாதை மாற்றி அமைக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
உள்ளூர் மின்மாற்றிகளில் இருந்து வீடுகளுக்கும் பிற நுகர்வோருக்கும் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் கம்பிகள் தாழ்வழுத்த மின் பாதை எனப்படும். பொதுவாக, தெருக்களில் உள்ள மின்கம்பங்களில் இந்த மின் கம்பிகள் செல்வதையும், அதிலிருந்து ஒவ்வொரு வீட்டிற்கும் தனித்தனியாக மின் இணைப்பு வழங்கப்படுவதையும் காணலாம். பெரும்பாலும் இவற்றில் மூன்று ஃபேஸ் கம்பிகளும் ஒரு நியூட்ரல் கம்பியும் இருக்கும்.
தமிழக மின்சார வாரியத்தின் விதிமுறைகளின்படி, தாழ்வழுத்த மின்பாதை கட்டடத்திற்கு மேலே செல்லும்போது மின் கம்பிக்கு நேர் கீழே 2.5 மீட்டர் செங்குத்து இடைவெளி இருக்க வேண்டும். மின்பாதை கட்டடத்திற்கு அருகில் செல்லும்போது, 1.2 மீட்டர் கிடைமட்ட இடைவெளி இருக்க வேண்டும். இதற்குக் குறைவான இடைவெளி இருந்தால் அந்தக் கட்டடத்திற்குப் புதிய மின்சார இணைப்பு வழங்க முடியாது.
மின் இணைப்பு, மின்பாதை, மின்கம்பம் அல்லது மின் சாதனங்களை வேறு இடத்திற்கு மாற்றி அமைப்பதற்கான முழு செலவையும் நுகர்வோர் அல்லது விண்ணப்பதாரரே ஏற்க வேண்டும். இதற்கான முழு மதிப்பீட்டுத் தொகையையும் நுகர்வோர் முன்கூட்டியே செலுத்த வேண்டும். முழுத் தொகையையும் செலுத்திய பிறகே இதற்கான பணிகள் தொடங்கப்படும்.
"மதிப்பீட்டு கட்டணம் என்று 40,000 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை கேட்கிறார்கள். கூலி வேலைக்குச் செல்லும் என்னால் எப்படி அவ்வளவு பணம் கொடுக்க முடியும்" என்று நந்தினி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து பிபிசி தமிழ் மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டிருந்தது.
"விரைவில் இந்தப் பிரச்னை சரிசெய்யப்பட்டு, அவர்களுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விளக்கம் அளித்திருந்தது.
இந்நிலையில், "நந்தினி என்பவர் மின் இணைப்பு கோரிய வீட்டிற்கு மேலே சென்று கொண்டிருந்த தாழ்வழுத்த மின் பாதையை மாற்றியமைக்க நுகர்வோர் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் அளித்ததின் பேரில் வாரிய விதிமுறைகளின்படி ஒரு புதிய மின்கம்பம் அமைத்து வாரியம் நிர்ணயித்துள்ள உயரத்திற்கு மின் பாதையின் உயரத்தை அதிகரிக்கின்ற வகையில் தயார் செய்யப்பட்ட மதிப்பீட்டின் படியான தொகையைச் செலுத்தியதின் பேரில் உடனடியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின் பாதையின் உயரம் அதிகரிக்கப்பட்டது" என தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று தெரிவித்துள்ளது.
"நந்தினியின் வீட்டிற்குப் புதிய மின் இணைப்பு வேண்டி இணையதளம் வாயிலாக விண்ணப்பம் அளித்து உரிய கட்டணங்களைச் செலுத்தியதின் பேரில் 13.08.2026 அன்று புதிய மின் இணைப்பு வழங்கப்பட்டது," என தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய நந்தினி, "17 ஆண்டுகளுக்குப் பிறகு மின்சாரம் கிடைத்துள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. ஒரே நாளில் எங்கள் வாழ்க்கை மாறிவிட்டதைப் போல் உள்ளது. மதிப்பீட்டுத் தொகையைச் செலுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கனகராஜ் எங்களுக்கு உதவினார்" என்று கூறினார்.
"இனி தனது நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவேன் என மகனும் மகளும் கூறுகிறார்கள். இனி இரவில் நாங்கள் வீட்டிற்குள் படுத்து உறங்குவோம், சாப்பிடுவோம்" என்றும் அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு