அர்ஜென்டினா - எகிப்து: பரபரப்பான ஆட்டத்தின் மறக்க முடியாத தருணங்களை காட்டும் 15 படங்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

ஃபிஃபா உலகக்கோப்பை நாக்-அவுட் போட்டியில் நடப்பு சாம்பியனான அர்ஜென்டினாவுக்கு எதிராக எகிப்து 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

எகிப்து அணி முதல் முறையாக நாக்-அவுட் சுற்றில் தங்களின் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் தருவாயில் இருந்தது.

79-ஆவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் கிறிஸ்டியன் ரொமேரோ ஒரு கோல் அடித்து கோல் வித்தியாசத்தைக் குறைத்தார்.

ஆனால், கால்பந்து ரசிகர்களால் 'கோட்' என்று அழைக்கப்படும் அர்ஜென்டினாவின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி, அடுத்த நான்கே நிமிடங்களில் மற்றொரு கோல் அடித்து ஸ்கோரை 2-2 என சமன் செய்தார்.

அதன்பின்னர், கூடுதல் நேரத்தின் (ஸ்டாப்பேஜ் டைம்) இரண்டாவது நிமிடத்தில் அர்ஜென்டினாவின் என்சோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார்.

எகிப்துக்கு எதிராக 3-2 என்ற வெற்றியின் மூலம் அர்ஜென்டினா கால் இறுதிப் போட்டிக்கான தனது இடத்தை உறுதி செய்தது.

விறுவிறுப்பான இந்தப் போட்டியின் பரபரப்பான நிமிடங்களை விவரிக்கும் புகைப்படங்களை இங்கே காணலாம்.

நடுவர் - எகிப்து வீரர்கள் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்

வீடியோ அசிஸ்டண்ட் ரெஃப்ரி, ஃபவுல் காரணமாக எகிப்து வீரர் முஸ்தஃபா ஜிகோவின் இரண்டாவது கோலை நிராகரித்ததால், எகிப்திய அணி விரக்தியும் ஆத்திரமும் அடைந்தது. அந்த நேரத்தில் எகிப்து 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. எகிப்தின் கோபம் இத்துடன் முடிந்துவிடவில்லை.

அர்ஜென்டினாவின் மூன்றாவது கோலுக்கு சில நொடிகள் முன்பாக, தங்களின் பெனால்டி பகுதியில் முகமது சலா, ஃபவுல் செய்யப்பட்டதாக அவர்கள் நம்பினர். ஆனால் நடுவர் அதைப் புறக்கணித்துவிட்டு ஆட்டத்தைத் தொடர அனுமதித்தார்.

நடுவர் ஃபிரான்சுவா லெடெக்சியர் ஆட்டமுடிவுக்கான விசிலை ஊதியபோது, பல எகிப்து வீரர்களால் தங்களின் இந்தத் தோல்வியை நம்ப முடியவில்லை, அவர்கள் மைதானத்திலேயே விரக்தியை வெளிப்படுத்தத் தொடங்கினர்.

உணர்ச்சிவயப்பட்ட எகிப்து ரசிகர்கள்

கிட்டத்தட்ட ஆட்டத்தின் இறுதிவரை முன்னிலை வகித்த எகிப்து அணி இறுதிக்கட்டத்தில் வெற்றியை நழுவவிட்டது அந்த அணியின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.

போட்டி நடைபெற்ற மைதானத்தில் மட்டுமல்லாது காஸாவிலும் பாலத்தீன மக்கள் எகிப்துக்கு ஆதரவாக கோஷம் எழுப்பியபடியும் எகிப்து அணியின் கொடியை ஏந்தியபடியும் இருந்தனர்.

ஆதங்கத்தை வெளிப்படுத்திய எகிப்து வீரர்களும் பயிற்சியாளரும்

சர்ச்சைக்குள்ளான நடுவர் ஃபிரான்சுவா லெடெக்சியரின் நடவடிக்கைகள்

போட்டிக்குப் பிந்தைய ஒரு பரபரப்பான பேட்டி ஒன்றில் பேசிய எகிப்து கேப்டன் ஹோசாம் ஹாசன், தங்கள் அணி "அநீதியான முறையில் நடத்தப்பட்டது" என்று கூறினார்.

இது குறித்த கருத்து கேட்பதற்காக பிபிசி ஸ்போர்ட் ஃபிஃபாவைத் தொடர்பு கொண்டுள்ளது.

"மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன" என்று ஹோசாம் ஹாசன் கூறினார்

அர்ஜென்டினாவின் வெற்றி மெஸ்ஸியும்

போட்டி நடத்தப்பட்ட விதத்தில் சர்ச்சைகள் எழுந்திருந்தாலும் அர்ஜென்டினா ரசிகர்கள் அசாதாரணமான இந்த வெற்றியைக் கொண்டாடினர். போட்டி நடைபெற்ற மைதானத்திற்கு வெளியே மட்டுமல்லாது அர்ஜென்டினா முழுவதும் அந்த அணியின் ரசிகர்கள் பல்வேறு வழிகளில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

நடப்பு சாம்பியனான ஆர்ஜென்டினா மிகவும் பரபரப்பான ஒரு நாக்-அவுட் சுற்றின் முடிவில் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

இந்த நிலையில் காலிறுதிப் போட்டியில் ஸ்விட்சர்லாந்து அணியை அர்ஜென்டினா எதிர்கொள்ள இருக்கிறது. ஸ்விட்சர்லாந்து - கொலம்பியா இடையேயான போட்டியில் எந்தக் கோலும் எடுக்கப்படாத நிலையில் பெனால்டி சுற்றில் 4-3 என்கிற கணக்கில் சுவட்சர்லாந்து வென்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு