You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போக்சோ புகார் அளித்த சிறுமியுடன் தனது மனைவி, 2 மகன்களை இவர் கொன்றாரா? 6 பேர் கொலையில் புதிய தகவல்
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்
(எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள செய்திகள் உங்களை சங்கடத்துக்கு உள்ளாக்கலாம்)
தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் ராஜ் குமார் என்ற இளைஞர் ஆறு பேரைக் கொலை செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஜூலை 10ஆம் தேதி இரவு முதல் 11ஆம் தேதி காலைக்கு இடைப்பட்ட நேரத்தில் பி. ராஜ்குமார் ஆறு பேரைக் கொலை செய்ததாக ஃபியூச்சர் சிட்டி காவல் ஆணையரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
"இந்த ஆண்டு மே 16 அன்று ராஜ்குமார் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் முதலில் அந்த வழக்கை தொடர்ந்த சிறுமியின் தாயையும் பாட்டியையும் கொலை செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அச்சிறுமியை தைவாலாகுடா என்ற மற்றொரு கிராமத்திற்கு அழைத்துச் சென்று, அங்குள்ள ஒரு குளத்தின் அருகே அவரை கொலை செய்துள்ளார். அதன் பிறகு அதே கிராமத்தில் உள்ள தனது வீட்டில் தனது மனைவி மற்றும் இரு சிறு குழந்தைகளைக் அவர் கொலை செய்துள்ளார். இவை அனைத்தும் இரவு 11 மணி முதல் 12 மணிக்குள் நடந்தன" என்று காவல்துறை தெரிவித்தது.
காவல்துறை பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில் குற்ற நிகழ்வு இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது.
முதல் இடம்
ஷாபாத் என்பது தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ஒரு மண்டல தலைமையகம் ஆகும். இது ஒரு தொலைதூர கிராமமோ அல்லது சுற்றிலும் வீடுகளும் மக்களும் இல்லாத ஒரு இடமோ அல்ல.
சாலைக்கு சற்று அருகில் இருந்த ஒரு வீட்டில், இரண்டு சிறுமிகள், அவர்களின் தாய் மற்றும் பாட்டி என மொத்தம் நான்கு பெண்கள் வசித்து வந்தனர்.
அந்த நால்வரில் ஒருவர் 17 வயது சிறுமி. மற்றொரு 19 வயதுப் பெண் மாற்றுத்திறனாளி. அவர் உடல்ரீதியாவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளார்.
ஜூலை 10ஆம் தேதி இரவு 11 மணியளவில் ராஜ் குமார் அங்கு ஒரு காரில் வந்துள்ளார்.
அவர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் பீர் டின் (கேன்) வீட்டின் திண்ணையில் கிடந்தது. 17 வயது சிறுமியை வீட்டிலிருந்து வெளியே அவர் இழுத்துச் செல்ல முயன்றபோது, அவரது தாயும் பாட்டியும் குத்திக் கொலை செய்யப்பட்டனர்.
அந்த வீடு முழுவதும் ரத்தக் கறையாக இருந்தது. தன் தாயும் பாட்டியும் இறந்துவிட்டதும், யாரோ தன் தங்கையை இழுத்துச் சென்றுவிட்டதும் அந்த மாற்றுத்திறனாளி பெண்ணுக்குத் தெரிந்ததா என்பது குறித்துத் தெரியவில்லை.
அலறவோ நகரவோ முடியாமல், அந்தப் பெண் ரத்த வெள்ளத்தின் நடுவே கிடந்தார்.
இரண்டாம் இடம்
ராஜ் குமார் தான் கடத்திய 17 வயது சிறுமியை ஒரு காரில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள தைவாலாகுடா என்ற கிராமத்திற்கு சென்றார்.
அந்தக் கிராமத்தின் எல்லையில் ஒரு குளம் உள்ளது. அதில் மிகக் குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்காக அதில் கற்களை அமைத்துள்ளனர்.
அந்த கற்களுக்கு அருகில் வைத்து அச்சிறுமி ராஜ்குமார் கொலை செய்தார்.
அங்கு ரத்தக் கறை இன்னும் அப்படியே உள்ளது.
மூன்றாம் இடம்
அதே கிராமத்தில் அரை கிலோமீட்டர் தொலைவில் ராஜ்குமாரின் வீடு உள்ளது. அவரது மனைவியும், இரண்டு மகன்களும் கட்டிலில் படுத்திருந்தார்கள்.
அங்கு அப்படி என்ன சண்டை நடந்திருக்கும் என்று ஆச்சரியமாக இருக்கிறது. அந்த இரண்டு சிறு குழந்தைகளும் படுக்கையில் தூங்கிக் கொண்டிருப்பது போல தெரிகிறது. ஆனால் உண்மையில், அந்த குழந்தைகளின் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது.
அந்தக் காட்சியைக் பார்த்த அனைவரும் மனமுடைந்தனர்.
பல கொலை வழக்குகளைக் கையாளும் காவல்துறையினர், பிரேதப் பரிசோதனை செய்யும் மருத்துவர்கள் மற்றும் செய்திகளைச் சேகரிக்கும் செய்தியாளர்களாலும் கூட, அந்த நிலையில் அச்சிறு குழந்தைகளைக் காண முடியவில்லை. குழந்தைகளின் தாய் அதே படுக்கையில் அவர்கள் அருகில் ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவர்தான் ராஜ் குமாரின் மனைவி.
அவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றுள்ளார். குழந்தைகள் அணியும் அந்தச் சிறிய காலணிகள் வீட்டின் வெளியே சிதறிக் கிடக்கின்றன.
அங்கு அவர்களின் பொம்மைகளும் கார்களும் உள்ளன.
அந்த பொம்மைகளும் காலணிகளும் இறந்துபோன குழந்தைகளை எனக்கு நினைவூட்டுகின்றன.
அவர்களைக் கொலை செய்த ராஜ் குமார், தனது தந்தையைத் தொலைபேசியில் அழைத்து தான் கொலை செய்துவிட்டதாக கூறியுள்ளார்.
அவரது தந்தை இந்த விஷயத்தை காவல்துறையில் புகார் செய்தார்.
காவல்துறையினர் இரண்டு இடங்களுக்கும் சென்று வழக்கை விசாரிக்கத் தொடங்கினர். அவர்கள் இரண்டு குடும்பத்தினரிடமிருந்தும் புகார்களைப் பெற்றனர்.
உடல்களுக்கு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இறுதிச் சடங்குகளும் நிறைவடைந்துள்ளன.
இந்த மூன்று இடங்களில் நடந்த ஆறு கொலைகளும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன.
ஒரே வீட்டில் வசித்து வந்த மூன்று தலைமுறைப் பெண்களையும், தனது சொந்த வீட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளையும் கொலை செய்த, சந்தேகத்துக்கு இடமான அந்த நபரைக் காவல்துறையினர் தேடி வருவதாக ஃபியூச்சர் சிட்டி கமிஷனர் அலுவலகம் அறிவித்துள்ளது.
சிறுமியைக் கடத்தப் பயன்படுத்தப்பட்ட சிவப்பு நிற கார், சேகுரு கிராமத்தில் உள்ள ரயில் தண்டவாளத்திற்கு அருகில் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.
ராஜ் குமார் இருக்கும் இடம் குறித்த தகவலை வழங்குபவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் பாரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜ் குமார் இந்த கொலைகளைத் திட்டமிட்டு செய்தாரா? அவருக்கு யார் உதவியது? அந்தச் சிறுமியால் ஏன் சத்தமாக அலற முடியவில்லை? அவர் ஏன் தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்றார்? போன்ற பல கேள்விகள் உள்ளன. இவை அனைத்தும் விசாரணையின் போதுதான் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
17 வயது பெண்ணுடன் அறிமுகம் எப்படி?
பி. ராஜ் குமாரின் சொந்த ஊர் தைவாலாகுடா.
அவர் தன்னை விட வயது மூத்தவரான, அதே கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.
"அவர்களின் காதல் எவ்வளவு காலம் நீடித்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர்கள் மிகவும் வசதியானவர்கள். நாங்கள் அப்படி இல்லை. ஆனால் எனது தங்கை நன்கு படித்தவர். அந்த நேரத்தில், அவள் பி.எட் படித்துவிட்டுப் பாடம் சொல்லிக்கொடுத்தார்.
அவர் என் தங்கையைத் திருமணம் செய்த பிறகு, நான் அவர்களுடன் நீண்ட நாட்களாகப் பேசவில்லை. என் தாயார் மட்டும் அவரைப் போய்ப் பார்த்து, நல்லது கெட்டதுகளை விசாரித்து வருவார்" என்று சரிதாவின் சகோதரர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஆனால், அவர்கள் தங்கள் சொந்த ஊரைத் தவிர்த்து வேறு ஏதோ ஒரு இடத்தில் குடியேறினர்.
தற்போது கொலை செய்யப்பட்டுள்ள குடும்பத்தினர் அவர்களுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து வந்தனர்.
அந்த 17 வயது சிறுமியின் தந்தை சில காலத்திற்கு முன்பு இறந்துவிட்டார்.
"அவர்கள் பக்கத்து வீட்டில் தங்கியிருந்ததும், அவர்களின் குழந்தைகள் இந்த வீட்டிற்கு வருவதும் எங்களுக்குப் பரிச்சயமான ஒன்றுதான். ஆனால் சிறுமியின் தந்தை இறந்த பிறகு, ராஜ் குமாரின் தொல்லை அதிகரித்தது. தொல்லையைத் தாங்க முடியாமல், சிறுமியைக் கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலிருந்தே படிக்க வைத்தோம். அவர் தேர்வுகள் முடிந்து திரும்பியபோது, அவர் சிறுமியின் கையைப் பிடித்து கல்லூரிக்கு வெளியே இழுக்க முயன்றார்.
அந்தச் சம்பவத்திற்காக மே 16 அன்று அவர் மீது நாங்கள் வழக்குத் தொடர்ந்தோம். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது, ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை. நாங்கள் எப்போது கேட்டாலும், ராஜ்குமார் தலைமறைவாக இருப்பதாகக் கூறினர். இதற்கிடையில், அவர் முன்ஜாமீனும் பெற்றிருந்தார். அவர் இனி உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார் என்று கூறி காவல்துறையினர் எங்களை அனுப்பிவிடுவார்கள்.
அவரது சகோதரரும் சமரசத்திற்காக எங்களிடம் வந்தார், ஆனால் நாங்கள் அதற்கு உடன்படவில்லை. இறுதியாக, அவர் இப்படிப்பட்ட செயலைச் செய்துள்ளார்" என்று கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட 17 வயது சிறுமியின் மாமா பிபிசியிடம் தெரிவித்தார்.
சிறுமியுடன் ராஜ் குமாருக்கு பரஸ்பர சம்மதத்துடன் கூடிய உறவு இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்தார்.
"அந்தச் சிறுமிக்கு ராஜ் குமாரை சிறிதும் பிடிக்காது. ஒருவேளை பிடித்திருந்தால், அவள் எங்களிடம் சொல்லியிருப்பாள் அல்லவா? அவருடனேயே சென்றிருப்பார் அல்லவா? ராஜ்குமார் அவருக்குத் தொல்லை கொடுத்து வருவதாக அப்பெண்ணின் தாயாரே எங்களிடம் கூறினார். காவல்துறையினரிடமும் கூறினார். அவரையும் கொன்றுவிடுவதாக ராஜ் குமார் மிரட்டியுள்ளார்" என்று அந்தச் சிறுமியின் மாமா கூறினார்.
கடந்த காலத்தில் அவரது கையைப் பிடித்தபோது, "உன் தந்தையையும் நான்தான் கொன்றேன்" என்று ராஜ் குமார் கூறியதாகக் குறிப்பிட்டு, அவரது தந்தையின் மரணம் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போக்சோ வழக்குத் தொடரப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தச் சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதற்கான துல்லியமான காரணங்கள் விசாரணையின் போது தான் கண்டறியப்பட வேண்டும்.
காவல்துறைக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
போக்சோ வழக்கின் விசாரணையில் காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் கடுமையான அலட்சியம் காட்டியதாக சிறுமியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
"நாங்கள் காவல்துறையிடம் கேட்கும் போதெல்லாம், ராஜ்குமாரைக் கண்டறிந்தால் பிடித்து விடுவோம் என்று கூறுவார்கள். தாங்கள் வலுவான போக்சோ வழக்கைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி எங்களை அனுப்பிவிடுவார்கள். ஆனால் அவரோ வெளியே சுற்றிக் கொண்டுதான் இருந்தார். அவருக்கு முன்ஜாமீன் கிடைக்கும் வரை அவர்கள் அவரை அங்கேயே விட்டு வைத்திருந்தனர்" என்று சிறுமியின் மாமா குற்றம் சாட்டினார்.
இதற்கிடையில், விசாரணையில் அலட்சியமாக இருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட காவல் நிலைய உதவி ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்த கூடுதல் விளக்கங்களுக்காக, பிபிசி நிறுவனம் ஃபியூச்சர் கமிஷனரேட் போலீஸ் கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட டிசிபிக்கள் , ஏசிபிக்களை தொலைபேசி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டது. அவர்களிடம் இருந்து இதுவரை பதில் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கோரி, அந்தப் பகுதியின் மக்கள் ஜூலை 11 அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதே நாளில் அங்கு செல்ல முயன்ற பிஆர்எஸ் கட்சித் தலைவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.
ஜூலை 12 அன்று, முன்னாள் அமைச்சர் சபிதா இந்திரா ரெட்டி தலைமையிலான பிஆர்எஸ் குழு, பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களை நேரில் சந்தித்தது.
அரசாங்கத்தின் சார்பாக, பட்னம் மகேந்தர் ரெட்டி மற்றும் பிற தலைவர்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்தித்தனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்த மாற்றுத்திறனாளி பெண்
கொல்லப்பட்ட சிறுமிக்கு 19 வயதில் ஒரு மூத்த சகோதரி உள்ளார். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவரால் நடக்கவோ, உட்காரவோ அல்லது பேசவோ முடியாது.
அவருக்கு உணவு ஊட்டுவது, குளிப்பாட்டுவது மற்றும் அவரது அன்றாடப் பணிகளைச் செய்வது உள்ளிட்ட அனைத்தையும் அவரது அம்மா அல்லது பாட்டி தான் செய்து வந்தனர்.
அவரது தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். இப்போது அவரது தாய், பாட்டி மற்றும் தங்கை ஆகிய அனைவரும் இறந்துவிட்டனர். அவருக்கு இனி யார் ஆதரவாக இருப்பார்கள் என்ற கேள்வியை கிராம மக்களிடமும் உறவினர்களிடமும் எழுப்பியுள்ளது.
அக்குடும்பத்திற்கு நிதியுதவி செய்யப் பலர் முன்வந்தபோதிலும், அந்தப் பணத்தைப் பெற்றுப் பயன்படுத்தும் நிலையில் அவர் இல்லை.
"அவர் படுத்த படுக்கையாக இருக்கிறார், அவருக்கு உணவைக் கூட படுக்க வைத்தே ஊட்ட வேண்டும். 19 வயது பெண்ணை அவளது தாயும் பாட்டியும் தான் கழிவறைக்கு அழைத்துச் செல்வார்கள். இப்போது ராஜ்குமார் அந்த வீட்டில் இருந்த எல்லோரையும் கொன்றுவிட்டார் " என்று அச்சிறுமியின் மாமா கூறினார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த குடும்பம்
இந்த மாற்றுத்திறனாளிப் பெண் விஷயத்தில், சிறுமியின் குடும்பத்தினர் காவல்துறை மீது மற்றொரு கடுமையான குற்றச்சாட்டையும் சுமத்தியுள்ளனர்.
"வீட்டிற்குள் கொலை நடந்த பிறகு, அந்த அறை முழுவதும் ரத்தக் கறையாக இருந்தது. மாற்றுத்திறனாளிப் பெண்ணால் நகர முடியவில்லை. அவர் அப்படியே ரத்தத்தில் நனைந்திருந்தார். ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் முதலில் உயிருடன் இருக்கும் பெண்ணைத் தானே வெளியில் அழைத்து வந்திருக்க வேண்டும்?
ஆனால் அவர்கள் உடல்களைத்தான் முதலில் வெளியில் எடுத்தனர். அதன் பிறகும் கூட, அந்தப் பெண்ணை வெளியில் கொண்டு வராமல் நீண்ட நேரம் அறைக்குள்ளேயே வைத்திருந்தனர். எங்களையும் உள்ளே விடவில்லை. இதனால் அந்தப் பெண் நீண்ட நேரம் ரத்தத்திலேயே கிடக்க நேரிட்டது" என்று மாமா குற்றம் சாட்டினார்.
இக்குற்றச்சாட்டுகள் குறித்த விளக்கத்தைப் பெற பிபிசி நிறுவனம் ஃபியூச்சர் கமிஷனரேட் போலீஸ் கமிஷனர் மற்றும் சம்பந்தப்பட்ட டிசிபிக்கள் , ஏசிபிக்களை தொலைபேசி, வாட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ள முயன்றது. ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இன்னும் பதில்கள் கிடைக்கவில்லை.
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு ஆதரவாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் தங்களுக்கு உறுதியளித்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர். அவரை ஒரு காப்பகத்தில் சேர்க்க உள்ளதாகவும் அவர்கள் கூறினர்.
மற்ற பெண்களுக்காக மனைவியை துன்புறுத்திய ராஜ்குமார்
மற்றொரு புறம், ராஜ் குமாரின் சொந்த ஊரான தைவாலாகுடாவில் சூழல் வேறாக உள்ளது.
காவல்துறையின் அறிக்கையின் படி, ராஜ் குமார் தனது மனைவி மற்றும் குழந்தைகளை அதே கிராமத்தில்தான் கொலை செய்துள்ளார்.
குழந்தைகளின் மாமாவும் பாட்டியும் கல்லறைகளில் அவர்களை அடக்கம் செய்துவிட்டு அழுது புலம்புகின்றனர்.
அத்தையான ஜெயம்மா, தனது மகள் சரிதாவையும் பேரக்குழந்தைகளையும் கொன்றதற்காக ராஜ் குமாரைத் திட்டி அழுது கொண்டிருக்கிறார்.
"ராஜ்குமார் என் மகளை வேறு திருமணம் செய்து கொள்ளுமாறும், கள்ளக்காதலர்களை அழைத்து வருமாறும் கூறினார். அதற்கு அவர் மறுத்ததால், அவரைக் கொன்றுவிட்டார். (பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு) குழந்தைகளை மூட்டைகளில் கொய்யாப்பழங்களைப் போலக் கொண்டு வந்தார்கள். காட்டில் உள்ள கல்லறைகளில், பழங்களைப் போன்ற அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் என் மகளுக்கு அருகில் கிடக்கின்றன. இரண்டு மகன்கள் பிறந்தனர். எப்படியாவது என் மகள் பிழைத்துக்கொள்வார் என்று நினைத்தேன். அதனால்தான் என் மகளுக்காக நான் போராடினேன். ஆனால் ராஜ்குமார் இப்படிச் செய்வார் என்று எனக்குத் தெரியாது" என்று கூறிக்கொண்டே ஜெயம்மா அழுதார்.
"ராஜ்குமார் சில பெண்களுடன் பேசினார், அதை என் தங்கையிடமும் கூறினார். இதனால் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. ஒருமுறை ராஜ்குமார் ஒரு பெண்ணுக்காகப் பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்தார். அதன் பிறகு என் மாமியார் வீட்டில் என் தங்கையை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரது கையால் தண்ணீர் கூட குடிக்க மாட்டார்கள். இத்தகைய சூழ்நிலைகளில், ராஜ் குமார் சில நேரங்களில் என் தங்கையை நன்றாக நடத்துவார், சில நேரங்களில் அவரைத் துன்புறுத்துவார். என் தங்கை இதையெல்லாம் சகித்துக் கொண்டார். இரண்டாவது பிரசவம் வரை நான் என் தங்கையுடன் பேசவே இல்லை.
எனது அம்மா என் தங்கையைக் கவனித்து வந்தார். அதன் பிறகு, ராஜ்குமார் அளிக்கும் தொல்லை பற்றி அவர் எங்களிடம் சொல்லியிருந்தால், நாங்கள் பெரியவர்களை வைத்து பேசியிருப்போம். ஆனால் அவர் அந்தத் துன்புறுத்தல்களைச் சகித்துக் கொண்டார். என் மைத்துனருக்குக் குழந்தைகளுடனும் இணக்கமான உறவு இல்லை.
மூத்த மகன் தனது தந்தையைப் பார்த்தாலே பயந்து நடுங்குவான். ஒருமுறை, தன் தந்தையை இப்படிப் பார்த்து அவன் பயந்து என்னை அடித்தான். பின்னர், குழந்தைகளை இப்படி நடத்தக் கூடாது என்று என் மைத்துனரிடம் நான் கூறியபோது, அவர் என்னிடம் நன்றாகப் பேசினார். ராஜ்குமார் என் தங்கையைக் கொடூரமாக சித்திரவதை செய்தார், ஆனால் அவர் எங்களிடம் சொல்லாமலேயே இருந்துவிட்டார்."
"ராஜ்குமார் ஒரு பெட்டிங் செயலியில் விளையாடிக் கொண்டிருந்தார் என்பது குறித்து எங்களுக்குத் தெரியும், ஆனால் அதன் துல்லியமான விவரங்கள் எங்களுக்குத் தெரியாது. போக்சோ வழக்குக்குப் பிறகுதான் அந்தச் சிறுமியைப் பற்றி எங்களுக்குத் தெரியவந்தது. என் தங்கைக்கு அது முன்பே தெரிந்திருந்தது, ஆனால் அவர் எங்களிடம் சொல்லவில்லை" என்று சரிதாவின் சகோதரி சஞ்சீவா பிபிசியிடம் தெரிவித்தார்.
காவல்துறையின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ராஜ் குமார் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பிடிபட்டதாக வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் காவல்துறை இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை.
குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்களிடம் பேச பிபிசி முயன்றது, ஆனால் அவர்களைத் தொடர்பு கொள்ள இயலவில்லை.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு