You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரீல்ஸ்களை தொடர்ந்து பார்ப்பது நம்மை எப்படி பாதிக்கிறது? மனநலத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்? 12 கேள்வி - பதில்
- எழுதியவர், பிரியங்கா தீமான்
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
ஒரு நபர் தனது மனநலத்தைப் பற்றி எப்படித் தெரிந்துகொள்ள முடியும்? அவர் அனுபவிக்கும் மனக் கவலை எப்போது தீவிரமான மனநலப் பிரச்னையாக மாறுகிறது?
மனச்சோர்வு, பதற்றம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் எப்போது மருத்துவரின் உதவியை நாட வேண்டும்? மேலும், நம்மில் ஒவ்வொருவரும் நல்ல மனநலத்தைப் பேணுவதற்கு என்ன செய்ய வேண்டும்?
மனநலம் தொடர்பான கேள்விகளுக்கான பதில்களைப் பெற பிபிசி செய்தியாளர் பிரியங்கா தீமான், உளவியல் நிபுணர் டாக்டர் கோமல்ப்ரீத் கவுருடன் உரையாடினார்.
கேள்வி: ஒருவருக்கு மனநல உதவி தேவைப்படுவதை சுட்டிக்காட்டும் ஆரம்ப அறிகுறிகள் என்ன?
பதில்: ஒருவர் இரண்டு வாரங்களுக்கும் மேலாக கவலையுடனோ மனவேதனையுடனோ இருந்தால், காரணமில்லாமல் பதற்றமடைந்தால், அதிகமாகவோ மிகக் குறைவாகவோ தூங்கினால், அதிகமாகவோ மிகக் குறைவாகவோ சாப்பிட்டால் கவனிக்க வேண்டும்.
அதிக மனஅழுத்தம், சமூக உறவுகளைத் தவிர்த்தல், மகிழ்ச்சியுடன் செய்து வந்த செயல்களில் ஆர்வம் இழத்தல் போன்ற அறிகுறிகளும் முக்கியமானவை.
இத்தகைய அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால், மனநல நிபுணரின் உதவியை நாடுவது அவசியம்.
கேள்வி: சாதாரண சோகத்துக்கும் மனச்சோர்வால் ஏற்படும் சோகத்துக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: சாதாரண சோகம் பெரும்பாலும் ஒரு சூழ்நிலையால் உண்டாகிறது; சில காலத்திற்குப் பிறகு குறைந்து விடும்.
ஆனால் மனச்சோர்வின் போது ஏற்படும் சோகம் நீண்ட காலம் நீடிக்கும். அது தூக்கம், உணவு பழக்கம், சமூக உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும். இதன் தாக்கம் உறவுகளிலும் தெளிவாகக் காணப்படும்.
கேள்வி: மனநோய் அல்லது மனச்சோர்வுக்கான காரணங்கள் என்ன?
பதில்: சில விஷயங்கள் நமது மரபணுக்களைச் சார்ந்தவை, சில நம்மைச் சுற்றியுள்ள சூழலைச் சார்ந்தவை. உதாரணத்திற்கு, உங்கள் குடும்பத்தில் யாருக்காவது மனச்சோர்வு போன்ற நோய் இருந்திருந்தால், அந்த நபரும் அத்தகைய நிலைக்குச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் அவர்களுக்குச் சூழல் அந்த விதத்தில் கிடைக்கிறது.
கேள்வி: மனநலம் என்றால் என்ன, அது உடல்நலத்தைப் போலவே ஏன் முக்கியமானது?
பதில்: உங்கள் மனநலம் சரியாக இல்லை என்றால், உங்களுக்கு மன நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உதாரணத்திற்கு, உங்களின் உடல்நலம் சரியாக இல்லை என்றால் நீங்கள் மீண்டும் மீண்டும் நோயுறுவீர்கள். இதேபோல்தான், உங்கள் மனநலம் பலமாக இல்லை என்றால் நீங்கள் ஒவ்வொரு விஷயத்தையும் எதிர்மறையாகப் பார்க்கத் தொடங்குவீர்கள். உங்களின் செயல்பாடுகளும் எதிர்மறையாகவே இருக்கும். எனவே மனநலனுக்கு மிகவும் முக்கியமான பங்கு உண்டு. உங்களின் மனநலம் நன்றாக இருந்தால் மட்டுமே உங்களால் மன நோய்களில் இருந்து தள்ளி இருக்க முடியும்.
கேள்வி: நல்ல மனநலனுக்காக சில ஆலோசனைகளை வழங்குங்கள்.
பதில்: தினமும் குறைந்தபட்சம் அரை மணி நேரமாவது உங்களுக்காக ஒதுக்குங்கள். உடற்பயிற்சி செய்யுங்கள், நடைபயிற்சி செய்யுங்கள், நல்ல உணவை உண்ணுங்கள், சத்தற்ற உணவுகளில் (ஜங்க் ஃபுட்) இருந்து தள்ளி இருங்கள்.
''உண்ணும் உணவைப் பொறுத்தே மனம் அமையும்" என்று சரியாகவே சொல்லப்பட்டுள்ளது. தினமும் இறைவனுக்கு நன்றி செலுத்துவது, தியானம் செய்வது, ஆழமாக மூச்சு விடுவது. இவை அனைத்தும் ஆண்டி வைரஸ் போலப் பணியாற்றுகின்றன. உங்களை தினமும் சுறுசுறுப்பாகவும் நேர்மறையாகவும் வைத்திருக்க உதவுகின்றன. இந்தச் செயல்பாடுகளால் நமது மகிழ்ச்சி ஹார்மோன்கள் சுரக்கின்றன.
கேள்வி: மனஅழுத்தம், மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆகியவற்றுக்கிடையில் என்ன வித்தியாசம்?
பதில்: மனஅழுத்தம் என்பது ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையால் ஏற்படுவது. அந்த சூழ்நிலை சரியாகிவிட்டால் மனஅழுத்தமும் குறையும்.
மனச்சோர்வு என்பது கடந்த காலத்தில் ஏற்பட்ட வலியான அனுபவங்களை மீண்டும் மீண்டும் நினைத்து வாழ்வது போன்றது.
பதற்றம் என்பது எதிர்காலத்தைப் பற்றிய அதிகமான கவலை. அது காரணத்துடனோ காரணமின்றியோ இருக்கலாம். ஆனால் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கத் தொடங்கினால் கவனம் தேவை.
கேள்வி: சமூக ஊடகங்கள் மனநலத்தை எவ்வளவு பாதிக்கின்றன?
பதில்: நீங்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ரீல்ஸ்களைப் பார்க்கும்போது, ஒரு ரீலில் வேறு உணர்ச்சி இருக்கிறது, இரண்டாவது ரீலில் வேறு உணர்ச்சி இருக்கிறது, மூன்றாவது ரீலில் வேறு உணர்ச்சி இருக்கிறது.
உங்களின் உணர்ச்சிகள் உடனுக்குடன் மாறுகின்றன, அவை சரியான முறையில் செயலாக்கப்படுவதில்லை.
மேலும், திரையில் நாம் திறக்கும் இத்தனை விஷயங்களும், அந்தத் தாவல்கள் அனைத்தும் நமது மூளையிலும் திறக்கின்றன. இதனால்தான் 'பிரைன் ஃபாஹ்' எனப்படும் மூளை தடுமாற்றம் ஏற்படுகிறது. நீங்கள் என்ன முடிவெடுப்பது என்பதே உங்களுக்கு புரிவதில்லை.
கேள்வி: குழந்தைகளிடம் மனச்சோர்வு அல்லது மனஅழுத்தம் அதிகரிப்பதற்கான காரணம் என்ன, இதில் பெற்றோர் என்ன பங்கினை வகிக்க வேண்டும்?
பதில்: முதலாவதாக, சமூக ஊடகங்களுக்குப் மிகப் பெரிய பங்கு உண்டு. இது தவிர, குழந்தைகள் ஒருவரோடு ஒருவர் தங்களை அதிகம் ஒப்பிட்டுக்கொள்கிறார்கள். பெற்றோரின் அழுத்தம் மிக அதிகமாக உள்ளது, சமூகத்தின் அழுத்தமும் உள்ளது, குழந்தைகளுக்குத் தம் மீதே எதிர்பார்ப்புகளும் மிக அதிகமாக உள்ளன.
அவர்களால் அதைச் செய்ய முடியாமல் போகும்போது எதிர்மறையை நோக்கிச் சென்றுவிடுகிறார்கள். தங்களுடனேயே எதிர்மறையாகப் பேசத் தொடங்குகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் மெல்ல மெல்ல மனச்சோர்வை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள்.
பெற்றோருக்கும் இதில் மிகப் பெரிய பங்கு உண்டு. வேலைக்குச் செல்லும் பெற்றோர் தங்களின் குழந்தைகளுக்கு அதிக நேரத்தைக் கொடுக்க முடிவதில்லை. அதனால் அவர்கள் குழந்தைகளின் ஒவ்வொரு கோரிக்கையையும் நிறைவேற்றுகிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு 'வைட்டமின்-நோ' (இல்லை என்ற சொல்) கிடைப்பதே இல்லை.
இப்போது நீங்கள் எப்பொழுதாவது அவர்களுக்கு 'இல்லை' என்று சொல்லும்போது, சுற்றிலுமிருந்து அவர்களுக்கு 'இல்லை' என்று கிடைக்கும்போதும் அவர்கள் மனச்சோர்வுக்கு ஆளாவார்கள். 10 விஷயங்களில் ஏற்றுக்கொள்ள வேண்டிய 4 விஷயங்களை ஏற்றுக்கொள்ளுங்கள். ஆனால் காரணத்தைக் கூறி குழந்தைகளுக்கு 'இல்லை' என்று சொல்லுங்கள்.
குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது களிமண் போன்றவர்கள். குயவர் எவ்வாறு களிமண்ணிற்கு வடிவம் கொடுக்கிறாரோ, அதேபோல் பெற்றோரும் குழந்தைகளுக்கு வடிவம் கொடுக்கிறார்கள். குழந்தைகள் செய்யும் எந்தவொரு நல்ல விஷயத்தையும், பெற்றோர் அவர்களின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். இதன் மூலம் நான் முயற்சி செய்தேன், அதனால் எனக்கு இந்த முடிவுக் கிடைத்தது என்று குழந்தைகளுக்குத் தோன்றும்.
அவர்களைச் சோர்வடையச் செய்யும் விஷயங்களைப் பேசாதீர்கள். உதாரணத்திற்கு 'நீ சோம்பேறி, நீ தோற்றுப்போவாய்' என்பது போல. அப்படிச் செய்வதன் மூலம் நாம் அவர்களுக்கே தீங்கு விளைவிக்கிறோம். அந்த வகையில் அவர்கள் தங்களை அப்படியே நினைக்கத் தொடங்கிவிடுவார்கள்.
நாம் குழந்தையிடம் 'நீ கெட்டவன்' என்று ஒருபோதும் சொல்லக் கூடாது, 'நீ செய்வது கெட்டது' என்று சொல்லுங்கள். இது தவிரக் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடுங்கள்.
அதாவது தடுக்காமல் மற்றும் கண்டிக்காமல், அவர்களுடன் நேரத்தைச் செலவிடுங்கள். அவர்களுக்குத் தேவையில்லாத ஆலோசனைகளை வழங்காதீர்கள். அவர்களுடன் விளையாட்டுகளை விளையாடுங்கள். இன்றைக்காலத்தில் குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் இடையே பரஸ்பர இணைப்பு குறைந்துகொண்டே வருகிறது. இந்த பிணைப்பை மீண்டும் உருவாக்குவது மிகவும் அவசியம்.
குழந்தைகளுக்குச் செவி சாயுங்கள். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் தங்களைப் புரிந்துகொள்வதில்லை என்று குழந்தைகளுக்குத் தோன்றுகிறது. குழந்தை பெற்றோரிடம் சென்று தான் ஏதோ தவறு செய்துவிட்டதாக கூறும்போது, பெற்றோர் குழந்தைகளையே திட்ட தொடங்குகிறார்கள், அப்படியிருக்கும்போது குழந்தை என்ன செய்யும். குழந்தை அடுத்த முறை சொல்வதையே நிறுத்திவிடும். எனவே குழந்தைகளுடன் அமர்ந்து அவர்களின் பேச்சைக் கேட்பது மிகவும் அவசியம்.
கேள்வி: பணிபுரியும் இடத்தில் தனது மனநலனைப் பலமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?
பதில்: பணிபுரியும் இடத்திற்கு நமது மனநலனில் மிகப்பெரிய தாக்கம் உண்டு. ஒர்க் லைஃப் பேலன்ஸ் அதாவது முதலில் உங்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் தொழில்முறை வாழ்க்கைக்கும் இடையே சமநிலையை உருவாக்கக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.
ஒரு நபர் வீட்டிற்குச் செல்லும்போது அலுவலக விஷயம் அலுவலகத்திலேயே இருக்க வேண்டும், அலுவலகத்திற்கு வரும்போது வீட்டு விஷயம் வீட்டிலேயே இருக்க வேண்டும். இந்தச் சமநிலை இருப்பது மிகவும் அவசியம்.
நீங்கள் வீட்டிற்குச் செல்லும்போது அலுவலகத்தின் அனைத்துப் பிரச்னைகளையும் கையோடு எடுத்துச் செல்வது போல் இருக்கக் கூடாது. அலுவலகத்திற்கு வரும்போது வீட்டின் பிரச்னைகளைக் கையோடு எடுத்து வருவது போல் இருக்கக் கூடாது. எனவே ஒரு எல்லையை உருவாக்குவதற்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மூச்சுப் பயிற்சிகளை உங்களின் வாழ்க்கையின் அங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். பாக்ஸ் பிரீதிங், பட்டாம்பூச்சி பிரீதிங், டீப் பிரீதிங், 4-7-8 பிரீதிங் போன்றவை. எப்போதெல்லாம் ஒரு மணி நேரமோ இரண்டு மணி நேரமோ நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் இந்த மூச்சுப் பயிற்சிகளைச் செய்யுங்கள். அது அமைதியாக இருக்க உதவுகிறது. நாம் அமைதியாக இருக்கும்போது முடிவுகளையும் சரியான முறையில் எடுக்க முடிகிறது, நமது செயல்பாடும் நன்றாக இருக்கும்.
கேள்வி: பெண்களின் மனநலம் எந்தக் காரணங்களால் பாதிக்கப்படுகிறது?
பதில்: ஒரு பெண் வேலைக்குச் சென்றிருந்தால், வீட்டில் குழந்தைகள் என்ன செய்துகொண்டிருப்பார்கள், கணவர் என்ன செய்துகொண்டிருப்பார், வீட்டிற்குச் சென்று நான் இந்த வேலையைப் பார்க்க வேண்டும், வீட்டிற்கு விருந்தினர்கள் வரவிருக்கிறார்கள் என்ற சிந்தனையே அவரது மூளையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும்.
அவ்வப்போது இடைவேளை எடுப்பது மிகவும் அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தால், அவருடைய மூளையில் ஓடிக்கொண்டிருக்கும் அதிகப்படியான சிந்தனைதான் அவருடைய உடல்நலனை மிக அதிகமாகப் பாதிக்கிறது.
வேலைக்குச் செல்லும் பெண்ணாக இல்லாவிட்டாலும் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது. இன்றைய காலத்தில் அனைவரும் படித்தவர்கள்தான், ஆனால் திருமணத்திற்குப் பிறகு குடும்பத்தைக் கவனிப்பதற்காக வேலை செய்யவில்லை. முழு நேரத்தையும் தங்களின் குழந்தைகள், கணவர் மற்றும் குடும்பத்திற்கு அளித்துவிட்டார்கள்.
இப்போது குழந்தைகள் வளர்ந்து தங்களின் வாழ்க்கையில் பிஸியாகிவிடும்போது, அந்தப் பெண் தனிமையாக உணரத் தொடங்கி மனச்சோர்வுக்குச் சென்றுவிடுகிறார். நான் பயனற்றவளாகிவிட்டேன் என்ற எதிர்மறை எண்ணம் அவர்களுக்குள் வரத் தொடங்குகிறது. அதற்குப் பிறகு அந்தப் பெண்ணின் மனச்சோர்வு மிகவும் அதிகரித்துவிடுகிறது.
கேள்வி: இல்லத்தரசிகளாக இருக்கும் பெண்கள் தங்களின் மனநலனுக்காக என்ன செய்ய வேண்டும்?
பதில்: "சுய அன்பு". உங்களுக்காக நேரத்தைச் செலவிடுங்கள். உங்களுக்குப் பிடித்தமான பொழுதுபோக்குகள் எவையோ, அவற்றை நிச்சயமாகச் செய்யுங்கள். அவை உங்களின் மகிழ்ச்சி ஹார்மோன்களைச் சுரக்கச் செய்கின்றன.
உடற்பயிற்சி, உணவு, தூக்கம் ஆகியவற்றில் முழு கவனம் செலுத்துங்கள். தயாராகி அமருங்கள். எங்கும் செல்ல வேண்டியதில்லை என்பதால் தயாராக வேண்டிய அவசியம் என்ன என்று பெண்கள் அடிக்கடி நினைக்கிறார்கள். ஆனால் நீங்கள் தயாராகும்போது, உங்களுக்கு நீங்களே முக்கியத்துவம் தருகிறீர்கள் என்ற சிக்னல் மூளைக்குச் சென்று மகிழ்ச்சி ஹார்மோனைச் சுரக்கச் செய்கிறது. இது மிகவும் அவசியம்.
உணவு, தியானம், நன்றியுணர்வு, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றை அனைவரும் செய்ய வேண்டும், அவர் இல்லத்தரசியாக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்லும் பெண்ணாக இருந்தாலும் சரி அல்லது யாராக இருந்தாலும் சரி. இவை அனைத்துமே நிவாரணிகள்தான்.
கேள்வி: பயணம் செய்வதால் மனநலனில் தாக்கம் ஏற்படுமா?
பதில்: நிச்சயமாக, தனியாகப் பயணம் செல்லுங்கள். உங்களுக்கு எது பிடிக்குமோ அதைச் செய்யுங்கள். உங்களுக்குப் பிடித்த வேலையைச் செய்யும்போது நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது உங்களைச் சுற்றிலும் நல்ல சூழலை உருவாக்குவீர்கள். நான் முன்பே கூறியது போல, நீங்கள் உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருக்கும்போது வெளியில் தானாகவே மகிழ்ச்சியான சூழல் உருவாகும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு