நகைக்கடையில் திருடிவிட்டு, உள்ளே இருந்தபடி காவல்துறைக்கு போன் செய்த திருடர்கள்

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

குஜராத்தில் வல்சார் மாவட்டம் உமார்காம் என்ற இடத்தில் ஒரு விசித்திரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் திருட்டுச் சம்பவம் விவாதப் பொருளாகியுள்ளது.

பொதுவாக காவல்துறையிடம் சிக்காமல் தப்பிக்கவே திருடர்கள் முயல்வார்கள். ஆனால், ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடந்த இந்தத் திருட்டின் போது, ​​திருடர்களே உதவி எண்ணை அழைத்து காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் குறித்த முழு விவரங்களையும் அறிய, பிபிசி குஜராத்தி இது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பெற்றதுடன், சாட்சிகள் மற்றும் அதிகாரிகளிடமும் பேசியது.

காவல்துறை அதிகாரி அளித்த தகவலின்படி, 'திருடர்கள்' காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, சுமார் 18,000 ரூபாய் மதிப்பிலான 'திருடப்பட்ட நகைகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களுடன்' அவர்கள் காவல்துறையினரால் பிடிக்கப்பட்டனர்.

என்ன நடந்தது?

சம்பவத்திற்கான சாட்சியும், புகார்தாரரின் நண்பருமான ஆகாஷ்பாய் பேசுகையில், "எங்கள் வீட்டிற்கு அருகிலுள்ள சஞ்சன் பகுதியில் 'பிஜே ஜூவல்லர்ஸ்' என்ற நகைக்கடையை என் நண்பர் மனிஷும் அவரது குடும்பத்தினரும் நடத்தி வருகின்றனர். இந்தக் கடைக்கு நேர் எதிரே வசிக்கும் ஒரு நண்பரும் அவரது சகோதரரும், 19-ஆம் தேதி நள்ளிரவில் என்னையும் என் சகோதரரையும் அழைத்து, இரண்டு திருடர்கள் எலக்ட்ரிக் கட்டர் மூலம் பூட்டை உடைத்து கடைக்குள் நுழையவும் திருடவும் முயற்சிப்பதாகத் தகவல் தெரிவித்தனர். கடைக்கு நேர் எதிரே வசிக்கும் எங்கள் நண்பர் நிகில் கபாடியும் அவரது சகோதரருமே எங்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்தனர்," என்றார்.

"சம்பவம் நடந்த தினத்தன்று இரவு வெகுநேரம் வரை நிகில் தனது மொபைல் போனைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது கட்டர் இயங்கும் சத்தம் தொடர்ந்து கேட்பதாக அவர் எங்களிடம் கூறினார். இவ்வளவு நள்ளிரவில் யாருடைய வீட்டிலோ வேலை நடப்பதாக அவர் முதலில் நினைத்துள்ளார். ஆனால், அவர்கள் கடையின் ஷட்டரில் உள்ள பூட்டுகளை மிகவும் கவனமாக வெட்டிக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார்."

"அவர்கள் கட்டர் மூலம் பூட்டைச் சிறிது நேரம் வெட்டுவதும், பின்னர் மறைந்து கொள்வதும், மீண்டும் பூட்டை வெட்டுவதுமாக இருந்துள்ளனர். ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்த எலக்ட்ரிக் கட்டரை இயக்குவதற்காக, கடைக்கு நேர் எதிரே வசிக்கும் நிகிலின் வீட்டுக்கு வெளியே இருந்த மின்சார மீட்டரிலிருந்தே அவர்கள் மின் இணைப்பை எடுத்து அதைப் பயன்படுத்தினர்."

"கட்டர் சத்தம் கேட்டு நிகில் கீழே வருவதைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர்கள் நிகிலின் வீட்டு வெளிக்கதவை மூடி வைத்திருந்தனர்."

ஆகாஷ்பாய் மேலும் கூறுகையில் "இதுபற்றி எங்களுக்குத் தெரிந்தவுடன், ஐந்து நிமிடங்களுக்குள் நாங்கள் சம்பவ இடத்திற்குச் சென்றோம். அதற்குள் திருடர்கள் உள்ளே நுழைந்திருந்தனர். உள்ளே நுழைந்த பிறகு, அவர்கள் கடையின் ஷட்டரை சற்று திறந்து வைத்திருந்தனர். நாங்கள் வந்தவுடன் முதலில் ஷட்டரை மூடினோம்; உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்குச் சென்று நடந்த சம்பவம் முழுவதையும் காவல்துறையினரிடம் தெரிவித்தோம்."

"இந்தச் சம்பவம் மொத்தம் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை நீடித்தது. அதற்குள் நேரம் அதிகாலை 3:45 மணியாகிவிட்டது. நாங்கள் தொலைபேசி மூலம் காவல்துறையைத் தொடர்புகொள்ள முயன்றோம், ஆனால் தொலைபேசி வேலை செய்யவில்லை."

"எனவே, சிறிது நேரத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்திலிருந்து காவலர்களை அழைத்து வந்தேன். அதேவேளையில், வேறு சில காவலர்களுடன் ஒரு காவல் வாகனமும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தது. அப்போதுதான், திருடர்களே கடையின் உள்ளிருந்து காவல் உதவி எண்ணிற்கு அழைத்திருந்தனர் என்பது எங்களுக்குத் தெரியவந்தது." என்றார் ஆகாஷ்பாய்.

காவல்துறை கூறியது என்ன?

இந்தச் சம்பவம் குறித்து உமார்காம் காவல் நிலைய ஆய்வாளர் எச்.டி. துவார் பிபிசி குஜராத்தியிடம் கூறுகையில், "திருடர்கள் கடையிலிருந்து காவல்துறையை அழைத்தது உண்மைதான். அதேவேளையில், உள்ளூர் மக்களும் இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்," என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "திருடர்கள் கடைக்குள் சிக்கிக்கொண்டனர், வெளியே உள்ளூர் மக்கள் பெருமளவில் கூடியிருந்தனர். தங்கள் உயிருக்கு ஆபத்து நேரிடுமோ என்று அவர்கள் அஞ்சியிருக்கலாம்; அதனால் காவல் உதவி எண்ணை அழைத்து, காவல்துறையினரை சம்பவ இடத்திற்கு வரவழைத்திருக்கலாம்," என்று தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், "நாங்கள் இது தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளோம். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது," என்றார்.

மேலும் அவர், "குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் காவல்துறையை அழைத்திருந்தாலும், அவர்களைச் சோதனையிட்ட போது அவர்களிடம் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன." என்று தெரிவித்தார்.

இந்த வழக்கு தொடர்பாக உமார்காம் காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, குற்றம் சாட்டப்பட்ட தினேஷ் பதக் மற்றும் விபின் பதக் ஆகிய இருவரும் மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள். இவர்கள் பூர்வீகமாக உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிறகு, அவர்களின் வழக்கறிஞர்களைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும்; அவர்கள் முன்வரும்போது இச்செய்தி புதுப்பிக்கப்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு