You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'24 வயதில் 104 வயது மந்திரவாதி': கமலின் வித்தியாசமான தோற்றங்கள் குறித்து பகிரும் பிரபலங்கள்
- எழுதியவர், மீனாட்சிசுந்தரம்
- பதவி, பிபிசி தமிழுக்காக
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள்
திரைத்துறையில் தனது 67வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனின் திரைப்பயணத்தில் பல்வேறு கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில கதாபாத்திரங்களுக்காக அவர் தனது தோற்றம், உடல்மொழி மற்றும் நடிப்பு முறையில் மாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினரால் கவனம் பெற்ற சில கதாபாத்திரங்கள் குறித்து அவருக்கு நெருக்கமானவர்கள் என்ன சொல்கிறார்கள் என பார்க்கலாம்.
ஸ்ருதிஹாசன்
கமல்ஹாசனின் மூத்த மகளும், நடிகையுமான ஸ்ருதிஹாசனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, ''சந்தான பாரதி இயக்கிய மகாநதி, அப்பா (கமல்) இயக்கி நடித்த விருமாண்டி, ஹேராம் மற்றும் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கிய புஷ்பக், அபூர்வ சகோதரர்கள் ஆகியவை நான் மிகவும் ரசித்த படங்கள்'' என்கிறார்.
'மாறுபட்ட தோற்றத்தில் அசத்திய கமல்'
ஏ.வி.எம் ஸ்டுடியோ குழுமத்தை சேர்ந்த அருணாகுகனிடம் கமல்ஹாசன் நடித்த படங்கள் குறித்து பிபிசி தமிழ் கேட்ட போது, ''எங்கள் ஏவிஎம். நிறுவனம் தயாரித்த களத்தூர் கண்ணம்மா, சகலகலா வல்லவன் மற்றும் அவருக்கு தேசிய விருது பெற்றுக்கொடுத்த நாயகன், மூன்றாம் பிறை படங்கள் பிடிக்கும். சமீப கால படங்களில் அவர் மாறுபட்ட தோற்றத்தில் சிறப்பாக நடித்த கல்கி 2928 ஏடி' படங்கள் என்னை கவர்ந்தவை'' என்கிறார்.
அபூர்வ சகோதரர்கள், மன்மதலீலை, 16 வயதினிலே: ராசி அழகப்பன்
கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவரும், இயக்குனர், எழுத்தாளருமான ராசி அழகப்பனிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, ''எம்ஜிஆருடன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆனந்தஜோதி முதல் சலங்கை ஒலி, அவள் அப்படித்தான், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், ஹேராம், மன்மதலீலை, பதினாறு வயதினிலே, நாயகன் ஆகிய பத்து படங்கள் மிகவும் பிடிக்கும்" என்று பட்டியலிட்டார்.
அதில் மிகவும் பிடித்தது 'அபூர்வ சகோதரர்கள்'தான். அது நான் உதவி இயக்குனராக பணியாற்றிய முதல் படம். உயரம் குறைந்த அப்புவாக அவர் நடித்தது மிகவும் தொழில்நுட்ப நயத்தோடு செய்யப்பட்ட முதல் படம். பி. சி. ஸ்ரீராம் நேர்த்தியாக அதை ஒளிப்பதிவு செய்திருப்பார். மிச்செல் கேமரா மூலம் படம் எடுக்கப்பட்ட பல தந்திரக் காட்சிகள் அதில் பேசப்பட்டன. இப்போது நினைத்தாலும் அது ஆச்சர்யமான விஷயம்" என்றார் அவர்.
"கதாபாத்திரத்துக்கு ஏற்றார்போல் தன்னை மாற்றிக்கொண்டவர் கமல்ஹாசன்" என்று அவர் கூறினார்.
திரையுலகி்ன் போக்கை மாற்றிய படங்கள்: தனஞ்செயன்
தேசிய விருது பெற்ற தயாரிப்பாளர் தனஞ்செயன் பிபிசி தமிழிடம் கூறுகையில், "கமல்ஹாசனின் 67 ஆண்டுகால திரைப்பயணத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில், பல மைல்கல் மற்றும் புதிய தடம் பதித்த திரைப்படங்கள் அமைந்துள்ளன. எனது பார்வையில் மூன்றாம் பிறை, நாயகன், தேவர் மகன், அபூர்வ சகோதரர்கள், இந்தியன் ஆகியவை முக்கியமான படங்கள். அதேபோல், 10 வெவ்வேறு கதாபாத்திரங்களில் ஒரு நடிகர் நடித்ததற்காக, அவருடைய தசாவதாரம் திரைப்படம் ஓர் அடையாளமாக என்றும் தனித்து நிற்கும்.
இந்த திரைப்படங்கள் தமிழ்த் திரையுலகின் போக்கையே மாற்றியமைத்த காவியங்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை'' என்கிறார்.
எனக்கு பிடித்த பஞ்சதந்திரம்: நடிகர் வையாபுரி
கமல்ஹாசனின் தீவிர ஆதரவாளரும், நடிகருமான வையாபுரி பிபிசி தமிழிடம் பேசுகையில், ''மைக்கேல் மதன காமராஜனை எல்லாரும் பலமுறை பார்த்திருப்பார்கள். காமேஸ்வரன் கதாபாத்திரம் இன்றைக்கும் மனதுக்குள் நிற்கும். அடுத்து அபூர்வ சகோதரர்கள். அந்த படம் வெள்ளி விழா கண்டது. அந்த அப்பு கதாபாத்திரம் மிக சிறப்பாக செய்திருப்பார். நகைச்சுவையுடன் சேர்ந்து உணர்வுபூர்வமாகவும் இருக்கும். நாகேஷுக்கும் அவருக்குமான உரையாடல் முதல் வில்லன்களோடு நடக்கும் சண்டை காட்சிகள் வரை பிரமாதமாக இருக்கும்.
அவ்வை சண்முகி படத்தை பார்ப்பவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். இன்னொரு படம் பேசும் படம். அதாவது பேசாமலேயே பேசவைத்த ஒரு படம் 'பேசும் படம்' (புஷ்பக்). படம் வந்த புதிதில் 4-5 முறை பார்த்திருக்கிறேன். அதில் வசனங்கள் இல்லை. ஆனால் ஒவ்வொரு செய்கையும் நடிப்பும் சிறப்பாக இருக்கும். பேருந்து, கழிவறை காட்சிகள் என ஏகப்பட்ட நகைச்சுவைகள், அத்துடன் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த படம்.
கடைசியாக பஞ்சதந்திரம் படத்தை காலத்தால் கடந்த படம் என சொல்லலாம். என்ன டைமிங்! ஒவ்வொருவரும் அவ்வளவு பிரமாதமாக நடித்திருப்பார்கள். கமல்ஹாசன் மிக சிறப்பாக நடித்திருப்பார்" என்றார்.
மன்மத லீலை நல்லதொரு காதல் படம்: முரளி அப்பாஸ்
இயக்குனரும், மக்கள் நீதி மய்யம் செய்தி தொடர்பாளருமான முரளி அப்பாஸிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, "கமல்ஹாசனை காதல் இளவரசன் என்று அழைப்பார்கள். அவரின் காதல் படங்களை பற்றி நான் பேசுகிறேன். நிறைய காதல் படங்கள் இருக்கின்றன. அதில் எனக்கு பிடித்தது பதினாறு வயதினிலே, இளமை ஊஞ்சாடுகிறது, வாழ்வே மாயம், மன்மத லீலை, சட்டம் என் கையில் ஆகியவை. 'காதல் மன்னன்' ஜெமினி கணேசனுக்கு பிறகு அந்தப் பேரை கமல்ஹாசன் பெற்றார். அந்த அளவுக்குக் காதலன்" என்றார்.
24 வயதில் 104 வயது மந்திரவாதியாக நடித்தார்
கமலை வைத்து மகாநதி, குணா படங்களை இயக்கியவரும் அவரின் நெருங்கிய நண்பருமான இயக்குனர் சந்தானபாரதி பிபிசி தமிழிடம் பேசுகையி்ல், "அவர் வித்தியாசமான தோற்றங்களில் நடித்த படங்களை நான் குறிப்பிடுகிறேன். தசாவதாரத்தில் அந்த பாட்டி கதாபாத்திரம் மிக பிரமாதமாக இருக்கும். அவ்வளவு உழைப்பு, அவ்வளவு ரசிப்புதன்மை இருந்தால்தான் அப்படி நடிக்க முடியும். அதேபோல், மலையாளத்தில் வின்சென்ட் இயக்கத்தில் வயநாடன் தம்பன் என்ற படத்தில் 104 வயது மந்திரவாதி தாத்தாவாக மிரட்டினார். " என்கிறார்.
"அந்த படம் 1978ஆம் ஆண்டில் வெளிவந்தது. அப்போது கமலின் வயது 24 தான். தன் வயதை விட 100 வயது முதிர்ந்தவராக அந்த படத்தில் வருவார். இந்த படங்கள் தவிர, 16 வயதினிலேயும் அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்த படங்களில் எனக்கு பிடித்தது" என்கிறார்.
கமல்ஹாசன் படங்கள், அவர் நடிப்பு என்றாலே அவரின் மாறுபட்ட தோற்றங்கள், ஒப்பனையில் அவர் செலுத்தும் அக்கறை, அந்த கதாபாத்திரமாகவே மாறுவது, புதுமை என பல விஷயங்கள்தான் நினைவுக்கு வரும். அப்படி அவர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்த படங்களில் பிரபலமான 10 படங்கள்
சப்பாணி - 16 வயதினிலே
பாரதிராஜா இயக்கிய 16 வயதினிலே திரைப்படத்தில் கமல்ஹாசன் கோபாலகிருஷ்ணன் என்ற சப்பாணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்தக் கதாபாத்திரத்துக்காக அவர் நடை, பேச்சு மற்றும் உடல்மொழியில் மாற்றங்களைச் செய்திருந்தார். அந்தக் கதாபாத்திரத்தை உருவாக்குவதில் ஜான் மில்ஸின் நடிப்பு தன்னைப் பாதித்ததாக கமல்ஹாசன் ஒரு பேட்டியில் கூறியிருப்பார்.
அப்பு - அபூர்வ சகோதரர்கள்
அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் கமல்ஹாசன் அப்பு, ராஜா, சேதுபதி உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்தார்.
இந்தத் திரைப்படம் அவரது மாறுபட்ட தோற்றங்களைப் பேசும்போது குறிப்பிடப்படும் முக்கியமான படங்களில் ஒன்றாக உள்ளது.
சண்முகி - அவ்வை சண்முகி
இந்திய சினிமாவில் பல நடிகர்கள் பெண்வேடமிட்டு நடித்திருந்தாலும் கமல்ஹாசன் அவ்வை சண்முகியில் தேர்ந்தெடுத்தது மிகவும் கடினமான கதாபாத்திரமாக இருந்தது. அதில் காதலை மட்டுமல்ல நகைச்சுவையையும் இணைத்துக் கொண்டார்
1996-ஆம் ஆண்டில் வெளியானது அவ்வை சண்முகி. ரோபின் வில்லியம்ஸ் நடித்த 'மிஸ்ஸர்ஸ் டவுட்ஃபையர்' (Mrs. Doubtfire) திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டது இப்படத்திலும் தெரியும்.
தான் குருவாக கருதும் நாடகக் கலைஞர் 'அவ்வை' டி.கே. சண்முகம் நினைவாக அந்த கதாபாத்திரத்துக்கு அவ்வை சண்முகி என்று பெயரிட்டு கிரேஸி மோகனின் நகைச்சுவை வசனங்கள் உதவியால் அனைவரையும் ரசிக்க வைத்தார். அமெரிக்காவை சேர்ந்த ஒப்பனை கலைஞர்கள் அந்த தோற்றத்தை உருவாக்க பங்காற்றினர்.
நல்லசிவம் - அன்பே சிவம்
பேருந்து விபத்தில் சிக்கி மீண்ட, ஒரு நடுத்தர வயது நல்ல சிவம் கதாபாத்திரத்தில் வருவார் கமல்ஹாசன்.
விபத்தின் தழும்புகள் அவர் முகத்தில் தெரியும். முகம் ஒருபக்கமாகச் சிதைந்து சுருங்கியிருக்கும். இதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் மூலம் பிரத்யேக 'ப்ராஸ்தடிக்' மேக்கப் பயன்படுத்தப்பட்டது.
ஊன்றுகோல் உதவியுடன் நடப்பார். ஆனால், தன்னுடைய உடல்நிலையை பரிதாபமாக வெளிப்படுத்தாமல், மிகவும் இயல்பான தன்னம்பிக்கை கொண்ட உடல்மொழியுடன் கமல் அதை வெளிப்படுத்தியிருப்பார்.
தடிமனான கண்ணாடி மற்றும் ஒப்பனைக்கு ஏற்றவாறு சற்றே வெளியே தெரிந்த செயற்கைப் பற்கள் அந்த தோற்றத்தில் பயன்படுத்தப்பட்டன. தமிழ் சினிமா ரசிகர்கள் நல்ல சிவம் தோற்றம், பேச்சு, அவர் செயலை அவ்வளவு எளிதில் மறக்க மாட்டார்கள்.
சேனாதிபதி - இந்தியன்
இந்தியன் தாத்தா என்றால் கமல்ஹாசன் நினைவுக்கு வருவார். அந்த தாத்தா தோற்றத்துக்கு பல மணி நேரம் செலவழித்து ஆளே மாறி இருப்பார். அந்த தோற்றம், அவரின் வர்மக்கலை ரசிகர்களை கவர்ந்தது.
இயக்குனர் தோட்டா தரணி இந்தியன் தாத்தா உருவத்துக்கான ஆரம்ப படத்தை வரைந்து கொடுத்து, உலகத் தரம் வாய்ந்த ஒப்பனை கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் மூலமாக கமல்ஹாசனுக்கு அந்த முக அமைப்பு கொண்டு வரப்பட்டது. தேசிய விருதையும் பெற்றுத் தந்தது.
உத்தமன் - உத்தமவில்லன்
தெய்யம் கலை வடிவம், 8-ஆம் நூற்றாண்டு கேரளாவின் பாரம்பரியக் கலை வடிம். தெய்யம் அலங்கார முறைகள் பிரத்யேக முக ஒப்பனையுடன் அந்த படத்தில் நடித்தார் கமல்ஹாசன்.
படத்தில் ஒப்பனைக்கு பதிலாக, முகத்திலேயே நேரடியாக வண்ணங்களைத் தீட்டும் கலைப் பூச்சு முறை பயன்படுத்தப்பட்டது. கேமராவில் உணர்ச்சிகள் தெளிவாக வெளிப்பட அந்த முறை பயன்படுத்தப்பட்டது.
முதலில் அமெரிக்காவிலுள்ள முன்னணி வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்தில் கமல்ஹாசனின் முகம் 3டி ஸ்கேனிங் செய்யப்பட்டு, உடைகள் மற்றும் கிரீடத்தின் அளவுகள் துல்லியமாக வடிவமைக்கப்பட்டன.
கமலின் தெய்யம் கலைஞர் தோற்றத்துக்காக தினமும் சுமார் 4 முதல் 5 மணிநேரம் வரை ஒப்பனை போடப்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பிறகு அதை அகற்றுவதற்கே 1 முதல் 2 மணி நேரம் தேவைப்பட்டது.
சுப்ரீம் யாஸ்கின் - கல்கி 2898 ஏடி
இது கமல்ஹாசனா என அடையாளம் தெரியாத அளவுக்கு கல்கி பட தோற்றம் அமைந்தது.
'சுப்ரீம் யாஸ்கின்' (Supreme Yaskin) என்ற சுருக்கங்கள் நிறைந்த, முதிய வில்லன் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்தார். இதற்காக சிறப்பு பிராஸ்தடிக் ஒப்பனை போட்டார். முகம், தலை மற்றும் உடல் முழுவதற்கும் சிறப்பு பிராஸ்தடிக் ஒப்பனை பயன்படுத்தப்பட்டது. இதில் சுருக்கங்கள், மெல்லிய தோல் அமைப்பு மற்றும் வயதான தோற்றத்தை உருவாக்க சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒப்பனை கலைஞர்கள் பணியாற்றினர். இந்தத் தோற்றத்தின் துல்லியமான அமைப்பைக் கொண்டுவர, கமல்ஹாசன் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்துக்குச் சென்று பல கட்ட சோதனைகள்' மற்றும் 3டி 'பாடி ஸ்கேனிங்' முறைகளை மேற்கொண்டார்.
தினமும் படப்பிடிப்புக்குச் செல்லும் முன் 4 முதல் 5 மணி நேரம் வரை இந்த ஒப்பனை போடுவதற்கு மட்டுமே செலவானது. படப்பிடிப்பு முடிந்ததும் அதை அகற்றுவதற்குப் பல மணி நேரம் தேவைப்பட்டது.
தவிர அந்த தோற்றத்துக்கு வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டது.
"வில்லன் பார்க்கவே பலவீனமாகவும், அதே நேரத்தில் மிகவும் சக்திவாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும்" என்ற எண்ணத்தில் கமல்ஹாசனும் தனது சொந்த யோசனைகளை வழங்கி இந்த தோற்றத்தை உருவாக்கினார் என படக்குழுவினர் கூறியிருந்தனர்.
நந்து - ஆளவந்தான்
மனப்பிறழ்வு கொண்ட 'நந்து' கதாபாத்திரத்துக்காக நடிப்பில் மட்டுமல்ல, உருவத்திலும் மாறினார் கமல்.
தலையை முற்றிலும் மொட்டையடித்துக் கொண்டார். 30 கிலோவுக்கும் அதிகமான எடையை ஏற்றினார். நந்துவின் உடல் மற்றும் முகம் முழுவதும் வரையப்பட்ட பிரத்யேக டாட்டூக்கள் அந்த காலத்தில் பேசப்பட்டன. ஹாலிவுட்டின் பிரபல ஒப்பனைக் கலைஞர் மைக்கேல் வெஸ்ட்மோர் என்பவருடன் கமல்ஹாசன் இணைந்து பணியாற்றினார்.
நந்துவின் வன்முறை மனநிலையைக் காட்ட, குவென்டின் டாரன்டீனோ பாணியிலான அனிமேஷன் / காமிக்ஸ் முறையைக் கமல்ஹாசனின் யோசனையின் பேரில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா பயன்படுத்தினார்.
வேலு நாயக்கர் - நாயகன்
தமிழ் சினிமா மட்டுமல்ல இந்தியளவில் பதிந்த முகம் வேலு நாயக்கர். அந்த வயதான தோற்றத்தில் இயல்பான நடிப்பில் தேசிய விருது பெற்றார். குறிப்பாக வயதான தோற்றத்தில் மெதுவான நடை, நடுக்கமான குரல், பிரத்யேக பற்கள், கன்னச் சுருக்கங்களுக்கு ஏற்ப்ன தன்னை மாற்றினார், இது அவரது குரலில் ஒரு முதியவருக்கே உரித்தான நடுக்கத்தை ஏற்படுத்த உழைத்தார்.
தசாவதாரம்
கமல் நடித்த படங்களில் முக்கியமான படம் தசாவதாரம். 10 தோற்றங்களில் நடித்திருப்பார். படப்பிடிப்பு தளத்தில் பார்த்த பலருக்கும் அவரை அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பார்கள். அந்த 10 கதாபாத்திரங்கள்
1. ரங்கராஜ நம்பி - 12ஆம் நூற்றாண்டு சோழர் காலத்து வைணவர்.
2. கோவிந்தராஜன் ராமசாமி - நவீன கால அமெரிக்கத் தமிழ் உயிரி தொழில்நுட்ப விஞ்ஞானி.
3. பல்ராம் நாயுடு - தெலுங்கு பேசும் 'ரா' (ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு) அதிகாரி.
4. கிருஷ்ணவேணி பாட்டி - அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்ட 95 வயதுடைய பாட்டி
5. கிறிஸ்டியன் பிளெட்சர் - அமெரிக்காவின் முன்னாள் சி.ஐ.ஏ (CIA) அதிகாரி / வில்லன்.
6. ஷிங்கன் நரஹாசி - ஜப்பானிய தற்காப்புக் கலைஞர்
7. வின்சென்ட் பூவராகன் - நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சுற்றுச்சூழல் போராளி.
8. அவதார் சிங் - தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பஞ்சாபி பாப் பாடகர்.
9. கலிஃபுல்லா கான் -7 அடி உயரமுள்ள முஸ்லிம் இளைஞர்.
10. ஜார்ஜ் டபிள்யூ புஷ் - அமெரிக்க முன்னாள் அதிபர்
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு