You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்திய போர் விமான எஞ்சின்களை தயாரிக்க ரிலையன்ஸ்-ரோல்ஸ் ராய்ஸ் கூட்டணி - என்ன காரணம்?
இந்தியாவின் போர் விமான திட்டத்திற்கான எஞ்சின்களை தயாரிக்க பிரிட்டன் நிறுவனமான ரோல்ஸ் ராய்சுடன் கூட்டு சேர இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தது.
இந்தக் கூட்டணி, மிகவும் மேம்பட்ட ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்குவதற்கான இந்தியாவுடைய திட்டத்தின் ஓர் அங்கமாக உள்ளது.
இந்த மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானத்தின் மாதிரி 2028இல் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விமானம் எதிர்காலத்தில் இந்தியாவின் வான் தாக்குதல் திறன்களில் மிக முக்கியமான பங்கை வகிக்க உள்ளது.
ராய்டர்ஸ் செய்தி முகமையின்படி, கடந்த ஆண்டு இந்தியா தனது மேம்பட்ட ஸ்டெல்த் போர் விமானங்களைத் தயாரிப்பதற்கான கட்டமைப்புக்கு ஒப்புதல் வழங்கியதோடு பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்குமாறு கோரியிருந்தது.
பாகிஸ்தானுடன் ஏற்பட்ட ராணுவ மோதலைத் தொடர்ந்து அடுத்த சில வாரங்களில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது
அமெரிக்க சார்பை குறைப்பதற்கான உத்தி
கடந்த ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி அமெரிக்க ஊடகமான புளூம்பெர்க் வெளியிட்ட செய்திப்படி, போர் விமானங்களின் எஞ்சின்களை கூட்டாக உருவாக்க குறைந்தபட்சம் வேறு மூன்று நாடுகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.
"பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் தனது திறன்களில் உள்ள இடைவெளிகளைப் போக்க அமெரிக்காவை கடந்தும் தனது பாதுகாப்புக் கூட்டணியை இந்தியா விரிவுபடுத்துகிறது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜப்பானில் இருந்தும் எஞ்சின்கள் பரிசீலிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தை உடனடியாகத் தொடங்க வேண்டுமென இந்தியா விரும்புகிறது. இந்த முன்மொழிவுகள் டிஆர்டிஓவால் மதிப்பிடப்படும்" என்று புளூம்பெர்க் செய்தி தெரிவிக்கிறது.
மேலும் அந்தச் செய்தியில், "அமெரிக்கா உடனான ஜெட் எஞ்சின்களின் கூட்டுத் தயாரிப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான பரந்துபட்ட முயற்சியின் அங்கமாக உள்ளது. இருப்பினும் முக்கிய தொழில்நுட்பங்களுக்காக அமெரிக்காவிடம் இருந்து மற்ற நாடுகளை நோக்கி இந்தியா நகர்வதை அமெரிக்கா உடனான உறவில் ஏற்பட்ட விரிசலாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக இது நம்பகமான விநியோகச் சங்கிலியை உறுதி செய்வதற்கான இந்தியாவின் முக்கியத்துவத்தைப் பிரதிபலிக்கிறது" என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின்படி உலகளவில் ஆயுதங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. சமீப ஆண்டுகளில் அமெரிக்கா மற்றும் பிரெஞ்சு பாதுகாப்பு உற்பத்தியாளர்களிடம் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உபகரணங்கள் மீதான சார்பைக் குறைக்க, இரட்டை-எஞ்சின் ஸ்டெல்த் போர் விமானங்களை உருவாக்குவதில் உள்நாட்டு நிறுவனங்களும் பங்கெடுப்பதற்கான வழிகளை இந்தியா திறந்துள்ளது. இந்த மாடல் மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானத் திட்டத்திற்காக ஒப்புதல் கொடுக்கப்பட்டிருந்தது.
"இந்தக் கூட்டணி இந்தியாவில் ஏ.எம்.சி.ஏ எஞ்சின்களின் கூட்டு வளர்ச்சிக்கான வலுவான அடித்தளத்தை அமைக்கும். துறைசார் அளவில் திட்டங்களைச் செயல்படுத்த உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் திறன்களை ஒன்றிணைக்கிறது," என்று அந்த நிறுவனங்கள் கூட்டாகத் தங்கள் அறிக்கையில் தெரிவித்தன.
ரிலையன்ஸ் அறிக்கை கூறுவது என்ன ?
வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த முன்மொழியப்பட்ட கூட்டணியில், ரிலையன்ஸ் மற்றும் ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் ஒரு பிரத்யேக விண்வெளி எரிவாயு விசையாழி வளாகத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இணைந்து எஞ்சின்களை உருவாக்கும்.
ரிலையன்ஸ் நிர்வாக இயக்குநர் (Executive Director) ஆனந்த் அம்பானி வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் உத்திசார் தன்னாட்சிக்கு முக்கிய தொழில்நுட்பங்களில் சுதந்திரமான திறன்கள் தேவைப்படுகிறது. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, மேம்பட்ட உந்துவிசைத் துறையில் அவர்களின் உலகத்தரம் வாய்ந்த நிபுணத்துவத்தையும், ரிலையன்ஸின் தொழில்நுட்பம், உற்பத்தி, அளவு மற்றும் திட்டச் செயலாக்கத் திறன்களையும் ஒருங்கிணைத்து, இந்தியாவில் ஒரு முழுமையான உள்நாட்டு விமான இயந்திர அமைப்பை உருவாக்க நாங்கள் உத்தேசித்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில், "இந்தியாவை சுயசார்பு கொண்ட நாடாக மாற்றுவதோடு, காலப்போக்கில் மேம்பட்ட உந்துவிசைத் தொழில்நுட்பங்களில் உலகளவில் போட்டியிடும் திறனைப் பெறவும் உதவும் வகையிலான ஒரு நிலையான தேசிய திறனை கூட்டாக உருவாக்க விரும்புகிறோம். சுயச்சார்பு மற்றும் வளர்ந்த இந்தியாவுக்கான பிரதமர் மோதியின் தொலைநோக்குப் பார்வைக்கு எங்களின் பங்களிப்பு இது" என்றும் குறிப்பிட்டார்.
ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டோஃபன் எர்கின்பில்கிக் கூறுகையில், "ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றும் இந்த வாய்ப்பைப் பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேம்பட்ட பொறியியல் மற்றும் இயந்திரத் தொழில்நுட்பத்தில் எங்கள் நூற்றாண்டு கால மரபையும், இந்தியத் தொழில்துறையில் அவர்களின் முன்னணி ஆதிக்கத்தையும் இந்த ஒத்துழைப்பு ஒன்றிணைக்கும்."
"இந்தியாவில் எங்களிடம் ஏற்கெனவே உள்ள கூட்டணிகள் மற்றும் திறன்களுடன் இது இணையும்போது, நாட்டில் வலுவான மற்றும் சுயச்சார்பு கொண்ட விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துச் சூழல் அமைப்பை உருவாக்குவதில் இதுவொரு முக்கிய மைல்கல்லாக அமையும்" என்றார்.
இந்த அறிவிப்பு பிரிட்டன் விமான எஞ்சின் உற்பத்தியாளரான ரோல்ஸ் ராய்ஸை பிரான்ஸின் சஃப்ரான் நிறுவனத்திற்கு எதிராக நிறுத்துகிறது. சஃப்ரான் நிறுவனம் இந்திய அரசு நிறுவனமான ஜி.டி.ஆர்.இ உடன் இணைந்து தனியாக ஒரு கூட்டு முயற்சியை முன்மொழிந்துள்ளது. ஏ.எம்.சி.ஏ போர் விமானங்களின் சமீபத்திய பதிப்புகளுக்கு அதிக உந்துவிசை கொண்ட எஞ்சின்களை உருவாக்குவதே அதன் நோக்கம்.
ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் 4.5 தலைமுறை தேஜஸ் போர் விமானங்களை உற்பத்தி செய்கிறது. எனினும் அமெரிக்க நிறுவனமான ஜெனரல் எலெக்ட்ரிக் உடன் ஏற்பட்ட விநியோகச் சங்கிலி சிக்கல்களால் ஹெச்.ஏ.எல் எஞ்சின்களை தாமதமாக ஒப்படைக்கும் சூழல் உருவானது.
ரோல்ஸ் ராய்ஸ் முன்னதாக ராணுவ உந்துவிசைத் திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. பல்வேறு விதமான பாதுகாப்பு மற்றும் சிவில் விண்வெளித் துறைப் பயன்பாடுகளுக்கான எஞ்சின்களை அந்த நிறுவனம் வழங்குகிறது.
கவனம் பெறும் தனியார் நிறுவனங்கள்
இந்த ஆண்டு மே 27ஆம் தேதி உள்நாட்டுப் போர் விமானங்கள் தயாரிப்பு பற்றி இந்தியா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. மேம்பட்ட நடுத்தர ரக போர் விமானங்களின் 5 மாதிரிகள் உருவாக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
அதற்காக டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ், எல் & டி பெல் டைனமாடிக் கன்சார்டியம் மற்றும் பாரத் ஃபோர்ஜ் - பிஇஎம்எல் டேட்டா பேட்டர்ன்ஸ் கன்சார்டியம் ஆகிய மூன்று தனியார் நிறுவனங்களை பாதுகாப்பு அமைச்சகம் தேர்வு செய்திருந்தது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்தியாவுக்கு எஃப்-35 மற்றும் சுகோய்-57 போர் விமானங்களை வழங்கியுள்ளன. அதற்குப் பிறகு உள்நாட்டில் அவற்றைத் தயாரிப்பதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளது. அரசு விமான உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்.ஏ.எல்) இதற்கு தேர்வு செய்யப்படாததும் விவாதிக்கப்படுகிறது.
முன்னதாக திட்டம் தாமதமாவது மற்றும் உரிய நேரத்தில் விமானங்களை வழங்காதது போன்றவற்றால் ஹெச்ஏஎல் மீது இந்திய விமானப்படை அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இது முக்கியப் பிரச்னையாகவும் இருந்து வந்தது.
ஹெச்ஏஎல் அதன் திறன்களையும் மிஞ்சிய பல ஒப்பந்தங்களை வைத்திருப்பதாகவும் கடந்த 20 - 40 ஆண்டுகளாக நேரத்திற்கு ஒப்படைப்பதில் உள்ள அதன் திறனும் மோசமடைந்துவிட்டதாகவும் நிபுணர்கள் கருதுகின்றனர். எனவே தனியார் துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. முதல் மாதிரியை உருவாக்க தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அரசாங்கம் 30 மாதம் காலக்கெடு வழங்கியுள்ளது.
எஞ்சின் விநியோகத்தால் ஏற்பட்ட தாமதம்
தேஜஸ் போர் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தம் பொதுத் துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டிற்கு கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தேஜஸ் விமானங்களை ஒப்படைப்பது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவைக் கடந்து சென்றது.
அதற்குக் காரணம் ஜெட் எஞ்சின்களின் விநியோகம். 'ஃபிரன்ட்லைன்' இதழில் கடந்த மாதம் வெளியான ஒரு செய்திப்படி, மொத்தம் 180 நான்காம் தலைமுறை 'தேஜஸ் எம்கே-1ஏ' ரக விமானங்களைத் தயாரிப்பதற்கான இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், முதல் ஒப்பந்தத்தின்படியான விநியோகம் இன்னும் தொடங்கப்படவில்லை.
அமெரிக்க நிறுவனமான ஜிஇ ஏரோஸ்பேஸின் எஃப் 404 ரக எஞ்சின்கள் இந்த விமானங்களில் பொருத்தப்பட்டுள்ளன. விமானத்தை வழங்குவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு ஹெச்ஏஎல் நிறுவனம் ஜிஇ ஏரோஸ்பேஸை குற்றம் சாட்டியுள்ளது.
இந்தியாவின் நான்காம் தலைமுறை போர் விமானங்களை விமானப் படையில் இணைக்கும் செயல்முறை ஏற்கெனவே தாமதங்களைச் சந்தித்து வருகிறது. நாட்டின் மிகவும் லட்சியமிக்க ஐந்தாம் தலைமுறை 'ஸ்டெல்த்' போர் விமானத் திட்டமான ஏ.ஏம்.சி.ஏ மற்றும் 4.5ஆம் தலைமுறை போர் விமானத் திட்டமான தேஜஸ் எம்கே2 குறித்தும் தற்போது இதேபோன்ற கவலைகள் எழுப்பப்படுகின்றன.
இந்த இரண்டு விமானங்களுக்கும், இந்தியா ஜிஇ ஏரோஸ்பேஸின் F414-GE-INS6 டர்போஃபேன் எஞ்சினை தேர்ந்தெடுத்துள்ளது. இந்த எஞ்சினை இணைந்து தயாரிப்பதே ஆரம்பத் திட்டமாக இருந்தது. ஆனால் விலை நிர்ணயம், உள்நாட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகள் இன்னும் ஒரு முடிவை எட்டவில்லை.
ஃபிரன்ட்லைன் இதழில் வெளியான செய்தி, நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின்போது ஜிஇ ஏரோஸ்பேஸ் நிறுவனம் விலையை கணிசமாக உயர்த்தியுள்ளதாகக் கூறுகிறது.
ஆரம்பத்தில் ஒரு எஞ்சினுக்கு சுமார் ரூ.700-800 மில்லியன் என மதிப்பிடப்பட்டிருந்த நிலையில், அந்த நிறுவனம் தற்போது மூன்று மடங்கு உயர்வுடன், சுமார் ரூ.200 கோடியை விலையாகக் குறிப்பிடுகிறது. இத்தகைய சூழலில், உள்நாட்டிலேயே போர் விமானத்திற்கான எஞ்சின்களை தயாரிப்பதில் இந்தியாவுக்கு உள்ள சவால் மேலும் அதிகரித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு